மலையாளத்தில் ஜோசஃப், இரட்டா, சுருளி, ஜூன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவையும் தாண்டி நல்ல நடிகராக அறியப்பட்டவர் ஜோஜு ஜார்ஜ். தமிழிலும் ஜகமே தந்திரம், பஃபூன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகராக புகழ்பெற்ற ஜோஜூ தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்து முதன் முறையாக இயக்கியிருக்கும் திரைப்படம் பணி. மலையாளத்தில் சில வாரங்களுக்கு முன்பே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தப் படம் தற்போது தமிழில் வெளியாகி இருக்கிறது. மலையாளத்தை போலவே தமிழ் ரசிகர்களை கவர்ந்ததா இந்த பணி? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, திருச்சூரில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் அவரது நண்பர்கள் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து என அந்தப் பகுதியில் அசைக்க முடியாத பலம் பொருந்திய முக்கிய புள்ளிகளாக வலம் வருகின்றனர். அந்த பகுதி மக்கள் மத்தியில் இவர்களுக்கு நல்ல மரியாதை உண்டு. நிறைய வழக்குகள் இருந்தாலும், பெரும் புள்ளிகளை கைக்குள் வைத்திருப்பதால் போலீஸார் இவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கிறார்கள். மறுபுறம் பணத்திற்காக கொலை செய்யும் இரண்டு இளைஞர்கள் அந்த பகுதியில் ஒருவரை கொலை செய்ய, அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. அந்த கொலைக்கும், நாயகன் ஜோஜு ஜார்ஜூக்கும் என்ன சம்பந்தம்? அந்த இரண்டு இளைஞர்கள் எப்படி இவர் வாழ்க்கைக்குள் வந்தார்கள்? அவர்களை ஜோஜூ ஜார்ஜ் என்ன செய்தார்? என்பதை திரில்லர் கலந்த ஆக்ஷன் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜோஜூ ஜார்ஜ்.
ஜோசஃப், இரட்டா, ஆண்டனி போன்ற படங்களை தன்னுடைய அசத்தல் நடிப்பால் தோளில் தாங்கிய ஜோஜூ ஜார்ஜ் இந்த படத்திலும் அசத்தியிருக்கிறார். அவர் கதாபாத்திரத்துக்கு என்று தனியே காட்சிகள் வைக்கத் தேவையில்லை, அவரது தோற்றமும் பாடி லாங்குவேஜூமே பாதி வேலையை செய்து விடுகிறது. ஆக்ஷன் காட்சிகளில் பட்டைய கிளப்பியிருக்கிறார்.
ஜோஜூ ஜார்ஜை அடுத்து படத்தில் அதிகம் ஸ்கோர் செய்வது அந்த இரண்டு இளைஞர்கள் சாகர் சூர்யா, ஜுனைஸ்.வி.பி தான். மிரட்டி எடுத்திருக்கிறார்கள். வேட்டையாடு விளையாடு அமுதன், இளமாறன், நான் மஹான் அல்ல வினோத் கிஷன் ஆகியோரை போலவே மிகச்சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்கிறார்கள். அபிநயா, அபயா ஹிரண்மயி, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர் மற்றும் பல நடிகர்களும் அவர்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நல்ல ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
அனுபவம் மிக்க வேணு, ஜிண்டோ ஜார்ஜ் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம். அவ்வப்போது இடைவெளியில் மாற்றி மாற்றி ஒளிப்பதிவு செய்தது திரையில் ஒரு சில காட்சிகளில் வித்தியாசம் தெரிகிறது. விஷ்ணு விஜய், சாம் சி. எஸ் இசை படத்துக்கு மிகப்பெரிய பக்க பலம். படத்தின் தன்மைக்கேற்ப நம்மை செட் செய்கிறது பின்னணி இசை.
ஜோஜு ஜார்ஜ் இயக்கியிருக்கும் முதல் படம், எப்படி இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்புடன் பார்க்க ஆரம்பித்தோம். ரசிக்கத்தக்க வகையில் முதல் படத்திலேயே ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும் விதம் அபாரம். வன்முறையாக காட்சிகளும் அடேங்கப்பா போட வைக்கிறது. முதல் பாதி பரபரப்பாக நகரும் கதை, இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் மெதுவாகவே நகர்கிறது. கிளைமாக்ஸில் வேகம் எடுத்து நல்ல திருப்தியை தந்து முடிகிறது. படத்தில் சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும், மேக்கிங்கில் சில இடங்களில் ஆவரேஜாக இருந்தாலும் ஒரு கமெர்சியல் படமாக கொடுத்து நம்ம எதையும் யோசிக்க விடாமல் கட்டிப் போட்டதற்கு இயக்குனர் ஜோஜு ஜார்ஜூக்கு பாராட்டுக்களை சொல்லியே ஆக வேண்டும். முதல் படத்திலேயே தன்னை ஒரு இயக்குனராகவும் நிரூபித்திருக்கிறார்.