திரையுலகின் புரட்சிகர படைப்பாளர், இயக்குநர் இமயம் பாரதிராஜா – TFAPA இரங்கல்!

1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா அவர்கள், தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தவர். ஸ்டூடியோவின் கட்டுப்பட்ட சூழலிலிருந்து திரைப்படங்களை கிராமங்களுக்கும் இயற்கை சூழல்களுக்கும் கொண்டு சென்று, யதார்த்தத்தை மையமாகக் கொண்ட கதை சொல்லும் பாணியை உருவாக்கினார். அவரது திரைப்படங்கள் மக்களை மகிழ்வித்ததோடு மட்டுமல்லாமல், சாதி ஒழிப்பு, கலப்பு திருமணங்கள், பெண்கள் முன்னேற்றம், மனித உறவுகள் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்து சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

ஆறு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், ஆறு முறை தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற அவர், 2004 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருதால் கௌரவிக்கப்பட்டார். இந்திய சினிமாவிற்கான அவரது பங்களிப்பு ஒப்பற்றது.

திரைப்பட இயக்குநராக 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், மண்வாசனை, ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, தாஜ்மகால், கடல் பூக்கள், பொம்மலாட்டம் உள்ளிட்ட எண்ணற்ற காலத்தால் அழியாத படைப்புகளை அவர் வழங்கியுள்ளார்.

நடிகராகவும் ஆயுத எழுத்து, ரெட்டை சுழி, பாண்டிய நாடு, குரங்கு பொம்மை, குற்றம் குற்றமே, திருச்சிற்றம்பலம், வாத்தி, திருவின் குரல், மகாராஜா, திரு மாணிக்கம் மற்றும் அண்மையில் வெளியான மலையாள திரைப்படமான துடரும் உள்ளிட்ட பல படங்களில் மறக்க முடியாத நடிப்பை வெளிப்படுத்தினார்.

2020 ஆம் ஆண்டு, பல முன்னணி தயாரிப்பாளர்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை (TFAPA) நிறுவியவர் பாரதிராஜா அவர்கள். அவரது தொலைநோக்கு பார்வையும் வழிகாட்டுதலும் காரணமாக இன்று இச்சங்கம் 400-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு வலிமையாக வளர்ந்துள்ளது. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தமிழ் திரைப்படத் துறையின் முன்னேற்றத்திற்காக அவர் தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வந்தார்.

திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் என்ற அடையாளங்களைத் தாண்டி, இந்திய சினிமாவிற்கு ஏராளமான திறமைகளை அறிமுகப்படுத்திய வழிகாட்டியாகவும், இயக்குநர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், திரைப்படத் துறையின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்த முன்னோடியாகவும் அவர் என்றும் நினைவுகூரப்படுவார். அவரது பங்களிப்புகள் பல தலைமுறை கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ரசிகர்களை உருவாக்கியுள்ளன.

அவரது மறைவு இந்திய சினிமாவின் ஒரு பொற்கால அத்தியாயத்தின் முடிவாகும். தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரிழப்பை நாம் துயரத்துடன் அனுசரிக்கும் வேளையில், கலைக்கும் சமூகத்திற்கும் அர்ப்பணித்த அவரது மகத்தான வாழ்க்கையையும் சாதனைகளையும் பெருமையுடன் நினைவுகூர்கிறோம்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலக சகாக்களுக்கும் மற்றும் உலகெங்கும் உள்ள
அவரது ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறார்கள்.

அவரது திரைப்படங்கள், அவரது சிந்தனைகள் மற்றும் அவர் உருவாக்கிய எண்ணற்ற கலைஞர்கள் வழியாக இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *