சுழல் சீசன் 2 – இணையத்தொடர் விமர்சனம்!

இந்தியாவில் ஒரிஜினல் இணையத் தொடர்கள் தயாரிப்பது மிகவும் குறைவு. அதிலும் உருவாகும் இணையத் தொடர்களும் பெரும்பாலும் இந்தியில் தான் உருவாகும். அவர்களின் தொடர்கள் தான் பொருட்செலவிலும் உருவாக்கத்திலும் மிகச்சிறப்பானதாக இருந்து வந்தது. அந்த மாதிரி தொடர்கள் தமிழில் உருவாகாதா என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் அமைந்த முதல் பிரமாண்ட, மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்ட ஒரு தொடராக அமைந்தது சுழல். அந்த தொடரின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சுழல் – தி வோர்டெக்ஸ் என்ற பெயரில் இரண்டாவது சீசனை உருவாக்கியிருக்கிறார்கள் புஷ்கர் காயத்ரி தலைமையிலான குழு. முதல் சீசனை போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றதா? ரசிகர்களை கவருமா? இணையத் தொடர் உருவாக்கத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லுமா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

இந்த தொடரின் கதையானது, கடந்த சீசனில் இருந்த இரண்டு முக்கிய கதாபாத்திரங்களான கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் வாழ்வில் அதன் பிறகு நடக்கும் சம்பவங்களின் தொடர்ச்சி, வேறொரு கதைக்களத்தில் பயணிக்கிறது. துப்பாக்கியை தொலைத்ததால் இடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் கதிர். கொலைக் குற்றத்திற்காக சிறையில் இருக்கும் ஐஷ்வர்யா ராஜேஷின் வழக்கில் வழக்கறிஞரான லால் அவருக்காக வாதாடுகிறார். கதிரின் தந்தையின் நண்பரான லால் தான் கதிரை படிக்க வைத்திருக்கிறார். அவருடன் சென்று லால் வீட்டில் தங்குகிறார் கதிர். காளிபட்டணம் என்ற அந்த கிராமத்தில் அஷ்டகாளி திருவிழா துவங்குகிறது. ஊரே திருவிழா கோலத்தில் இருக்க, இறுதித் தீர்ப்புக்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் லால் அவரின் பண்ணை வீட்டில் கொலையாகி கிடக்கிறார்.

அந்த கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு கதிரிடம் வருகிறது. கொலை நடந்த வீட்டில் இருந்து ஒரு இளம் பெண்ணை கைது செய்கிறார்கள். அதன் பின் 7 இளம்பெண்கள் தான் தான் அந்த கொலையை செய்தேன் என சொல்லி வெவ்வேறு ஊர்களில் சரண் அடைகிறார்கள். 8 பேர் சந்தேகப்பட்டியலில் இருக்க, யார் இந்த கொலையை செய்தது? என்ன காரணம்? ஐஸ்வர்யா ராஜேஷின் வழக்கு என்ன ஆனது? போன்ற பல கேள்விகளுக்கு அடுத்தடுத்த திருப்பங்களுடன் 8 எபிசோடுகளில் கதை சொல்லியிருக்கிறார்கள்.

முதலில் இந்த தொடரில் நடித்த நடிகர்களை பற்றி பார்ப்போம். கதிர் வழக்கம் போல சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வழக்கை விசாரிக்கும் எஸ்.ஐ.யாக நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளார். மொத்த கதையையும் நகர்த்தி செல்லும் கதாபாத்திரம். ரசிகர்களுக்கு எழும் கேள்விகளுக்கு அவ்வப்போது அவரே பதில் கொடுத்து விடுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு குற்ற உணர்ச்சியில் புழுங்கும் கதாபாத்திரம். சிறையில் இருந்தாலும் மற்றவர்களின் வாழ்வுக்கு உதவியாக இருக்கும் ஒரு மிக முக்கிய கதாபாத்திரம். தனது தேர்ந்த நடிப்பால் 8 இளம்பெண்கள் இருந்தாலும் அவர்களுடன் போட்டி போட்டு ஸ்கோர் செய்கிறார்.

