ஃபோக்கஸ் சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்க மாநகரம், வானம் போன்ற ஹைப்பர்லிங் திரைக்கதையில் உருவாகியிருக்கும் கிரைம் டிராமா படம் தான் “வல்லவன் வகுத்ததடா”. முழுக்க புதுமுகங்களாக நடித்திருக்கும் இந்த படம் ரசிகர்களை கவரும் அம்சங்களை கொண்டிருந்ததா? இன்னொரு சிறந்த ஹைப்பர்லிங் படமாக அமைந்ததா? பார்க்கலாம்.
சிம்பு நடித்த வானம் படத்தை போலவே இந்த படத்தின் ஒவ்வொரு கதையிலும் வரும் அனைத்து முதன்மை கதாபார்த்திரங்களுக்கு பணத்தேவையோ, அல்லது பணத்தின் மீதான பேராசையோ இருக்கிறது. சிலர் நல்ல நோக்கத்துக்காக, தேவைக்காக பணத்தை தேடி அலைகிறார்கள். சிலர் பணத்தை எந்த வழியிலாவது சேர்த்து பெரும் செல்வத்தை குவிக்க வேண்டும் என அலைகிறார்கள். இவர்கள் அனைவரது வாழ்க்கையும் மற்றவர்களுடன் பின்னிப் பிணைந்தால், அது தான் இந்த வல்லவன் வகுத்ததடா.
கதைப்படி டாக்ஸி ட்ரைவராக வரும் ஸ்வாதி, இளைஞர்களை ஏமாற்றி பணம் சேர்க்கும் அனன்யா, காவல்துறை அதிகாரத்தை பயன்படுத்தி பணம் சேர்க்கும் ராஜேஷ் பாலச்சந்திரன், உடல் உறுப்புகளை எழுதி வாங்கிக் கொண்டு வட்டிக்கு பணம் தரும் விக்ரமாதித்யா, கூட்டாக திருட்டுத் தொழிலில் ஈடுபடும் நண்பர்கள் தேஜ் சரண்ராஜ், ரெஜின் ரோஸ் இவர்கள் தான் முதன்மை கதாபாத்திரங்கள்.
இதில் ஒருவர் இன்னொருவரிடம் ஏதாவது ஒரு வகையில் மாட்டிக் கொண்டு முழிப்பவர்கள் தான். அனன்யா மற்றும் தேஜ், ரெஜின் ஆகியோர் இன்ஸ்பெக்டர் ராஜேஷிடமும், அவர்களை மிரட்டும் ராஜேஷூம், டாக்ஸி ட்ரைவர் ஸ்வாதியும் வட்டிக்கார ஆதித்யாவிடமும் மாட்டிக் கொண்டு அதில் இருந்து எப்படி தப்பிப்பது என விழி பிதுங்கி நிற்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் எந்த தவறும் செய்யாத அப்பாவியான ஸ்வாதிக்கு மருத்துவமனையில் உயிருக்கு போராடும் அப்பாவை காப்பாற்ற வேண்டிய சூழல் வேறு. ஸ்வாதி அப்பாவை காப்பாற்றினாரா? மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்பதே மீதிக்கதை.
தன் அழகை வைத்து திருமண ஆசை காட்டி ஏமாற்றும் கதாபாத்திரத்தில் அனன்யா கனகச்சிதம். பலரை ஏமாற்றி சம்பாதித்த பணத்தை என்ன செய்தார் என்பதில் தெளிவில்லை, எதற்காக இப்படி சம்பாதிக்கிறார் என்பதற்கும் காரணமில்லை.
இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலச்சந்திரன் தன் நயவஞ்சக நடிப்பால் கவர்கிறார். படத்தில் வரும் கொஞ்ச நேரத்திலேயே ஈஸியாக பல லட்சங்களை கறந்து விடுகிறார். ஆனாலும் கடன் அடைக்க முடியவில்லை என்பதோடு கந்து வட்டி தாதாவிடம் கடன் வாங்கும் அளவுக்கு என்ன தேவை என்பதிலும் தெளிவில்லை.
உடல் உறுப்புகளை அடமானமாக எழுதி வாங்கும் தைரியமான ஃபைனான்சியர்ஸ் கதையில் கூட பார்த்திரா கதாபாத்திரம். இவரும் சேர்த்த பணம் பற்றிய தெளிவில்லை, கடைசியில் இரண்டு கோடியை ஒரு சாதா வண்டியில் மூட்டைகளில் கட்டி அனுப்புகிறார்கள். ஒரு சாதா அட்டைப்பெட்டியில் அடங்கும் பணத்தை 2 மூட்டைகளில் கட்டி அனுப்புவது ஏனோ. யாருக்கு அனுப்புகிறார் என்பதும் ஓபன் எண்ட்.
சின்ன சின்ன திருட்டுகளை செய்யும் தேஜ் சரண்ராஜ், ரெஜின் ரோசின் நட்பும் அரைகுறை. சக்கர-யின் உண்மையான பெயர் கூட தெரியாமல் கடைசி வரை ஓடுகிறது நட்பு. யாருக்காக, எதற்காக, என்ன தான் நோக்கம் என்பது கடைசி வரை புரியாத புதிர்.
கடைசியாக நாயகி ஸ்வாதி மீனாட்சி, தன் கஷ்டத்திலும் அடுத்தவருக்கு உதவும் ஒரு நல்ல மனதுள்ள நாயகி. அவருக்கு பெரும் கஷ்டம், வேலை போகிறது, அப்பா உயிருக்கு போராட்டம், உதவி செய்யவும் யாரும் இல்லாத சூழல். அவரது கதாபாத்திர படைப்பு ஓகே. அவருக்கு நல்லது நடக்கட்டும் என நம்மை நினைக்க வைக்கிறார் இயக்குனர்.
கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு ஓகே, கிடைத்த விஷயங்களையும், லொகேஷன்களையும் நன்றாகவே உபயோகப்படுத்தியுள்ளார். சகிஷ்னா சேவியரின் இசை சுமார். இயக்குனர் விநாயக் துரையே தான் படத்தின் தயாரிப்பாளரும், முடிந்தவரை ஒரு பார்க்கும்படியான விஷூவலை கொடுக்க பணத்தை செலவு செய்திருக்கிறார். ஆனாலும் மேக்கிங்கில் இன்னும் கொஞ்சம் ஸ்வாரசியத்தை கூட்டியிருக்கலாம் என்பது நம் கருத்து. படத்தில் நிறைய லாஜிக் குறைகள், நிறைய தெளிவின்மை இருப்பது மைனஸ். அதையெல்லாம் சரி செய்திருந்தால் சிறப்பான ஒரு படமாகவே வந்திருக்கும் இந்த வல்லவன் வகுத்ததடா.