சமீபகாலமாக முன்னணி ஹீரோக்கள் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை தழுவும் சூழலும் நிலவுகிறது. அதே நேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஒரு சில படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மிகப்பெரிய வசூல் சாதனையையும் படைக்கிறது. கடந்த ஆண்டு வெளியான லப்பர் பந்து, கடந்த மாதம் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம். அந்த வரிசையில் தற்போது ஜூன் 6ஆம் தேதி வெளியாகும் படம் “மெட்ராஸ் மேட்னி”. காளி வெங்கட் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ் ஒரு சிறப்புத் தோற்றத்தில் வந்து போகிறார். இந்த படமும் வெற்றியை பெறுமா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, எழுத்தாளரான சத்யராஜ் ஆக்ஷன், அட்வென்ச்சர், ஃபேண்டஸி கதைகள் தான் ஆர்வத்தை தரும். மிடில் கிளாஸ் குடும்பத்தை பற்றி கதை எழுதுவதில் ஒரு சுவாரஸ்யமும் இல்லை எனக் கூறுகிறார். ஆனால் அப்படிப்பட்ட காளி வெங்கட்டின் மிடில் கிளாஸ் வாழ்க்கை கதையில் என்னென்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்பதை கதையாக சொல்கிறார். அந்த கதையில் காளி வெங்கட் ஒரு ஆட்டோ டிரைவர், அவருக்கு ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஒரு மகள், பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி சேர இருக்கும் ஒரு மகன். அவர்கள் இருவரையும் தன் வறுமையிலும் எப்படி கரை சேர்க்க நினைக்கிறார் ஒரு தந்தை, அவர் படும் கஷ்டங்களும், அந்த குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ண ஓட்டங்களையும் சொல்லும் படமே இந்த மெட்ராஸ் மேட்னி.
காளி வெங்கட், கதையின் நாயகனாக சிறந்த மற்றும் யதார்த்தமான நடிப்பை தந்திருக்கிறார். மிடில் கிளாஸ் குடும்பத் தலைவராகவே வாழ்ந்திருக்கிறார். அவருக்கு மனைவியாக நடித்திருக்கும் ஷெல்லி மிகச் சிறந்த தேர்வு. ஒரு அம்மாவாக நம் மனதில் நிற்கிறார். அவரது மகளாக அப்பாவின் பாரத்தை கொஞ்சம் சுமக்கும் மகளாக ரோஷிணி ஹரிபிரியன். திருமணம் கைகூடாமல் இருக்க அந்த மனநிலையை மிக இயல்பாக பிரதிபலித்திருக்கிறார். மகனாக வரும் விஷ்வா நல்ல ஒரு தேர்வு. கவனத்தை ஈர்க்கிறார்.
இவர்களுடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதி ராமய்யா என்ற எழுத்தாளராக சத்யராஜ், பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை, என்றாலும் ஒரு கதை சொல்லியாக அழுத்தமாக கதை சொல்லி விட்டுப் போகிறார். ஜார்ஜ் மரியான், அர்ச்சனா, சாம்ஸ், மதுமிதா, கீதா கைலாசம், ராமர் என மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை நிறைவாகவே செய்திருக்கிறார்கள். ராமர் வரும் காட்சிகள் இயல்பாகவும், சிரிப்பை வரவழைக்கக் கூடிய காமெடியாகவும் அமைந்திருக்கிறது.
ஆனந்த் ஜிகே ஒளிப்பதிவு படத்துக்கு பலம். மேற்கத்திய படங்களில் பார்த்தது போன்ற ஒரு தனித்துவமான அழகை கொடுத்துள்ளது. பாலசாரங்கன் இசையில் வடிவேலு பாடிய என்னடா பொழப்பு இது பாடல் வெளியில் வந்த பின்பும் மனதில் ஒலிக்கிறது. பின்னணி இசையும் படத்துக்கு ஏற்றவாறு தந்திருக்கிறார்.
அறிமுக இயக்குனர் கார்த்திகேயன் மணி. எளிய மக்களின் வாழ்வியலை மிக நெருக்கமான பதிவு செய்திருக்கிறார். மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருக்கும் சுவாரஸ்யம், சந்தோஷம், காதல், அன்பு, கோபம், அழுகை என அத்தனையையும் மிக இயல்பாக திரையில் வடித்திருக்கிறார். நல்ல இதயத்தை தொடும் ஒரு உணர்வுப்பூர்வமான படமாக படத்தை கொடுத்திருக்கிறார். அடுத்தடுத்து நல்ல நல்ல படங்களை தமிழ் சினிமாவில் கொடுக்க வாழ்த்துக்கள்.