லால் வழக்கறிஞராக நடித்திருக்கிறார். மொத்த கதையுமே அவரை சுற்றி தான் நடக்கிறது என்பதும், அந்த கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமுமே இந்த தொடரின் வெற்றியை தீர்மானிக்கிறது. இன்ஸ்பெக்டராக சரவணன், அவ்வப்போது கதிருடன் முட்டல் மோதல், ஈகோ பார்ப்பது, அவரே அட்வைஸூம் செய்வது என நடிப்பில் பல பரிமாணங்களையும் எடுக்கிறார். 8 இளம் பெண்களாக கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன்,  மோனிஷா பிளெஸ்ஸி, ரினி, ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், அஸ்வினி நம்பியார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிக அழகாக பயன்படுத்தியுள்ளனர். கயல் சந்திரன் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் கௌரவ வேடங்களில் தோன்றுகின்றனர். அதிலும் மஞ்சிமா மோகன் கதாபாத்திரம் என்றென்றும் நிலைத்து நிற்கும்  ஒரு கதாபாத்திரமாக மனதில் நிற்கிறது.

சாம் சி.எஸ். இசையில் வரும் பாடல்கள் திரையில் பார்க்கும்போது மிக அழகாக பொருந்திப் போகிறது. ஆலங்கட்டி மழை பாடல் தொடரை முடித்த பிறகும் மனதில் தங்கி விடுகிறது. ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம். குறிப்பாக திருவிழா காட்சிகளை படமாக்கிய விதம் மிகச்சிறப்பு.

முதல் சீசனை பிரம்மா ஜி மற்றும் அனுசரண் இயக்கியிருந்தார்கள். இந்த சீசனில் பிரம்மா ஜி 1,2,6,7,8 ஆகிய எபிசோடுகளை இயக்க, சர்ஜூன் கே.எம். 3,4,5 ஆகிய எபிசோடுகளை இயக்கியுள்ளார். இரண்டு பேர் இயக்கியிருந்தாலும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே இயக்குனர் இயக்கியது போலவே இருந்தது உருவாக்கம். திருவிழா காட்சிகள், வழக்கு விசாரணை காட்சிகள், சிறை காட்சிகள் என அத்தனையும் மிகச் சிறப்பாக எந்த ஒரு குழப்பமும் இன்றி படமாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக திருவிழா காட்சிகள் எல்லாமே முதல் சீசனை போலவே எப்படி படமாக்கினார்கள் என்ற வியப்பை நமக்குள் ஏற்படுத்துகிறது. அவ்வளவு தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அந்த கூத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய ஒப்பனையே மிரட்டலாக இருக்கிறது. சிறை காட்சிகளில் நடித்த பெண்களும், அந்த சிறைக் காட்சிகளை காட்சிப்படுத்திய விதமும் கொஞ்சம் புதுமை. இதுவரை தமிழில் பார்க்காத ஒரு அனுபவம். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து சரியான இடங்களில் தேவையான பட்ஜெட்டை கொடுத்து, தேவையான செலவை செய்த புஷ்கர் காயத்ரியை பாராட்டியே தீர வேண்டும். இல்லையெனில் இப்படி ஒரு சிறப்பான தொடர் எல்லாம் தமிழில் சாத்தியமே இல்லை.

அஷ்ட காளி கதையை சொன்ன விதமும், அதனை அத்தியாயங்களாக சொன்ன விதமும், திருவிழாவுடன் இணைத்து கதை சொன்ன விதமும், அரக்கன், நாக கன்னி, சூரசம்ஹாரம் போன்ற விஷயங்களை சொல்லி இன்றைய தலைமுறையும் அவற்றை தேடி தெரிந்து கொள்ள ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது இந்த தொடர். நிச்சயம் தமிழில் வெளியாகும் மற்றுமொரு சிறப்பாக உருவாக்கப்பட்ட, அடுத்தடுத்த திருப்பங்களுடன் கூடிய நல்ல ஒரு தொடராக வெளிவந்துள்ளது. நிச்சயம் அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *