நாங்கள் – விமர்சனம்!

விருது சினிமாக்கள், கலைப்படங்கள் என்றால் தனியாக ஒதுக்கி வைத்து விடுவார்கள் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை. ஆனால் தற்போது அந்த நிலை மாறி இருக்கிறது. நல்ல சினிமாக்கள் கொடுங்க, நாங்க எங்க இருந்தாலும் அதை தேடிப் பிடித்து பார்க்கிறோம் என மக்கள் மாறி இருக்கிறார்கள். ஓடிடியில் மிகப்பெரிய வரவேற்பை பெரும் அப்படிப்பட்ட படங்கள் தியேட்டர்களிலும் நல்ல வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்ற ‘நாங்கள்’ திரைப்படம் ஏப்ரல் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஜிவிஎஸ் ராஜு தயாரிக்க,  அவினாஷ் பிரகாஷ் எழுதி இயக்கியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, 1990களின் பிற்பகுதியில் ஊட்டியில் கதை நிகழ்கிறது. ஒரு பள்ளியை நடத்தி வரும் தாளாளர் ராஜ்குமார், சரியான வருமானமின்றி பள்ளியை சரியாக நடத்த முடியாமலும், அத்துடன் தன் வீட்டிலும் எந்த ஒரு வசதியும் இன்றி 3 மகன்கள் கார்த்திக், துருவ், கௌதம் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மிகுந்த கஷ்டமான சூழலில் வாழ்கிறார்கள் சிறுவர்கள். ஆனாலும் தன் கெத்தையும், கண்டிப்பையும் விட்டுக் கொடுக்காமல் விரைப்புடனே இருக்கிறார் ராஜ்குமார். சிறுவர்களின் அம்மா பத்மாவை அவரது அப்பா விட்டிற்கே அனுப்பி விடுகிறார் ராஜ்குமார். இந்த வறுமையான சூழலில் இருந்து மீண்டார்களா? தம்பதியினர் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? சிறுவர்களின் வாழ்க்கையும், மனநிலையும் என்ன? என்பதை உணர்ச்சி போராட்டமாக சொல்வது தான் நாங்கள்.

கதையின் நாயகனாக, கண்டிப்பான அப்பாவாக வரும் அப்துல் ரஃபே, சிறுவர்களாக நடித்துள்ள மிதுன், ரித்திக், நிதின் ஆகியோரும் படம் முழுக்க கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். மிகக் கச்சிதமான தேர்வு. அதுவும் அப்பாவாக வரும் அப்துல் ரஃபே கதாபாத்திரத்தின் மனநிலை என்ன? நல்லவரா? மோசமானவரா? என்ற கேள்வி ஒவ்வொரு காட்சியிலும் எழுந்து கொண்டே இருக்கிறது. அவர் மீதான நம்முடைய கண்ணோட்டம் காட்சிக்கு காட்சி மாறிக் கொண்டே இருக்கிறது. அம்மாவாக வரும் பிரார்த்தனா, தொழிலாளர்கள், சிறுவர்களின் தாத்தா, அந்த வீட்டில் வளரும் நாய் என அத்தனையும் மிக யதார்த்தம்.

யார் யாருக்கு என்ன உறவு, என்ன பிரச்சினை என்பதை எல்லாம் கதைப் போக்கிலேயே புரிந்து கொள்ளும் வகையில் மெதுவாக அழகாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் அவினாஷ் பிரகாஷ். அவரே ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பணிகளையும் கையாண்டிருக்கிறார். எந்த வேகத்தில் பயணிக்க வேண்டும், காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் போன்ற முடிவுகளை சிறப்பாக எடுத்துள்ளார். ஒளிப்பதிவும் மிக நன்றாகவே இருந்தது. ஆரம்ப காட்சிகளில் இருந்தே இவர்கள் யார்? என்ன? ஏன் இப்படி இருக்கிறார்கள் என கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அந்த உலகத்திற்குள் கூட்டிச் செல்கிறார் இயக்குனர். பாலு மகேந்திரா படங்களை பார்க்கும்போது கிடைக்கும் ஒரு உணர்வை இந்த படத்தில் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *