சந்தோஷ் இராவணன் இயக்கத்தில் பிரஜின், இவானா வருண் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு திரில்லர் திரைப்படம் தான் ‘அந்தரன்’. ‘அந்தரன்’ என்றால் வேடன், மறைந்திருந்து தாக்குபவன் என்று பொருள். கதைக்கு பொருத்தமான தலைப்பு என்பதை படம் பார்த்த பிறகு நிச்சயம் உணரலாம். இந்த வாரம் வெளியாகி இருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகி இவானா வருண் பள்ளியில் படிக்கும்போதே பின்னால் சுற்றும் ஒரு இளைஞனை அவரது அப்பா மிரட்டி, அடித்து வீட்டையே காலி செய்ய வைக்கிறார். பின் சில காலம் கழித்து இவானா வேலைக்கு செல்லும் வயதில் ஒரு ஆட்டோ டிரைவராக வேலை செய்யும் இளைஞரை சந்தித்து கேரக்டர் பிடித்துப் போய் அது காதலாக மாறுகிறது. அவரது அப்பா அவர்கள் காதலை எதிர்க்கிறார். ஒரு கட்டத்தில் அந்த இளைஞன் கொலை செய்யப்படுகிறான். பின் சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து வைக்க அவரது அப்பா முடிவெடுக்க, வரும் மாப்பிள்ளைகள் ஒவ்வொருவராக இறந்து போகிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க வரும் நாயகன் பிரஜின் இவை எல்லாம் கொலையா? தற்கொலையா? விபத்தா? என தீவிர விசாரணையில் ஈடுபடுகிறார். கூடவே நாயகியையும் காதலிக்கிறார். அவரை திருமணம் செய்து கொள்ள நாயகி, அவரது அப்பா ஆகியோரிடமும் விருப்பத்தை சொல்கிறார். இதன் பின் என்ன ஆனது? அந்த கொலைகளின் பின்னணி என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதே மீதிக்கதை.
நாயகன் பிரஜின். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீசை, தாடி இல்லாமல் நாம் 20 ஆண்டுகளுக்கு முன் பார்த்த அந்த இளைஞராக புத்துணர்ச்சியோடு வந்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக விசாரணை செய்வதும், காதல் செய்வதும் என அவருக்கு தீனி போடும் ஒரு கதாபாத்திரம் என நிச்சயமாக சொல்லலாம். நாயகி இவானா வருண். பிரஜினை விட அதிக நேரம் திரையில் வருபவர் இவர் தான். ஆனாலும் 2 மணி நேர படத்தையும் அவரது நடிப்பால் தாங்குகிறார். சோகம், காதல், கோபம் என அத்தன உனர்வுகளையும் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்.
அதிரன் வர்மன் ஒரு அப்பாவி இளைஞராக, நல்ல ஒரு ஜெண்டில்மேன் கதாபாத்திரத்தில் நாயகியின் காதலராக நடித்து மனதில் பதிகிறார். பத்மன், அனுபமா குமார், மு.கி.சாம்பசிவம், ரமேஷ் பாபு என மற்ற நடிகர்கள் எல்லோரும் சோபிக்கிறார்கள்.
ஹரி எஸ்.ஆர். இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பிரஜின் காதல் பாடல் துள்ளல் ரகம். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாமே ரசிக்கும்படி உள்ளன. இக்னாஷியஸ் அஸ்வின் இந்த நான் லீனியர் கதையை அழகாக தொகுத்து ரசிக்கும்படி தந்திருக்கிறார்.
இயக்குனர் சந்தோஷ் ராவணன். நல்ல ஒரு கிரைம் திரில்லர் படத்தை ஒரு தனித்துவமான அம்சத்தை முக்கிய புள்ளியாக வைத்து அட என்ன ரசிகர்களை ஆச்சர்யப்பட வைக்கிறார். கடந்த ஆண்டு லெவன் என ஒரு படம் வெளியாகி பாராட்டுக்களை குவித்தது. அந்த வகையில் இந்த படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். முதல் பாதி முழுக்க விசாரணை காட்சிகளை அடுக்கி, இடைவேளையில் ட்விஸ்ட் கொடுத்து இரண்டாம் பாதியில் ரசிகர்களை வாய் பிளக்க வைக்கிறார். இப்படி ஒரு கதை இதற்கு முன் வந்தது இல்லை என ரசிகர்கள் நிச்சயம் சொல்லப் போவது உறுதி. நல்ல ஒரு திரில்லர் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் நிச்சயம் இந்த வாரம் அந்தரன் படம் ஓடும் தியேட்டருக்கு விசிட் அடித்து விட்டு வரலாம்.

