பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் பா.விஜய் ஸ்ட்ராபெர்ரி படத்துக்குப் பின் எழுதி இயக்கியிருக்கும் ஹாரர் ஃபேண்டஸி திரைப்படம் அகத்தியா. ஜீவா, அர்ஜூன், ராஷி கண்ணா என ஆகியோர் நடிக்க, யுவன் இசையமைத்துள்ள இந்த படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறார் ஐசரி கணேஷ். குழந்தைகளுடன் வந்து குடும்பம் குடும்பமாய் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நம்முடைய தமிழின் சித்த மருத்துவத்தின் மகத்துவம் பற்றியும் பேசியிருக்கும் இந்த படம் ஒரு திரைப்படமாக ரசிகர்கள் ஈர்த்ததா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகன் ஜீவா சினிமாவில் கலை இயக்குநராக ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கில் உழைத்து வருகிறார். அவர் அறிமுகமாகும் முதல் படத்திலேயே அசத்தி விட வேண்டும் என்பதற்காக தன் சொந்த செலவில் லட்சங்கள் செலவழித்து ஒரு பிரம்மாண்டமான அரங்கை வடிவமைக்கிறார். திடீரென அந்த படத்தை ட்ராப் செய்கிறார் தயாரிப்பாளர். இதனால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் ஜீவாவுக்கு, ராஷி கண்ணா இதை ஒரு ஸ்கேரி ஹவுஸாக மாற்றி, டிக்கெட் வசூல் செய்து அதன் மூலம் அந்த பணத்தை திரும்ப எடுக்கலாம் என ஐடியா தர, அதை செயல்படுத்துகிறார்கள். மக்கள் ஆர்வத்துடன் படையெடுக்க, நன்றாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் சில அமானுஷ்யமான சம்பவங்கள் அங்கு நிகழ்கிறது. முதலில் நம்ப மறுக்கும் ஜீவாவும், அவரது நண்பர்களும் பின் அதை உணர்கிறார்கள். அந்த இடத்தின் வரலாறை கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்கிறார்கள். 80 ஆண்டுகளுக்கு முன்பு சித்த மருத்துவராக இருந்த அர்ஜுன் பற்றியும் அவரது கண்டுபிடிப்புகள் பற்றியும் ஓரளவு தெரிந்து கொள்கிறார். அதன் பின் என்ன நடந்தது? அர்ஜூன் மருந்துகளை கண்டுபிடித்தாரா? யாராவது பயன் பெற்றனரா? என்பது போன்ற கேள்விகளை தேடி கண்டடைவது தான் மீதிக்கதை.
ஜீவா நல்ல ஒரு நடிகர். சமீப காலங்களில் அவருக்கு நல்ல படங்கள் அமையாத குறை ஒன்று தான். இந்த படத்திலும் வழக்கம் போல நல்ல ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். அம்மா சென்டிமென்டில் கவனம் ஈர்க்கிறார். கதாபாத்திரங்களை பொறுத்தவரை ஜீவாவை விட சித்த மருத்துவராக நடித்த அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு தான் அதிக முக்கியத்துவம். அவரும் தன் ஆளுமை மிக்க நடிப்பால் அசத்துகிறார். மனதில் நிற்கிறார்.
நாயகியாக ராஷி கண்ணா ஜீவாவுடன் கதைக்கு தேவையான ஒரு சப்போர்ட்டை கொடுத்திருக்கிறார். பிரெஞ்சு ஆளுநர் எட்வின் டூப்ளெக்ஸாக நடித்திருக்கும் நடிகர் எட்வர்ட் சொனன்பிளேக் வழக்கமான பிரிட்டிஷ் வில்லனாக நடித்திருக்கிறார். ஆனாலும் கதையோடு பார்க்க நன்றாக உள்ளது. ஜீவாவின் அம்மாவாக நடித்திருக்கும் ரோகிணியின் நடிப்பு மிகச்சிறப்பு. அவரது தோற்றம் உண்மையில் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. இளையராஜாவின் எவர்கிரீன் கிளாஸிக் ‘என் இனிய பொன் நிலாவே..’ பாடலை உபயோகித்த விதம் சிறப்பு. பின்னணி இசையில் ஓரளவுக்கு நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். ஒளிப்பதிவும் கலை இயக்கமும் படத்தின் மிகப்பெரிய பலம். 1940, தற்போதைய காலகட்டம் என இரண்டு காலகட்டங்களில் மாறி மாறி நடக்கும் கதையை திரையில் மிக அழகாக கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தின் வி எஃப் எக்ஸ்-க்கும் தனி பாராட்டுக்கள். கிளைமாக்ஸில் வரும் அனிமேஷன் சண்டைக்காட்சி மிகச்சிறப்பு.
பா விஜய் ஒரு சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை சொல்லும் ஒரு கதையை ஹாரர் ஃபேண்டஸி விஷயங்களை கலந்து குழந்தைகளோடு சென்று பார்க்கும் விதத்தில் ஒரு படமாக கொடுத்திருக்கிறார். பேய் பங்களாவில் வரும் காட்சிகளும், ரோகிணி வரும் காட்சிகளும், அர்ஜூன் வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகளும் படத்தில் நன்றாகவே இருக்கிறது. சித்தர்கள் பற்றிய விஷயங்களையும், மருத்துவத்தையும் பற்றி பல ஆச்சர்யமான விஷயங்களையும் ஆங்காங்கே சொல்லி நமக்கு புது விஷயங்களையும் சொல்லித் தருகிறார். குறைகள் இருந்தாலும் குழந்தைகளுடன் சென்று தாராளமாக ரசிக்கலாம்.