சீசா – விமர்சனம்

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்திலும் வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்பதை தாண்டி மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை கொண்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மிக முக்கியமான பிரச்சினைகளை பேசியிருக்கும் ஒரு படமாக வெளியாகி இருக்கிறது இந்த வாரம் வெளியான “சீசா”. நட்டி நடராஜ், நிஷாந்த் ரூசோ, பாடினி குமார் ஆகியோர் நடித்துள்ளனர். எப்படி இருக்கு படம், பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, தாய் தந்தையை இழந்து எந்த உறவும் இல்லாமல் இறுக்கமான வாழ்க்கையில் இருக்கும் இளம் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோவுக்கு காதல் மனைவியாக பாடினி குமார் அமைகிறார். அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பணியாள் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த வீட்டில் இருந்த நிஷாந்த் ரூசோ அவரது மனைவி பாடினி குமார் இருவரும் மாயமாகி விடுகிறார்கள். அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட்டிஸ்க்கும் மாயமாகி விடுகிறது. கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டியிடம் ஒப்படைக்கப்படுகிறது. விசாரணையில் நிஷாந்த் ரூசோ பற்றி பல அதிர்ச்சிகரமான விசயங்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜுக்கு தெரிய வருகிறது. அதை வைத்து விசாரணையில் அவர் முன்னோக்கி செல்லும் போது மாயமான நிஷாந்த் ரூசோ மட்டும் மீண்டும் தனது வீட்டுக்கு வருகிறார். அவருடன் இருந்த அவரது மனைவி என்ன ஆனார்? என்பது குறித்து போலீஸ் அவரிடம் விசாரிக்கும் போது, அவர் சரியான மனநிலையில் இல்லை என்பது தெரிய வருகிறது. பாடினியின் நிலை என்ன? என்பதை கண்டுபிடிப்பதற்காக, வேறு கோணத்தில் விசாரணை மேற்கொள்ளும் நட்டி நட்ராஜுக்கு, அதிர்ச்சிகரமான உண்மையும், பாடினியின் நிலையும் தெரிய வருகிறது. அது என்ன ?, அதன் பின்னணியில் இருப்பது யார் ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

மஹாராஜா படத்துக்கு பிறகு மீண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் அசத்துகிறார். அமைதியாக, அதே நேரத்தில் எந்தவித அலட்டலும் இன்றி விசாரணை செய்து ஸ்கோர் செய்கிறார். எந்த ஒரு விசயத்தையும் கூர்ந்து கவனித்து விசாரணை மேற்கொள்ளும் அவரது செயல்திறன் படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பு கொடுக்கிறது. இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் நிஷாந்த் ரூசோ, பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக கவனமுடன் கையாண்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார். அவரது செய்கைகள் உண்மையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரோ என்று எண்ணும் அளவுக்கு தத்ரூபமாக இருக்கிறது.

நிஷாந்த் ரூசோவின் மனைவியாக நடித்திருக்கும் பாடினி குமார், கதையில் முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரத்தில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹோம்லியான முகம், இயல்பான நடிப்பு என்று கவனம் ஈர்ப்பவர் ஒரு பாடலில் கொஞ்சம் கவர்ச்சியாகவும் நடித்து அசத்துகிறார். நல்ல உயரங்களை தொட வாழ்த்துக்கள். நிஷாந்தின் நண்பராக நடித்திருக்கும் மூர்த்தி, வீட்டில் வேலை செய்பவராக நடித்திருக்கும் மாஸ்டர் ராஜநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் ஆதேஷ் பாலா, நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் இயக்குநர் அரவிந்தராஜ், கார்த்தியாக நடித்திருக்கும் நடிகர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

சரண்குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். காதல் பாடல் மற்றும் சிவன் பற்றிய பாடல் என்று அனைத்து பாடல்களும், பாடல் வரிகளும் மனதில் நிற்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஆகியோரது கேமரா கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, காட்சிகளை பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறது.

கிரைம் திரில்லர் ஜானர் கதை என்றாலும் அதன் பின்னணியில் இயக்குநர் சொல்லியிருக்கும் கருத்து மக்களிடம் சிறப்பாக சென்று சேர்ந்திருக்கிறது. தயாரிப்பாளர் டாக்டர்.கே.செந்தில் குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விட, சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தகைய ஆபத்தானவர்கள் என்பதை தன் கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் குணா சுப்பிரமணியம், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு படமாக இருந்தாலும் அதை கிரைம் திரில்லர் ஜானரில் மட்டும் இன்றி காதல் காட்சிகளையும் சேர்த்து கலர்புல்லான கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார். பல திருப்பங்களுடன் பயணிக்கும் திரைக்கதை மற்றும் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு மிக்க காட்சிகளுடன் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் குணா சுப்பிரமணியம், கதை சொல்லில் காட்டியிருக்கும் வித்தியாசம் மற்றும் மேக்கிங் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. சில முக்கியமான கேள்விகளுக்கு சரியான விடை சொல்லாமல் விட்டிருந்தாலும் குணா சுப்பிரமணியம் கிரைம் திரில்லர் மற்றும் விழிப்புணர்வு இரண்டையும் சரியான அளவில் கையாண்டு கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *