மஹா மூவீஸ் தயாரிப்பில், அனில் கட்ஸ் இயக்கத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘சபரி’. கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி என பலர் நடித்துள்ள இந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கிறது.
படத்தின் கதைப்படி, சின்ன வயதிலேயே தன் தாயை பறிகொடுத்த வரலக்ஷ்மி சரத்குமார் போதுமான அன்பு கிடைக்காமல் வளர்கிறார். தாய் இறந்த பின் வீட்டுக்கு வரும் சித்தியையும் பிடிக்காமல் போகிறது. ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி கணேஷ் வெங்கட் ராமை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறார். மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்த வரலக்ஷ்மியின் வாழ்வில் கணேஷ் தன் முதலாளியின் மகள் உடன் நெருக்கமாக இருப்பது தெரிய வர, அவரை விட்டு பிரிகிறார். தன் மகள் தன்னுடன் தான் இருக்க வேண்டும் கோர்ட்டிலும் தீர்ப்பை பெறுகிறார். இந்த நிலையில் ஈகோவால் வரலக்ஷ்மியின் அமைதியை குலைக்க நினைக்கும் கணேஷ், அந்த குழந்தை நமக்கு பிறந்தவள் இல்லை என்ற உண்மையை உடைக்கிறார். இதற்கிடையில் அந்த குழந்தையின் நிஜ தந்தையான மைம் கோபி குழந்தையை வரலக்ஷ்மியிடம் இருந்து பிரித்து அழைத்து போக முயற்சிக்கிறார். இதை எல்லாம் சமாளித்து தன் மகளை மீட்டாரா வரலக்ஷ்மி? என்பதே மீதிக்கதை.
நாயகியாக வரலட்சுமி சரத்குமார், எமோஷனல் காட்சிகளிலும் சரி, அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் சரி, அசத்தியுள்ளார். குழந்தையை காணாமல் பறிதவிக்கும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். தனி ஒரு பெண்ணாக தன் மகளை காக்க அவர் எடுக்கும் முயற்சிகள் அபாரம். கணேஷ் வெங்கட்ராம் வில்லத்தனமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மனைவிக்கு உண்மையாக இல்லாத அதே சமயம் தான் என்ற ஈகோவால், தான் தான் எதிலும் ஜெயிக்கணும் என அவர் செய்யும் அவரின் குரூர குணம் உண்மையில் அந்த கதாபத்திரத்தை வெறுக்க வைக்கிறது. அது அந்த கதாபாத்திரத்துக்கு கிடைத்த வெற்றி. வரலக்ஷ்மியின் நண்பராக, உற்ற நேரத்தில் உடன் இருக்கும் ஷஷாங்க் கவனிக்க வைக்கிறார். மைம் கோபி வந்து செல்லும் காட்சிகள் திகில் ரகம். வரலக்ஷ்மியின் மகள் பேபி நிவேக்ஷா மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி, ‘விவா’ ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி, அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி, பேபி கிருத்திகா ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ராகுல் ஒளிப்பவில் சிட்டி மற்றும் மலைப்பிரதேசம் என அனைத்தையும் சிறப்பாகவே காட்சிப்படுத்தியுள்ளார். கோபி சுந்தர் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையில் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தர்மேந்திர ககரலா எடிட்டிங்கில் இன்னும் சில நிமிடங்களை எடிட் செய்திருக்கலாம், படத்தின் நீளம் சில நேரத்தில் அயற்சியை கொடுக்கவும் தவறவில்லை.
அறிமுக இயக்குநர் அனில் கட்ஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை அவரே கையாண்டுள்ளார். மைம் கோபி சம்பந்தப்பட்ட காட்சிகளில் சுவாரஸ்யத்தை கூட்டவும், திருப்பங்களை கொடுக்கவும் எழுதப்பட்ட திரைக்கதை, பார்வையாளர்களுக்கு ஒரே சம்பவங்களை தொடர்ந்து பார்க்கும் உணர்வை தருகிறது. நேர்க்கோட்டில் சாதாரணமாகவே சொல்லியிருக்கக் கூடிய கதையை சுவாரஸ்யத்துக்காக சைக்கலாஜிக்கல் விஷயங்கள் என்ற விதத்தில் கொண்டு போய் நம்மையும் சோர்வடைய செய்கிறார்கள். அம்மா – மகள் (வரலக்ஷ்மி), அம்மா (வரலக்ஷ்மி) – மகள் என்ற உறவை காட்டிய விதம் சிறப்பு. சமீபத்திய வரலக்ஷ்மியின் திரைப்படங்களை தாண்டி அவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கித்தரும் இந்த சபரி.