ஆஹா ஓடிடி தளத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் “லைன்மேன்”. இயக்குனர் சீனு ராமசாமியிடம் பணிபுரிந்த உதய்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார். சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முழுக்க புதுமுகங்களை வைத்து உருவாகியிருக்கும் இந்த படம் நம்ம ஊரின் அதிகம் அறியப்படாத, ஊக்கம் கிடைக்காத கிராமத்து விஞ்ஞானிகளை பற்றிய படம். எப்படு இருந்தது பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பள தொழில் நடக்கும் அடிப்படை வசதிகளற்ற ஒரு கிராமம். அதில் லைன்மேன் சுப்பையா (சார்லி), அவர் மகன் செந்தில் (ஜெகன் பாலாஜி) வாழ்ந்து வருகிறார்கள். தாய் இல்லாத பிள்ளையை அந்த குறையே தெரியாத வகையில் அவரின் கனவுகளுக்கு மதிப்பளித்து ஊக்கப்படுத்துகிறார் சுப்பையா. எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் பட்டதாரியான அவர் சூரிய வெளிச்சம் மறைந்த உடனே தெரு விளக்குகள் தானாக எரிய வைக்கும் ஒரு திட்டத்தை உருவாக்குகிறார். அதன் மூலம் நிறைய மின் சேமிப்பை உயர்த்தலாம் என்ற உயரிய நோக்கத்துடன் அதற்கு அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரை சந்திக்க பல முயற்சிகள் எடுக்கிறார். ஒரு கட்டத்தில் சென்னைக்கு வந்து முதலமைச்சரை சந்திக்கவும் சில காலம் முயற்சிகள் எடுக்கிறார். எதுவுமே கைகூடாமல் போக, ஊருக்கு திரும்பும் அவர் அந்த கனவை நனவாக்கினாரா? திட்டம் அங்கீகாரம் பெற்றதா? என்பதே கதை.
கதையின் நாயகனாக ஜெகன் பாலாஜி. அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கிறுக்கன் என ஊரில் சில அவமானப்படுத்தப்படும்போதும், கனவை தேடி அலைந்து ஏமாற்றங்களை மட்டுமே அடையும்போதும், முக்கியமான சூழலில் ஒரு முடிவெடுக்கும் தருணம் என அத்தனை காட்சிகளிலேயும் சிறப்பான நடிப்பு. அவரின் தந்தையாக அனுபவமிக்க நடிகர் சார்லி. அன்பான தந்தையாக மிகச்சிறந்த நடிப்பு. லைன் மேன் வேலையில் நேர்மை கடைபிடிக்கும் கதாபாத்திரம்.
முக்கிய கதாபாத்திரங்களில் சரண்யா ரவிச்சந்திரன், விநாயக ராஜ், அருண் பிரசாத், தமிழ் ஆகியோரும் தேவையான நடிப்பை வழங்கி இருக்கின்றனர். ஒரு முக்கியமான காட்சியில் அதிதி பாலன் சிறப்பு தோற்றத்தில் வந்து நடித்தது படத்துக்கு மிகப்பெரிய பலம்.
விஷ்ணு கே ராஜாவின் ஒளிப்பதிவில் தூத்துக்குடியின் உப்பள காட்சிகள் பார்ப்பது புதிய அனுபவம். சென்னையில் குறுகலான தெருக்கள், மேன்சன் போன்றவற்றையும் காட்சிப்படுத்திய விதம் அருமை. தீபக் நந்தகுமாரின் பாடல்களும் பின்னணியும் படத்துக்கு கூடுதல் பலம்.
உப்பள கிராமம், அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கை என இயல்பான ஒரு கதையை திரையில் பார்த்த உணர்வை தருகிறது. அதுவும் அந்த தூத்துக்குடி பேச்சு வழக்கில் பார்க்கும்போது அங்கேயே சென்றது போன்ற ஒரு உணர்வு எழுகிறது. மையக்கதாபாத்திரத்தின் லட்சியம் அதை அடைய எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை நல்ல ஒரு திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் உதயகுமார். ஆனால் இரண்டாம் பாதியில் ஒரு சில கிளைக்கதைகள் வருவது தவிர்த்திருக்கலாம். நீளத்தை அதிகப்படுத்த அந்த விஷயங்களை சேர்த்தது போன்ற உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு சின்ன பட்ஜெட்டில் இது போன்ற ஒரு முயற்சியை எடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.