திருஷ்யம் படத்தைப் போல சாதாரண பட்ஜெட்டில் எந்த வித பிரமாண்டமும் இல்லாமல் கதையை மட்டுமே நம்பி படங்களை எடுத்து வசூல் சாதனை படைப்பது தான் மலையாள சினிமாவின் பலம். அந்த வகையில் மோகன்லால் தற்போது நடித்திருக்கும் படம் “துடரும்”. மலையாளத்தில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற இந்த படம் தமிழில் “தொடரும்” என்ற பெயரில் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கு, பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றிய மோகன்லால் ஒரு விபத்தில் தன் நண்பனை இழந்த பின், குடும்பத்துடன் தேனி, கேரளா பார்டரில் வாடகை கார் ஓட்டுநராக வாழ்ந்து வருகிறார். அவர் வைத்திருக்கும் அம்பாஸிடர் காரை யாரையும் தொடக்கூட விட மாட்டார். அவர் ஊரில் இல்லாத நேரம் பார்த்து அவரின் காரை போலீஸ் பறிமுதல் செய்கிறது. அதை திரும்ப பெற மோகன்லால் போராடுகிறார். அந்த காரை திரும்ப வாங்கும்போது இன்ஸ்பெக்டர் ஒரு வேலையை செய்யச் சொல்ல, அதை மோகன்லால் வேறு வழியில்லாமல் செய்து தருகிறார். அந்த வேலை அவரது வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது? அப்படி என்ன வேலையை மோகன்லால் செய்கிறார்? அதன்பிறகு என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.
மோகன்லால் ஒரு பொறுப்பான குடும்பத் தலைவனாக, அன்புள்ள தந்தையாக, திருஷ்யம் படத்தைப் போலவே குறும்புத்தனமான மனிதராக, அதே நேரம் ஒரு பிரச்சினை என வந்த பின் அதை எந்த எல்லைக்கும் சென்று கையாளும் மனிதராக சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளிலும் அதகளம் செய்கிறார். மோகன்லால் மனைவியாக ஷோபனா. நாடோடிக்காட்டு ஜோடியை மீண்டும் திரையில் பார்த்த உணர்வு. அவரும் ஒரு மனைவியாக, அம்மாவாக நல்ல ஒரு நடிப்பு. இன்ஸ்பெக்டராக வரும் பிரகாஷ் வர்மா தெறிக்க விட்டிருக்கிறார். சமீப காலங்களில் வெறுக்க வைக்கும் ஒரு வில்லன். எஸ்.ஐ-யாக பினு பப்பு, பர்ஹான் பாசில், தாமஸ் மேத்தீவ், அமிர்த வர்ஷினி, ஷாஜி அடிமல்லி என மற்ற நடிகர்களும் நல்ல நடிப்பை தந்திருக்கிறார்கள். பாரதிராஜா, இளவரசு மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை படத்தில் கொண்டு வந்த விதம் அழகு.
ஷாஜி குமார் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். இயற்கை எழில் கொஞ்சும் அந்த பின்னணியை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை கூட்டி தந்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம்.
இயக்குனர் தருண் மூர்த்தி நல்ல நடிகர்களை படத்தில் நடிக்க வைத்ததிலேயே பாதி வெற்றியை உறுதி செய்து விட்டார். முதல் பாதியில் கொஞ்சம் மெதுவாக ஏதோ குடும்பப் படம் போல நகரும் கதை, இடைவேளையில் திரில்லர் மோடுக்கு சென்று பின் இரண்டாம் பாதியில் ஆக்ஷன் படமாக மாறுகிறது. படத்தின் திரைக்கதை யூகிக்கும்படி இருப்பதும், படத்தின் நீளமும் நம்ம ஊரு தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஈர்ப்பை குறைக்கிறது. சாதாரண கதையாக ஆரம்பித்து, திரில்லர் ஆக்ஷன் மோடில் பயணித்து இறுதியில் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றிய கருத்தை சொல்லி விட்டுப் போகிறது. நிச்சயம் ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.