ட்ராமா (Trauma) – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஹைப்பர் லிங் திரில்லர் படங்கள் வெளியாகி சில படங்கள் ஒரு ட்ரெண்டையே உருவாக்கும். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் படம் மாநகரம், ஒரு ஹைப்பர் லிங் திரில்லர் படம் தான். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள படம் தான் “ட்ராமா”. ஹைப்பர்லிங் கதை சொல்லலில் ஒரு மிக அதிர்ச்சிகரமான ஒரு விஷயத்தையும் சொல்லி ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் இயக்குனர். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, திருமணமாகி சில வருடங்களாகியும் குழந்தை இல்லாமல் ஏங்கும் தம்பதி விவேக் பிரசன்னா, சாந்தினி. எவ்வளவோ முயற்சித்தும் குழந்தை பேறு கிட்டாத நிலையில் ஒரு மருத்துவமனையை பற்றி தெரிய வருகிறது. அங்கு சென்று வந்த சில மாதங்களில் சாந்தினி கர்ப்பமடைகிறார். சில நாட்களில் ஒரு மர்ம போன் கால் வர, அதில் அவர் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா விவேக் பிரசன்னா இல்லை என்று சொல்லி ஒரு வருகிறது. 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டப்படுகிறார்கள்.

இன்னொரு புறம் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து மகள் பூர்ணிமா ரவி. பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் அவர் தன் அப்பாவுக்கு உழைத்து சம்பாதித்து ஒரு டாக்ஸ் வாங்கித்தர வேண்டும் என நினைக்கிறார். இந்நிலையில் காதல் வயப்பட்டு, அந்த காதலனால் கர்ப்பமடைந்து ஏமாற்றப்படுவதை உணர்கிறார். மேற்கொண்டு அந்த குழந்தையை பெற்றெடுத்தாரா? இல்லையா? என்பதும், சாந்தினியை மிரட்டியது யார்? அப்படி என்ன குற்றப் பின்னணி நடந்தது? என்பதை பர பர திரில்லராக தந்திருக்கிறார் இயக்குனர்.

கதையின் மையக் கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா. தன் யதார்த்தமான நடிப்பின் மூலம் ஒரு எமோஷனலான நடிப்பை தந்திருக்கிறார். குற்ற உணர்வில், இயலாமையில் புழுங்கும் ஒரு கதாபாத்திரம், நன்றாகவே செய்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மனைவியாக சாந்தினி, குழந்தை மீதான ஏக்கம், குழந்தை இல்லாத கவலை என கதைக்கு அழுத்தம் சேர்க்கும் விதத்தில் நல்ல ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார்.

கதையின் இன்னொரு நாயகனாக நடித்துள்ள பிரதோஷ், அவரது கதாபாத்திரத்தின் பரிமாணங்களை புரிந்து அத்ற்கேற்ற நடிப்பை வழங்கியுள்ளார். அவரின் காதலியாக பூர்ணிமா ரவி. நம் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார்.

அனந்த் நாக் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நல்ல ஒரு நடிப்பை தந்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக சஞ்ஜீவ், கச்சிதமான ஒரு கதாபாத்திரம். நன்றாகவே நடித்துள்ளார். மறைந்த நடிகர்கள் மாரிமுத்து, பிரதீப் கே.விஜயன் ஆகியோரும் இந்த படத்தில் பார்த்தது நெகிழ்ச்சியாக உள்ளது. மாரிமுத்து டப்பிங் குரல் என்றாலும் அவர் நடிக்கும்போது அவரது குரல் நம் மனதில் ஓடுகிறது. அம்மாவாக ரமா நல்ல ஒரு சிறந்த நடிப்பு.

ஆர்.எஸ்.ராஜ்பிரதாப் இசையில் பாடல்கள் கேட்கும் விதம். நன்றாகவே இருந்தது. பின்னணி இசையும் கதையின் தன்மைக்கு ஏற்ப தந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனின் கேமரா படத்தின் தரத்தை உயர்த்தி காட்டியிருக்கிறது. இந்த ஹைப்பர் லிங் கதையை சிறப்பாக தொகுத்திருக்கிறார் எடிட்டர் முகன் வேல்.

இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன், ஃபெர்டிலிட்டி செண்டர் பின்னணியில் நடக்கும் குற்ற செயல்கள் என்ற ஒரு புள்ளியில் இந்த படத்தை எடுத்திருக்கிறார். அதை மூன்று கிளைக் கதைகளாக சொன்ன விதமும், அதை திரைக்கதையில் ஒரு புள்ளியில் சுவாரஸ்யமாக இணைத்த விதமும் நன்று. இப்படியும் நடக்குமா? என்று பார்வையாளர்களை அதிர வைக்கும் விஷயத்தை திரையில் காட்டி அடடே போட வைக்கிறார். நல்ல சுவாரஸ்யமான முயற்சி, நிச்சயம் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *