L.S.S: Love Subscribe Share – விமர்சனம்!

JB Films சார்பில் P.ரகு தயாரிக்க, அறிமுக இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் திரைப்படம் தான் “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”. ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன் அத்வானி நடிக்க, இன்றைய சோஷியல் மீடியா இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகன் ஆதவ் கிருஷ்ணா படிப்பில் கெட்டி. அதே நேரம் சக மாணவ, மாணவிகளுக்கு கிளாஸ் எடுப்பார், எந்த உதவியானாலும் தயங்காமல் செய்பவர். அப்படி ஒரு நாள் நாயகி சிம்ரன் அத்வானியை ரவுடிகள் சிலரிடம் இருந்து ஆதவ் காப்பாற்ற, அந்த நொடியிலேயே ஆதவ் மீது காதலில் விழுகிறார். கொஞ்ச நாட்களிலேயே ஆதவ்வும் சிம்ரனை காதலிக்கிறார். சிம்ரன் தந்தையின் கண்காணிப்பில் வளர்பவர், அவரது தாய் வேறு ஒருவருடன் காசியில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் ஆதவை அழைத்துக் கொண்டு தன் அம்மாவை பார்க்க காசிக்கு கிளம்புகிறார். சென்ற இடத்தில் நாயகி காணாமல் போகிறார். அவர் கடத்தப்பட்டாரா? அவருக்கு என்ன ஆனது? அதன் பின்னணி என்ன? நாயகியை தேடிக் கண்டுபிடித்தாரா ஆதவ், அவர்கள் காதல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

நாயகன் ஆதவ் கிருஷ்ணா, நல்ல துடிப்பான இளைஞனாக, நாயகி காதலில் விழ அத்தனை அம்சங்களும் உடைய இளைஞராக தன்னை மிக சிறப்பாக முன்னிறுத்துகிறார். காதல் கதை என்றாலும் சண்டைக் காட்சிகளிலும் மாஸ் காட்டுகிறார்.

நாயகி சிம்ரன் அத்வானி. நல்ல பப்ளியான ஹீரோயின். நாயகனை விடாது காதலிக்கும், தாய் அன்புக்கு ஏங்கும் ஒரு கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை தந்திருக்கிறார். நாயகனின் அம்மாவாக வினோதினி வைத்யநாதன். நாயகன் மற்றும் அவர் தம்பியுடன் சேர்ந்து காட்சிகளை மேலும் கலகலப்பாக்குகிறார். படவா கோபி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன், மற்ற நடிகர்களும் அவரவர் பங்கை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

சதீஷ் குமார் ஒளிப்பதிவு படத்துக்கு பேருதவி புரிந்திருக்கிறது. சென்னை, காசியின் குறுகலான தெருக்கள், கங்கைக் கரை என அத்தனையும் யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அஷ்வமித்ரா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பிரமோஷன் பாடலாக வரும் ‘மச்சான் எங்கடா இருக்க’ பாடல் ஆட வைக்கிறது. பின்னணி இசையிலும் படத்துக்கு உயிரூட்டி இருக்கிறார்.

இயக்குனர் மகாலட்சுமி முருகன்,அசோக் அமிர்தராஜ் எழுதிய கதைக்கு திரைக்கதை எழுதி கமெர்சியலாக அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படியான ஒரு படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். முதல் பாதியில் கல்லூரி, காதல், காமெடி என பயணிக்கும் கதை இரண்டாம் பாதியில் இன்வெஸ்டிகேட் படமாக மாறுகிறது. காதலின் மகத்துவத்தை சொல்லும் படமாகவும் அமைந்திருக்கிறது. காசிக்கு கதை செல்வதன் முக்கியத்துவம் என்ன? காசி அல்லாமல் வேறு எங்கு வேண்டுமானாலும் அது நிகழலாமே என எண்ண வைக்கிறது. ஆனாலும் காசியை காட்டி ரசிகர்களுக்கு ஒரு அனுபவத்தை தந்திருக்கிறார் இயக்குனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *