ராட்சசன் வரிசையிலான மிகச் சிறப்பான சீரியல் கில்லர் படங்கள் தமிழ் சினிமாவில் மிக மிகக் குறைவு. ஒரு சில படங்களே வெளிவந்துள்ளன, அதில் சில படங்கள் மட்டுமே காலத்தை கடந்தும் அந்த ஜானருக்கான அடையாளமாக நிற்கின்றன. தற்போது அந்த ஜானரில் வெளியாகியுள்ள ஒரு படம் தான் “லெவன்”. பேசப்படும் படமாக அமையுமா? இல்லையா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சென்னையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, இறந்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கவே முடியாதபடி, அந்த உடலை எரித்து அதை பொது இடங்களில் போட்டு தொடர் கொலைகளை நிகழ்த்துகிறான் ஒரு கொலையாளி. அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியும் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கொலைகளும் தொடர்ந்து நடக்க, அந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு நவீன் சந்திராவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவரும் ஒன்றன் பின் ஒன்றாக முடிச்சுகளை அவிழ்த்து கொலையாளியை நெருங்குகிறார். ஆனால் அவன் எப்படி இருப்பான், எங்கு இருக்கிறான்? என்பதை கண்டுபிடிப்பதற்குள் அடுத்தடுத்த கொலைகளும் அரங்கேற அந்த வழக்கை முடித்து வைத்தாரா நவீன் சந்திரா? என்பதை அடுத்தடுத்த திடுக்கிடும் திருப்பங்களோடும் சொல்வதே மீதிக்கதை.
நாயகன் நவீன் சந்திரா. படம் முழுக்க கொஞ்சமும் சிரிக்காத, மிகவும் இறுக்கமான மனநிலையுடன், வழக்கை பற்றிய சிந்தனையுடன் சுற்றும் அதிகாரியாக கனகச்சிதமாக பொருந்திப் போகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். நாயகியாக ரியா ஹரி. வழக்கமான ஹீரோயின் இலக்கணங்களை உடைத்து கதைக்குள் பயணிக்கும் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.
ஃபிளாஷ்பேக் காட்சிகளில் வரும் பள்ளியின் தலைமை ஆசிரியையாக அபிராமி அவரது கதாபாத்திரம் மற்றும் தேர்ந்த நடிப்பால் நம் மனதில் பதிகிறார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் திலீபன், ரித்விகா, அர்ஜெய் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் மனதில் பதியும் வகையில் ஸ்கோர் செய்கிறார்கள்.
டி.இமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கொஞ்சம் திரில்லர் மூடை நமக்குள் கடத்துகிறது. கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவில் இரவு காட்சிகளை அனைத்தும் நேர்த்தியாக இருக்கிறது. ஒளிப்பதிவு படத்துக்கு பலமாக அமைந்துள்ளது.
லோகேஷ் அஜில்ஸ் தன் கதை, திரைக்கதை மூலம் படத்தை நகர்த்தியிருக்கும் விதம் அருமை. தொடர் கொலைகள் அதை துப்பறியும் நாயகன் என மிக நன்றாகவே படத்தை கொண்டு செல்கிறார். கொலை செய்யப்படும் நபர்கள் யார்? மற்றும் எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள்? என்ற கேள்விகள் நம் ஆர்வத்தை தூண்டுகிறது. ஆனால் அந்த ஒரு புகைப்படத்தை பார்த்த பின் அந்த சஸ்பென்ஸ் உடைந்து விடுகிறது. ஆனாலும் அந்த கொலையாளி இப்போது எங்கு இருக்கிறான், அடுத்து என்ன செய்யப் போகிறான்? என்பது போன்ற திரைக்கதை மூலம் இறுதி வரை நம்மை சீட்டில் உட்கார வைத்து வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனத் லோகேஷ் அஜில்ஸ்.