விஜய்யின் The GOAT – திரை விமர்சனம்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்”. விஜய் அரசியல் அறிவிப்பால் அவர் நடிக்கப் போகும் கடைசிக்கு முந்தைய படம் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு கூடியது என்பது தான் உண்மை. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைல, மீனாட்சி செளத்ரி, யோகிபாபு, அஜ்மல், பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். டீ-ஏஜிங் என்று சொல்லப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கும் படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறதா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, 2008-ல், கென்யாவில் ஒரு ஓடும் ரயிலில் ஓமர் என்ற தீவிரவாதியை தேடி செல்கிறார்கள் விஜய் மற்றும் அவரது குழுவினர். சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படையான ‘SAT Squad’ யுரேனியத்தையும் தீவிரவாதி ஓமரையும் பத்திரமாகக் கொண்டு வருவதே இந்த குழுவின் முக்கிய பணி. அப்போது அங்கு மோகனும் இருப்பது தெரிகிறது. அப்போது ரயில் வெடித்து சிதறுகிறது. அதில் மோகன் இறந்து விடுகிறார். விஜய் அடிக்கடி தன்னிடம் பொய் சொல்கிறார், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்குமோ என சந்தேகப்படுகிறார் மனைவி சினேகா. அவரை கன்வின்ஸ் செய்ய தாய்லாந்து மிஷனுக்கு போகும் விஜய் குடும்பத்துடன் கிளம்புகிறார். அப்போது ஒரு மர்ம கும்பலால் தாக்கப்படுகிறார். பிரசவ வலியில் இருக்கும் காந்தியின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அந்த நேரத்தில் மகன் ஜீவன் கடத்தப்பட்டு, கொல்லப்படுகிறான். காந்தி தனது மகனை இழக்கிறார், அதனால் குடும்பத்தையும் இழக்கிறார். ஒரு கட்டத்தில் இறந்து விட்டதாக நினைத்த தன் மகன் ஜீவனை, காந்தி ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில் சந்திக்க நேர்கிறது. அதன் பிறகு என்ன ஆனது? குடும்பம் ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

படத்தின் முக்கியமான பிளஸ் விஜய். காந்தி, ஜீவன் என இரண்டு கதாபாத்திரங்களில் தான் ஒரு நல்ல நடிகன் என்பதையும் இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார். நிதானமான காந்தி, துடிதுடிப்பான ஜீவன் என அநாயசமாக ஸ்கோர் செய்கிறார். அவரது நடிப்பில் முந்தைய சில படங்களின் சாயல் தெரிந்தாலும் காட்சிகள் அதை மறக்கடிக்கின்றன. இளம் விஜய்யை உங்களால் ரசிக்காமல் இருக்க முடியாது. அதற்கான டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை மிகச் சிறப்பாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆக்ஷன், நடிப்பு, நடனம், நக்கலான தொணி, வில்லத்தனம் என அனைத்து தரப்பிலும் குறையே வைக்காத அளவுக்கு நடிகராகவே பரிணமிக்கிறார்.

விஜய்யின் நண்பர்களாக வரும் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் என ஒவ்வொருவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். விசில் போடு பாடலில் விஜய்யுடன் இவர்கள் சேர்ந்து ஆடுவதை பார்ப்பதே ஆனந்தமான தருணம். பிரஷாந்துக்கு நடிக்கவும் கொஞ்சம் கூடுதல் வாய்ப்பு. மோகன் பழிவாங்கும் வெறியுடன் சுற்றும் ஒரு வில்லன் கதாபாத்திரம். சாதுவான ஹீரோவாக 80களில் பார்த்துப் பழகிய அவரை நாம் குரூர எண்ணம் கொண்ட வில்லனாக பார்க்க முடியவில்லை. சினேகா முக்கியமான காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். லைலாவுக்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லை என்றாலும் வந்து போகிறார். நாயகி மீனாக்ஷி சௌத்ரிக்கும் பாடல்களில் வந்து போகும் ஒரு கதாபாத்திரம் தான். அதையும் தாண்டி ஒரு முக்கியமான காட்சியில் மனதில் நிற்கிறார். விஜய்யின் அதிகாரியாக ஜெய்ராம் கூடுதல் பலம். மற்றபடி வெங்கட் பிரபுவின் கேங்க் என்று சொல்லப்படும் பல நடிகர்கள் படம் முழுக்க ஆங்காங்கே வந்து போகிறார்கள். வைபவ், பிரேம்ஜி குறிப்பிடும்படியான ரோலில் நடித்தும் இருக்கிறார்கள்.

சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம். ஹாலிவுட் ஆக்ஷன் படங்களை போல ஒரு விஷூவலை கொடுக்க மெனக்கெட்டிருக்கிறார். அதை திரையில் தர பல நாடுகளில் படமாக்கி இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது என்பதை சொல்லியாக வேண்டும்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் தியேட்டரில் ரசிகர்களுடன் பார்க்கும்போது நன்றாகவே இருக்கிறது. குறிப்பாக விசில் போடு தியேட்டர் வெர்சன் கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல். மட்ட பாடல் திரிஷாவால் கூடுதல் ஸ்பெஷல். பின்னணி இசையில் தீம் மியூசிக் சூப்பர், மற்ற இடங்களில் ஓகே ரகம்.

வெங்கட் பிரபு பெரிய ஹீரோக்களை வைத்து ஹிட்டும் தந்திருக்கிறார், ஃபிளாப்பும் தந்திருக்கிறார். அந்த வகையில் இந்த கோட் எந்த லீஸ்டில் சேர்ந்திருக்கிறது என்பதை கடைசி வரியில் பார்க்கலாம். அதற்கு முன் இந்த படத்தை ரசிகர்களுக்கு ஒரு ஃபுல் மீல்ஸாக தந்து விட வேண்டும் என்ற அவரின் முயற்சிகளை பற்றி சொல்லியே தீர வேண்டும். விஜயகாந்த் என்ட்ரி முதல் சிவகார்த்திகேயன் துப்பாக்கி காட்சி வரை எல்லாமே தியேட்டரில் சரவெடி. தோனி ரெஃபரன்ஸ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீனி. இப்படி படம் முழுக்க கேமியோ, ரெஃபரன்ஸ் என தூவி வைத்திருக்கிறார். யூகிக்கக் கூடிய திரைக்கதை என்றாலும் சலிப்பை வர வைக்காமல் நகர்த்தி கொண்டு போயிருக்கிறார். தியேட்டரில் ரசிகர்களுடன், குடும்பத்துடன் ஜாலியாக பார்த்து விட்டு வரக்கூடிய ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கிறது இந்த கோட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *