ஏஸ் (ACE) – விமர்சனம்!

மஹாராஜா, விடுதலை 2 படங்களுக்குப் பிறகு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஏஸ் (Ace). ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை இயக்கிய ஆறுமுக குமார் தயாரித்து இயக்கியுள்ளார். மலேசியாவை கதைக்களமாக கொண்டு உருவாகியிருக்கும் கமெர்சியல் படமான இந்த படத்தில் சமீபத்திய கன்னட சென்சேஷன் ருக்மிணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு படம் முழுக்க வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, தன் பழைய பழக்கங்களை எல்லாம் விட்டு ஒரு நல்ல மனிதனாக வாழப்போகிறேன் என சொல்லி விட்டு மலேசியா செல்லும் விஜய் சேதுபதி யதேச்சையாக யோகி பாபு அறிமுகம் கிடைக்க, அவர் இடத்தில் தங்குகிறார். அங்கு தங்கி கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி நாயகி ருக்மிணியை சந்தித்து அவர் மீது காதல் கொள்கிறார். ருக்மிணிக்கு உதவுவதற்காக வில்லன் அவினாஷ் நடத்தும் போக்கர் சூதாட்ட விளையாட்டில் கலந்து கொண்டு, அதன் மூலம் பெரும் பணம் சம்பாதிக்கிறார், அதை கவனித்த அவினாஷ் விஜய் சேதுபதியுடன் விளையாடி அவரை ஏமாற்றி பெரும் கடனாளியாக மாற்றுகிறார். ஒரு வாரத்தில் பணத்தை தர வேண்டிய சூழல், நாயகியின் பிரச்சினைக்காக ஒரு பெரும் தொகையை கொடுக்க வேண்டிய சூழல்.. இந்த நிலையில் ஒரு பெரிய வங்கியின் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார் விஜய் சேதுபதி. அந்த பணத்தை கொள்ளையடித்தாரா? அவர்களுடைய பிரச்சினைகள் தீர்ந்தனவா? விஜய் சேதுபதி உண்மையில் யார்? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது தான் ஏஸ் படத்தின் மீதிக்கதை.

விஜய் சேதுபதி. அவருடைய ஸ்டைலில், அவருக்கேயுரிய பாடி லாங்குவேஜில் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்றுவதை தன் நடிப்பில் அநாயசமாக செய்து விட்டுப் போகிறார். காதலும் கடந்து போகும் படத்தில் பார்த்ததை போன்ற ஒரு கூலான விஜய் சேதுபதி படம் முழுக்க இருக்கிறார். யோகி பாபு உடனான காமெடி காட்சிகள் எல்லாமே சிரிக்க வைக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் முழுக்க பயணித்த உணர்வை தருகிறார் யோகி பாபு. அவர் வரும் காமெடி காட்சிகள் நிச்சயம் குடும்ப ரசிகர்களை கொண்டாட வைக்கும்.

நாயகியாக ருக்மிணி வசந்த். தமிழில் முதல் படம். மிகச் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். பாடல் காட்சிகளில் அவ்வளவு அழகு. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்பதற்குரிய எல்லா அம்சங்களும் உள்ளன. பப்லு பிரித்விராஜ் ஒரு மோசமான போலீஸ் அதிகாரியாக வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். கேஜிஎஃப் அவினாஷ் முரட்டு வில்லனாக மிரட்டுகிறார். திவ்யா பிள்ளை, ராஜ்குமார், ஒரு காட்சியில் வந்து போகும் ரமேஷ் திலக் என அத்தனை பேருமே நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.

கரன் பி ராவத்தின் ஒளிப்பதிவு மலேசியாவின் அழகான பக்கங்களையும், இயல்பான பக்களையும் மிக அழகாக காட்டியிருக்கிறது. இது வரை பார்க்காத பல இடங்களை திரையில் காட்டி ரசிக்க வைத்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அருமை, குறிப்பாக உருகுதே பாடல் கேட்பதற்கு இனிமை, அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பு. சாம்.சி.எஸ் பின்னணி இசையும் படத்தின் டெம்போவை ஏற்றியிருக்கிறது.

இயக்குனர் ஆறுமுக குமார். ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் வித்தியாசமான கான்செப்டை கையாண்டவர் இந்த முறை கமெர்சியல் ரூட்டில் இறங்கி அடிக்க முடிவெடுத்து நல்ல கலர்ஃபுல்லான, காதல், காமெடி,ஆக்ஷன் கலந்து இந்த படத்தை தந்திருக்கிறார். விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் யார் இவர் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இருக்கிறது படம் முழுவதும். முதல் பாதியில் மிக விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் வழக்கான டெம்ப்ளேட்டில் பயணிக்க துவங்குகிறது. கிளைமாக்ஸை மனதில் வைத்து இரண்டாம் பாதி எழுதப்பட்டிருக்கிறது, அதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான திரைக்கதையாக தந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நல்ல படமாகவே வந்திருக்கும். ஆனாலும் விஜய் சேதுபதி, ருக்மிணி காதல் காட்சிகள், யோகி பாபு காமெடி காட்சிகள், அவிஷான் உடன் மோதும் அந்த சூதாட்ட விடுதி காட்சிகள் என கண்டிப்பாக பார்க்கலாம் என சொல்லும் படமாகவே தந்திருக்கிறார் இயக்குனர் ஆறுமுக குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *