தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்”!

BSE-யில் பட்டியலிடப்பட்ட ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில், நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதியினரின் மகளான அவந்திகா சுந்தர், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் திரைப்படமான “அட்டாக்கர்” படத்தின் துவக்க விழா சென்னையில் பட பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது.

ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படமாக உருவாகும் “அட்டாக்கர்” படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷணம் எழுதி இயக்குகிறார். இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது தனித்துவமான களத்தில் இப்படத்தை இயக்குகிறார். வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் தமிழ் சினிமாவின் முதல் திரைப்படமாக “அட்டாக்கர்” அமைகிறது. விளையாட்டின் உற்சாகத்துடன் அதன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக அடையாளங்களையும் இணைத்து இப்படம் உருவாகிறது.

இப்படத்தின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் இந்திய திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் திரைப்பட ஆய்வாளர் ஜி. தனஞ்செயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்திய வாலிபால் வீரர்களான ஜி.ஆர். வைஷ்ணவ் மற்றும் எல்.எம். மனோஜ் உள்ளிட்ட விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்று படக் குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், “எனது கிராமத்தில் வாலிபால் விளையாட்டை அறிமுகப்படுத்திய முதல் நபர் நான்தான். அந்த விளையாட்டு பல இளைஞர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது. இன்று வாலிபாலை மையமாகக் கொண்டு ஒரு தமிழ் திரைப்படம் உருவாகுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ‘அட்டாக்கர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் பேசும்போது, “தினேஷ்ராஜ் சிறந்த தயாரிப்பாளர். திட்டமிட்ட பட்ஜெட்டில் தரமான படைப்புகளை உருவாக்கும் திறமை அவருக்கு உள்ளது. அதே நேரத்தில், அவர் தயாரிக்கும் படங்கள் தரத்திலும், பிரம்மாண்டத்திலும் தனித்துவம் பெற்றவை. ‘அட்டாக்கர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் பேசுகையில், “ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் ‘அட்டாக்கர்’ எங்களுக்கு மிகவும் சிறப்பான படம். விளையாட்டு சார்ந்த திரைப்படங்களுக்கும், புதிய திறமைகளுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்பதில் பெருமை கொள்கிறோம்.

இந்தப் படத்தில் பல புதுமுக கலைஞர்களும், திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்றுகின்றனர். நடிகர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தீவிர வாலிபால் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்களில் ஒருவரான அஜித் லால் உள்ளிட்ட பல தேசிய அளவிலான வாலிபால் வீரர்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விளையாட்டின் துடிப்பையும், மனித உணர்வுகளையும், நமது மண்ணின் கலாச்சார அடையாளங்களையும் இணைக்கும் ஜனரஞ்சகமான திரைப்படமாக ‘அட்டாக்கர்’ உருவாகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் படைப்பாக இது அமையும்” என்றார்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட “அட்டாக்கர்” படத்தின் புரோமோ வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைக் குவித்து சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திரைப்படங்களில் ஒன்றாக “அட்டாக்கர்” உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *