ரத்னம் – திரை விமர்சனம்

தாமிரபரணி, பூஜை என இரண்டு வெற்றிப்படங்களுக்கு பின் மீண்டும் 10 வருடங்கள் கழித்து மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது விஷால், ஹரி கூட்டணி. கமர்ஷியல் கிங் என்று அழைக்கப்படும் இயக்குனர் ஹரி, இந்த ட்ரெண்டுக்கு போட்டி போடும் வகையில் தன்னுடைய மேக்கிங் மற்றும் கதை சொல்லும் விதம் ஆகியவற்றை மாற்றிக் கொண்டு எடுத்திருக்கும் படம் தான் இந்த ரத்னம். இந்த ரத்னம் மூலம் ஹாட்ரிக் அடித்ததா இந்த வெற்றிக் கூட்டணி? பார்ப்போம்.

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வட்டாரத்தை கதைக்களமாக கொண்டு படங்களை தரும் ஹரி, இந்த முறை கையில் எடுத்திருக்கும் வட்டாரம் வேலூரை ஒட்டியுள்ள தமிழ்நாடு, ஆந்திரா பார்டர்.

படத்தின் கதைப்படி, 90களில் ஆந்திரா – தமிழ்நாடு பார்டரில் நடக்கும் தொடர் கொள்ளையுடன் படம் தொடங்குகிறது. அங்கு சில கொலைகள் நிகழ்கிறது. ஒரு பெண்மணி ஒரு சிறுவனை வேலூர் மார்க்கெட்டில் அனாதையாக விட்டு விட்டு இறந்து போகிறார். அந்த சிறுவன் ஒரு முக்கியமான சூழலில் சமுத்திரகனியை கொல்ல வந்தவர்களில் ஒருவரை கொன்று விட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று விட்டு திரும்புகிறான். அவனுக்கு அடைக்கலாம் கொடுத்து, வளர்த்தெடுக்கிறார் சமுத்திரகனி. அத்துடன் எம்எல்ஏ ஆன சமுத்திரகனி நல்ல விஷயங்களை மட்டுமே செய்வது எனவும் முடிவெடுத்து,  நல்ல செயல்கள் மட்டுமே செய்கிறார்.

டாக்டர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் பிரியா பவானி ஷங்கர் ஒரு நாள் வேலூருக்கு நீர் தேர்வு எழுத வர, அவரை ஆந்திரா கூலிப்படை கும்பல் ஒன்று கொலை செய்ய துரத்துகிறது. அவரை காப்பாற்றும் விஷால் அவருக்கு படம் முழுக்க அரணாக, எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் ஒரு காவலனாக துணை நிற்கிறார். ஒரு நிலப்பிரச்சனை தான் இதன் மூலம் என்றாலும், ஏன் தொடர்ந்து அவர்கள் அவரை கொலை செய்ய வருகிறார்கள்? ப்ரியா பவானி ஷங்கரை கொல்லும் அளவுக்கு என்ன பிரச்சினை? விஷால் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற முயற்சி செய்வது ஏன்? பிரியா பவானி ஷங்கர் டாக்டர் கனவு என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

விஷால் பற்றி சொல்லவே தேவை இல்லை, ஆக்ஷன் காட்சிகளில் அபார உழைப்பு. முந்தைய தாமிரபரணி, பூஜை படங்களை போலவே இதிலும் எமோஷனல் கலந்த ஆக்ஷன் கதை என்பதால் தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி, செண்டிமெண்ட் காட்சிகளில் அழுத்தம் என ஸ்கோர் செய்கிறார். ஆனாலும் ஒரு சில காட்சிகளும், வசனங்களும் தவிர்த்திருக்கலாம் என தோன்றுகிறது.

பிரியா பவானி ஷங்கர் பாடலுக்கும், டூயட்டுக்கும் வந்து போகும் சாதாரண கதாபாத்திரம் இல்லை. கதையே அவரை சுற்றி தான் பின்னப்பட்டிருக்கிறது. தன் கதாபாத்திரம் உணர்ந்து நன்றாகவே நடித்திருக்கிறார். காதல், அன்பு என ஒரு வித குழப்பத்துடனே நகரும் கதாபாத்திரம். செய்நன்றிக்கு கடமைப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வில் வாழும் கதாபாத்திரம், விஷால் உடனான அவரது உறவு உணர்வுப்பூர்வமானது.

சமுத்திரகனி விஷாலுக்கு பக்க பலமாக நிற்கும் ஒரு கதாபாத்திரம். யோகிபாபு, அஸ்வின் போன்றோரின் காமெடி ஓரளவு மட்டுமே சிரிக்க வைக்கிறது. ஜெயபிரகாஷ், முரளி ஷர்மா, முத்துக்குமார், ஹரீஷ் பெரடி, விஜயகுமார், விடிவி கணேஷ், என நட்சத்திர நடிகர்கள் தங்கள் கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கௌதம் மேனன் ஒரு காட்சியில் வந்து போனாலும் கவனிக்க வைக்கிறார்.

சுகுமாரின் ஒளிப்பதிவு பார்டர் மாநிலங்களின் வறண்ட பூமி, கரிசல் மண் காடுகளின் காட்சிகளை சிறப்பாகவே காட்சிப்படுத்தியுள்ளது. ஜெய் படத்தொகுப்பு விறுவிறுவென காட்சிகளை நகர்த்த உதவியுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கதையோடு ஒட்டி வரும் பாடல்கள் படத்தோடு பார்க்கையில் இதம், ஓபனிங் பார் பாடல் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் ஓகே ரகம். ஹீரோ, ஹீரோயின் டான்ஸ் குத்துப்பாட்டு போன்ற விஷயங்களை ஹரி விட்டு விட்டு வந்திருப்பது நல்ல விஷயம்.

வில்லனுக்கும் நாயகிக்கும், நாயகனுக்கும் நாயகிக்கும், நாயகனுக்கு வில்லனுக்கும் உள்ள தொடர்பு என அவற்றை இணைத்த விதம், மேக்கிங்கில் எதையாவது புதிதாக செய்ய வேண்டும் என மெனக்கெடும் விதம், சிங்கிள் ஷாட் ஹைவே சேஸ் என உழைத்திருக்கும் இயக்குனர் ஹரி அவர்களின் முனைப்பு பாராட்டுக்குரியது. தனக்கே உரிய ஸ்டைலில் விறுவிறுவென எடுக்க முயற்சி எடுத்துள்ளார், அதில் புது அம்சங்களை சேர்க்க முயற்சியும் செய்துள்ளார். ஆனாலும் காமெடி விஷயங்கள் அவரது பழைய படங்களை அப்படியே ஞாபகப்படுத்துகிறது. இந்த கால ரசிகர்கள் அதை அவ்வளவாக விரும்புவது இல்லை. அதே போல படத்துக்கு விலாசமாக அமையும் பாடல்கள் எதுவும் இல்லாதது படத்துக்கு மைனஸ். ஆனாலும் இந்த கோடையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கக் கூடிய ஒரு படமாக தான் அமைந்துள்ளது இந்த ரத்னம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *