இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, அறை எண் 305-ல் கடவுள், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் போன்ற வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களை நையாண்டியாக கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்த சிம்புதேவன் இயக்கியுள்ள சமீபத்திய படம் தான் போட். யோகிபாபு, கௌரி கிஷன், எம்எஸ் பாஸ்கர், சாம்ஸ், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு போட்-டில் நடக்கும் கதையை மையமாக கொண்ட படம். ரசிகர்களை ரசிக்க வைத்ததா? வெற்றிப் படமாக அமையுமா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, 1943ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடந்து வந்த காலகட்டத்தில் மெட்ராஸ் மாகாணத்தில் ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்து நேரம், ஒருபுறம், சுதந்திரப் போராட்டம், இன்னொரு புறம் ஜப்பான் குண்டு போடப் போகிறது என்ற பீதியில் மக்கள். மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் இயங்காததால் பொதுவெளியில் முகாம் நடத்தி வருகிறார்கள். அந்த நேரத்தில் ஜப்பானிய விமானப்படை குண்டு போடப் போகிறது என ஒரு தகவல் காட்டுத்தீயாக பரவ கடற்கரையில் இருந்து தனது பாட்டியுடன் யோகி பாபு படகில் ஏறி கடலுக்குள் சென்றால் தப்பித்து விடலாம் என கிளம்புகிறார். அவருடன் மேலும் சிலரும் அந்த படகில் ஏறிக் கொள்கிறார்கள். கௌரி கிஷன், எம்எஸ் பாஸ்கர், சாம்ஸ், சின்னி ஜெயந்த், ஷாரா, கர்ப்பிணியான மதுமிதா, அவரது 12 வயது மகன் ஆகியோருடன் நடுக்கடலுக்கு செல்கிறார்கள். அங்கு விபத்துக்குள்ளான ஒரு படகில் இருந்து ஆங்கிலேய அதிகாரி ஒருவரும் படகில் ஏறிக் கொள்கிறார். படகு அத்தனை பாரத்தை தாங்காது, யாராவது மூன்று பேர் இறங்கியே ஆக வேண்டிய நிலை. அப்போது நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக்கதை.
யோகிபாபு குமரன் என்ற படகு ஓட்டும் படகோட்டி கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாகவே தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். எம்.எஸ். பாஸ்கர் யார் என்ற அந்த காட்சி நன்றாகவே இருந்தது. அந்த காட்சியில் ஸ்கோர் செய்கிறார். நாயகி கெளரி கிஷன், சாம்ஸ், ஷாரா, ஆங்கிலேய அதிகாரியாக நடித்துள்ள ஜெஸ்ஸி ஃபாக்ஸ் ஆலன், சின்னி ஜெயந்த், மதுமிதா மற்றும் லீலா கொலப்புள்ளி என ஒவ்வொருவருமே பொருத்தமான தேர்வு. அவர்களும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
ஜிப்ரான் பின்னணி இசை படத்துக்கு பலம், கௌரி கிஷன் பாடும் அந்த கானா பாடலும் அருமை. ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் ஆடிக் கொண்டே இருக்கும் அந்த படகின் மாந்தர்களை படம் பிடித்த விதம் அருமை. 1943 காலகட்டத்தை காட்டிய விதமும் நன்றாகவே இருந்தது. கலை இயக்குனர் மற்றும் ஆடை வடிவமைப்பாளரையும் பாரட்டியே தீர வேண்டும்.
சிம்புதேவன் இப்படி ஒரு சவாலான களத்தை கையாண்டிருக்கும் அவரின் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும். முழுக்க முழுக்க கடலில் ஒரு படகை சுற்றியே படம் நகர்வதும், முழுக்க வசனங்கள், விவாதங்கள் மூலம் அதை நகர்ந்தி சென்ற விதமும் அருமை. முதல் பாதியில் கதை மாந்தர்கள் அறிமுகம் என சுவாரஸ்யமாக போனாலும் இரண்டாம் பாதியில் அயற்சியை ஏற்படுத்துகிறது. 1943ல் நடக்கும் கதைக்களத்தில் இன்றைய பிரச்சினைகள் சிலவற்றை பட்டியலிட்டு பேசுவதை தவிர்த்திருக்கலாம். மற்றபடி ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.