EMI மாதத் தவணை – விமர்சனம்!

முன்பெல்லாம் வீட்டு வாசலில் வந்து சேர், பாத்திரம், அயர்ன் பாக்ஸ் என பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களை முன்பணம் வாங்கிக் கொண்டு தவணை முறையில் வந்து வாங்கிக் கொள்வார்கள். அந்த தவணை அப்படியே நகர்ந்து அடுத்தடுத்த கட்டங்களை எட்டியுள்ளது. எலக்ட்ரானிக்ஸ், கார், பைக் முதல் கல்விக் கட்டணம் வரை EMI எனும் தவணை முறை கொண்டு வந்து விட்டார்கள். இந்த EMI-யானது மாதச் சம்பளம் வாங்கும் ஒருவருக்கு ஓகே. அதுவே அவருக்கு வேலை போய் விட்டது, உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு 4,5 மாதங்கள் கட்டாய ஓய்வு என்றெல்லாம் வந்து விட்டால் அவ்வளவு தான். அந்த EMI நம்மை எங்கு கொண்டு நிறுத்தும் என்பதை நினைத்தே பார்க்க முடியாது. இந்த EMI நகரம் தொடங்கி குக்கிராமம் வரை வந்து விட்டது. அப்படிப்பட்ட EMI பிரச்சினைகளை பற்றி பேசும் படம் தான் இந்த EMI – மாதத் தவணை.

படத்தின் கதைப்படி, நாயகன் சதாசிவம் சின்னராஜூக்கு நாயகி சாய் தன்யாவை கண்டதும் காதல். நாயகியை கவர EMI-ல் புது புல்லட் பைக்கை வாங்குகிறார். பின்னர் அவரை பின் தொடர்ந்து அவரையும் காதல் வயப்பட வைக்கிறார். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்க, அன்பு மனைவிக்காக ஒரு புது காரை EMI-ல் வாங்குகிறார். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில், திடீரென்று அவருக்கு வேலை போக, மாத வருமானம் தடைபட, பைக், கார் EMI-களை கட்ட முடியாமல் திண்டாடுகிறார். கடன் கொடுத்த நிறுவனங்கள் வசூல் செய்ய எடுக்கும் நடவடிக்கைகளும், அதை நாயகன் சதாசிவம் எப்படி எதிர்கொண்டார் என்பதையும் சொல்லும் படமே ‘EMI’ (மாத தவணை).

கதையின் நாயகனாக சதாசிவம் சின்னராஜ். இயக்குனரும் இவரே தான். நடிப்பு, இயக்கம் என இரண்டு பணிகளையும் ஒரு சேர செய்திருக்கும் இவர் முடிந்தவரை தன்னுடைய சிறந்த பங்களிப்பை செய்திருக்கிறார். சாதாரண ஊர்க்கார ஆளாக திரையில் எளிதில் மனதில் பதியும்படி வந்து போகிறார். கடனில் சிக்கி அதை எதிர்கொள்ளும் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.  அவரின் ஜோடியாக நாயகியாக சாய் தன்யா. காதல் காட்சிகளில் வந்து போகிறார். மனைவியாக மாறிய பின் அக்மார்க் குடும்பத் தலைவியாக கணவனிடம் பொறுப்பை எதிர்பார்க்கும் பெண்ணாக நடித்திருக்கிறார். தன் தந்தையிடம் காதலுக்காக பிடிவாதமாக நிற்கும் காட்சியிலும் தனித்து தெரிகிறார்.

முதன் முறையாக ஒரு அப்பா கதபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பேரரசு, ஆச்சர்யப்படுத்துகிறார். பெரிதாக நடிக்க ஸ்கோப் இல்லையென்றாலும் அவரை திரையில் பார்த்த உடன் ரசிகர்கள் செய்யும் ஆரவாரம் அமோகம். நாயகனின் நண்பனாக பிளாக் பாண்டி, காமெடி ஓரளவு எடுபடுகிறது. சில காட்சிகளில் காமெடியை வலிந்து திணித்த உணர்வு ஏற்படுகிறது. நாயகனின் அம்மாவாக, சன் டிவி ஆதவன், ஓ.ஏ.கே.சுந்தர், லொள்ளு சபா மனோகர் என மற்ற நடிகர்களும் அவர்கள் பங்கை செய்து விட்டு போகிறார்கள்.

ஸ்ரீநாத் பிச்சையின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையும் படத்துக்கு ஏற்றவாறு இருக்கிறது. ஸ்டார் நடிகர்களே அறிமுக பாடலை விட்டு விலகி நடிக்கும் சூழலில் அறிமுக நாயகனுக்கு ஓபனிங் பாடலா என எண்ண வைக்கிறார். டூயட் பாடலில் அந்த ஊரிலேயே இருக்கும் இடங்களை வைத்து, அழகாக காட்டிய விதமும், நடனமும் சிம்பிளாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது. கிருஷ்ணகிரியை கலர்புல்லாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரான்ஸிஸ்.

இயக்குனர் சதாசிவம் சின்னராஜ் எடுத்துக் கொண்ட கதையும், களமும் எளிதில் நம்முடன் கனெக்ட் ஆகும் ஒன்று தான். EMI என்பது இன்றைய மக்களின் ஒவ்வொரு குடும்பத்துடனும் ஒன்றிப் போன விஷயம் தான். எந்த ஒரு பொருளையும் கையில் காசு இருக்கும்போது வாங்கணும் என்ற மனநிலை மாறி, அப்புறம் பார்த்துக்கலாம் என வாங்குபவர்களுக்கு இந்த படம் ஒரு எச்சரிக்கை மணி. அதை பிரச்சார நெடியில் சொல்லாமல், காதல், காமெடி கலந்து ஒரு கமெர்சியல் படமாக தந்திருக்கிறார் சதாசிவம் சின்னராஜ். இதுநாள் வரை கடன் கட்டி வந்தவர்களுக்கும், இனிமே EMI-யில் வாங்கலாம் என நினைப்பவர்களுக்கும் எதையும் கவனமாக செய்யுங்கள் என்பது தான் இந்த படம் தரும் செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *