ஹே ஜூட் படத்துக்கு பின் திரிஷா நடித்திருக்கும் மலையாள திரைப்படம் ஐடெண்டிடி. அதுவும் ஒரு மிஸ்டரி திரில்லர் திரைப்படம் என்பதிலேயே எதிர்பார்ப்பு எகிறியது. நாயகன் டொவினோ தாமஸ் என்பது கூடுதல் ஆர்வத்தை துண்டியது. அகில் பால், அனஸ் கான் என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வினய் வில்லனாக நடித்திருக்கிறார். தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் ஒரு நபர் திடீரென ஒரு மர்ம நபரால் எரித்து கொல்லப்படுகிறார். அந்த மர்ம நபரை நேரில் பார்த்த சாட்சி திரிஷா. அவர் மூலம் அந்த கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் இறங்கும் போலீஸ் அதிகாரி வினய், அதீத புத்திசாலியான டோவினோ தாமஸை உதவி செய்ய கேட்கிறார். அவரும் உதவி செய்ய முன் வருகிறார். அந்த நேரத்தில் திரிஷா சொல்வதை வைத்து வரைந்த முகம் நாயகன் டொவினோ தாமஸ் உடையது சமீபத்தில் நடந்த விபத்தில் திரிஷாவுக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் தான் அவர் இப்படி அடையாளம் காட்டுவதில் குழம்பிப் போய் இருக்கிறார் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்களும், உண்மையான கொலையாளி யார்? அந்த கொலையின் நோக்கம் என்ன? இந்த மூன்று பேரும் அந்த கொலையில் சம்பந்தப்பட்டது எப்படி? என்பது தான் மீதிக்கதை. படத்தின் கதையை சொன்னாலே கதையின் பல ட்விஸ்ட், சர்ப்ரைஸ் உடைந்து போகும் அளவுக்கான திரைக்கதை. தியேட்டரில் பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் தான் இது.
நாயகன் டோவினோ தாமஸ், இந்த ஆண்டிலேயே ஏஆர்எம் என்ற ஒரு பிரமாண்ட படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம். அவரது நடை, உடை, பாவனை, ஆட்டிட்யூட் என அத்தனையிலும் ஸ்கோர் செய்கிறார். நடிப்பையும் தாண்டி ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி செம்ம ஸ்டைலிஷ்.
நாயகி திரிஷா அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பதை தன் நடிப்புன் மூலம் வெளிப்படுத்துகிறார். படம் முழுக்க பல காட்சிகளில் அவரின் பங்கு அலாதியானது. அவரின் கதாபாத்திரம் படத்தின் மிக முக்கிய அம்சம் என்பதை மறுக்க முடியாது.
வினய் கதாபாத்திரத்தை அவரை விட யாரும் அவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. அந்த அளவுக்கு அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார். அவரது உடற்கட்டும், அவரது பாடி லாங்குவேஜூம் அதற்கு துணை புரிகின்றன. அஜு வர்க்கீஸ், மந்திரா பேடி, அர்ச்சனா கவி, ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷாக் நாயர், மேஜர் ரவி, சுஜித் சங்கர் என மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை மிகச்சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம். படத்தின் திரில்லர் மூடை அழகாக காட்டியிருப்பதோடு சேஸிங் மற்றும் சண்டைக் காட்சிகளிலும் மிகச் சிறந்த உழைப்பை கொடுத்திருக்கிறார். ஜேக்ஸ் பிஜாயின் இசை படத்தின் வேகத்துக்கு ஈடு கொடுத்து அதை மேலும் தூக்கி நிறுத்துகிறது. சமீபத்திய பல படங்களின் வெற்றியில் ஜேக்ஸ் பிஜாய் பங்கு எப்படி முக்கியமானதோ அதே போல இந்த படத்தின் வெற்றியிலும் அவர் பங்கு இன்றியமையாதது.
ஆரம்பத்தில் நடக்கும் ஒரு கொலை, அதன் பின் நடக்கும் விஷயங்கள் என மிகச் சிறப்பான திரைக்கதையின் மூலம் படத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் அகில் பால், அனஸ் கான். முதல் பாதி வரை கதையின் பல அடுத்தடுத்த திருப்பங்களும், இடைவேளைக்கு பின் நடக்கும் பரபர ஆக்ஷன் சமாச்சாரங்களும் படத்தை ஒரு நொடி கூட விலகாமல் நம்மை படத்துடனே பயணிக்க வைக்கிறது. மொத்தத்தில் ஒரு நல்ல கிரைம், ஆக்ஷன் திரில்லர் பார்க்க வேண்டும் என நினைக்கும் ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம்.