சப்தம் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தன் கதை தேர்வின் மூலம் ஒவ்வொரு படத்தையும் தனித்துவமான தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக மாற்றியவர் நடிகர் ஆதி. அவரைப் போலவே இயக்கியவை ஒரு சில படங்களாக இருந்தாலும் ஒவ்வொன்றையும் சிறந்த படைப்பாக மாற்றியவர் இயக்குனர் அறிவழகன். இந்த இருவரும் இணைந்து ‘ஈரம்’ என்ற தனித்துவமான ஒரு படைப்பை வழங்கியிருந்தனர். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஹாரர் திரில்லர் படம் வந்ததில்லை என கொண்டாடப்பட்டது. அந்த இருவரும் இணைந்து உருவாக்கியிருக்கும் இன்னொரு ஹாரர் திரில்லர் படம் தான் சப்தம். முதல் படம் தண்ணீர், இந்த படம் சப்தம். படம் எப்படி இருந்தது? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, மூணாரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் என்ற மருத்துவ கல்லூரியில் அடுத்தடுத்து சில மரணங்கள் நிகழ்கிறது. அங்கு அமானுஷ்யம் ஏதும் இருக்கிறதா என்ற செய்தி பரவ, அதற்காக மும்பையில் இருந்து பாரநார்மல் இன்வெஸ்டிகேடர் ஆதி வரவழைக்கப்படுகிறார். கல்லூரிக்கு வரும் அவருக்கு அங்கு சில அமானுஷ்ய விஷயங்கள் புலப்படுகிறது. அங்கு என்ன நடந்தது? அந்த மரணங்களுக்கான காரணம் என்ன? தற்கொலையா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறது மீதிக்கதை.

நாயகன் ஆதி. படத்தில் தன்னுடைய தேர்ந்த நடிப்பாலும், முதிர்ச்சியான நடிப்பாலும் படத்தை தாங்கி இருக்கிறார். படம் முழுக்க எந்தவித அலட்டலும் இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறார். நாயகி லக்‌ஷ்மி மேனன். கதையின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நல்ல ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். முதல் பாதியில் தன் நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். சிம்ரன் ஒரு மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் மனதில் பதிகிறார். ரசிகர்களை கண் கலங்க வைக்கிறார். லைலா சில காட்சிகள் வந்தாலும் இதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் புது பரிமாணத்தில் ஸ்கோர் செய்கிறார். ராஜீவ் மேனன், எம்.எஸ்.பாஸ்கர் போன்றோருக்கு பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் தங்கள் கதாபாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

படத்தின் ஆகப்பெரும் பலம் படத்தின் ஒளிப்பதிவு, சவுண்ட் மிக்ஸிங் மற்றும் இசை. இந்த மூன்றும் படத்தை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்கிறது. தமன் பின்னணி இசையில் அதிர வைக்கிறார். ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது படத்தின் மேக்கிங். சவுண்ட் படத்தின் பெரிய ஹைலைட்.

ஈரம் படத்தில் மிரள வைத்த இயக்குனர் அறிவழகன்- நடிகர் ஆதி கூட்டணி இந்த முறை சவுண்டை களமாக கொண்டு இந்த சப்தம் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஹாலிவுட் தரத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் அறிவழகன். தான் ஒரு தரமான இயக்குனர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். முந்தைய ஈரம் படத்தில் டெக்னிக்கல் அம்சங்களும், கதை திரைக்கதையும் எமோஷனும் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. ஆனால் இந்த சப்தம் படத்தில் டெக்னிக்கல் அம்சங்கள் மிகச்சிறப்பு. முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் சொதப்பல். உணர்வுபூர்வமான காட்சிகளில் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறியதோடு சாதாரணமான ஒரு படமாக அமைந்திருகிறது இந்த சப்தம். படத்யின் தொழில்நுட்ப அம்சங்களுக்காக நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டரில் சென்று பார்த்து விட்டு வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *