கண்நீரா – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் அவ்வப்போது வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அங்கேயே இருக்கும் விஷயங்களை வைத்து, நடிகர்களை வைத்து படம் எடுத்து அதை தமிழ்நாட்டிலும் வெளியிடுவார்கள். அப்படி ஒரு படமாக சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம் தான் “கண்நீரா”. காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதியிருப்பவர் இந்த படத்தின் நாயகன் கதிர் ரேவன் மனைவி தான்.. படம் எப்படி வந்திருக்கு? பார்க்கலாம்..

படத்தின் கதைப்படி, நாயகன் கதிர் ரேவனும், நாயகி சாந்தினி கவுரும் சில வருடங்கள் காதலில் இருக்கிறார்கள். கதிர் ரேவனுக்கோ தன் அம்மா உயிருடன் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு ஒரு குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை. ஆனால் சாந்தினி கவுர், கதிர் ரேவன் போலவே தானும் தன்னுடைய தொழில் வாழ்க்கையில் உயரிய இடத்தை பிடிக்க வேண்டும், அதற்கு திருமணம் தடையாக இருக்கக் கூடாது என நினைக்கிறார். இதனால் அவர்கள் காதலில் விரிசல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் கதிர் ரேவன் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேருகிறார் இன்னொரு நாயகியான மாயா கிளம்மி. அவர் மீது கதிர் ரேவனுக்கு ஈர்ப்பு வர, அவரை காதலிக்கிறார். மாயாவுக்கும் ஏற்கனவே ஒரு காதல் இருக்கிறது. அதிலும் சில பிரச்சினைகள். இந்த சூழலில் யார் யாருடன் இணைந்தார்கள்? யாருடைய காதல் மண வாழ்க்கையில் முடிந்தது? என்பதே மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் கதிர் ரேவன். நம்ம ஊர் நடிகர்களை போலவே தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். சாந்தினி கவுர் மற்றும் மாயா கிளம்மி என இரண்டு நாயகிகள். இருவருமே கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார்கள். சாந்தினி கொஞ்சம் அழகு மற்றும் கிளாமரில் ரசிக்க வைக்கிறார். மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்களும் அந்த ஊர் நடிகர்கள், நமக்கு பரிச்சயம் இல்லா நடிகர்கள் என்றாலும் அவர்களது நடிப்பும் குறை சொல்லும்படி இல்லை.

ஹரி மாறன் இசையில் பாடல்கள் பரவாயில்லை. கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் குறையில்லை.  ஏகணேஷ் நாயர் ஒளிப்பதிவு மலேசியாவின் தெருக்களை நன்றாக காட்டியிருக்கிறது. புதுப்புது லொகேஷன்களை பார்த்த உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

நாயகன் மற்றும் இயக்குனர் கதி ரேவன் மனைவி கெளசல்யா நவரத்தினம் தான் கதை. அவருடன் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கதிர் ரேவன். ஒரு இழையோடும் காதல் கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். காதல் ஜோடிகள் மாறுவது, காதலில் ஏற்படும் குழப்பம் என அவற்றையும் பார்க்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார். மொத்தததில் இந்த காதலர் தினத்தில் எதையும் யோசிக்காமல் ஒரு தடவை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *