மலையாளத்தில் வெளிவந்திருக்கும் ஒரு ஃபேன்டஸி திரைப்படம் தான் ககனாச்சாரி. அஜூ வர்கீஸ், அனார்கலி மரிகார், கோகுல் சுரேஷ், கணேஷ் குமார் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் 2040-களில் நடக்கும் ஒரு ஃபேண்டஸி படமாக உருவாகியிருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் கிராஃபிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இப்படிப்பட்ட படத்தை கொடுக்க முடியுமா? என்ற ஒரு கேள்விக்கு விடையாக வந்திருக்கும் ஃபேண்டஸி காமெடி படம் தான் இந்த ககனாச்சாரி. ரசிகர்களுக்கு பிடிக்குமா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, 2040-களில் மழை வெள்ள பாதிப்பு, ஏலியன்கள் பூமிக்கு படையெடுப்பு, அரசின் அடக்குமுறை என அச்சத்துடன் வாழும் மக்கள், அவர்களை அரசு தொடர்ந்து கண்காணிப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரர் கணேஷ் குமார் என்பவரை பற்றி ஆவணப்படம் எடுப்பதற்காக சேனல் ஒன்று அவரை சந்திக்கிறது. அந்த ஆவணப்படத்துக்காக அவர்கள் கொடுக்கும் பேட்டியின் மூலமாக கதை விரிகிறது. கணேஷ்குமார் AI என்று சொல்லப்படக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தங்கள் பாதுஜாப்புக்கு எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அறிந்து பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை தயார் செய்து பாதுகாப்பான சூழலில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு உதவியாளர்களாக கோகுல் சுரேஷ் மற்றும் அஜு வர்கீஸ் அவருடனே தங்கி அவருக்கு பணிவிடை செய்து வருகிறார்கள். கோகுல் பெண்களே இல்லாத ஒரு வறட்சியான வாழ்வை வாழ்ந்து வருகிறார். அஜூ வர்கீஸ் தினம் ஒரு பெண்ணுடன் சுற்றுபவர். இந்த நிலையில் ஒரு பெண் ஏலியன் இவர்கள் வசிக்கும் இடத்துக்குள் புகுந்து விடுகிறது. பெண் கிடைக்காத ஏக்கத்தில் இருக்கும் கோகுல் சுரேஷ் அவர் மீது காதல் வயப்படுகிறார். அந்த ஏலியன் உடன் வாழ்ந்து வரும் அவர்கள் இறுதியில், ஏலியனை திருப்பி அனுப்பினார்களா? கோகுல் காதல் என்ன ஆனது? பூமியில் நடக்கும் ஏலியன் தாக்குதலுக்கு காரணம் என்ன? என்பதை காமெடியாக சொல்வதே மீதிக்கதை.
விக்டராக வரும் கணேஷ் குமார் ஒரு முன்னால் ராணுவ வீரராக, தனக்கே உரிய மிடுக்குடன் ஒரு ஆளுமையுடன் அதே நேரத்தில் காமெடி காட்சிகளில் ரசிக்க வைக்கும் உடல்மொழியுடன் ஸ்கோர் செய்கிறார். அஜூ வர்கீஸ் காமெடி காட்சிகளில் பின்னி எடுக்கிறார். ஏலியனின் வாய்ஸ் ஃபிக்ஸ் செய்து தருகிறேன் என சொல்லி அதற்கு அவர் கொடுக்கும் வாய்ஸ் செம்ம காமெடி. பெண் வாசமே இல்லாத கோகுல் சுரேஷ் ஏலியன் மீது காதல் கொள்ளும் காட்சிகள், ஏக்கம் என நல்ல நடிப்பு. இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடுகிறார் அனார்கலில் மரிகார். வாய் திறந்து பேசாமல், எந்த ஒரு வசனமுமே இல்லாமல் தன் நடிப்பின் மூலமே ரசிக்க வைக்கிறார். வாய்ஸ் வந்தவுடன் அவர் பேசுவதும் நல்ல காமெடி.
ஒளிப்பதிவாளர் சுர்ஜித் ஒளிப்பதிவு வேறு உலகுக்கு நம்மை அழைத்துச் சென்ற அனுபவத்தை கொடுக்கிறது. அதற்கான லைட்டிங், கேமரா கோணங்கள் என கடுமையாக உழைத்திருக்கிறார். குறைந்த பட்ஜெட்டிலும் நல்ல கிராஃபிக்ஸ் காட்சிகளை செய்த குழுவுக்கு பாராட்டுக்கள். சங்கர் சர்மாவின் இசை படத்துக்கு பலம். நல்ல ஒரு டிஜே போல அவ்வப்போது படத்தின் மூடை தன் இசையால் தூக்கி நிறுத்துகிறார். இந்த கதைக்கு தேவையான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார். சவுண்ட் டிசைனும் இந்த படத்தில் பலம்.
ஒரே படத்தில் ஏலியன் இன்வேஷன், காலநிலை மாற்றங்கள், AI, எதிர்கால உலகம் என பல்வேறு விஷயங்களை இந்த ஒரே படத்தில் அதுவும் காமெடி கலந்து சொல்லியிருக்கும் இயக்குனர் அருண் சந்துவை பாராட்டியே ஆகவேண்டும். சமீபத்தில் கல்கி படத்தில் வந்த பணத்துக்கு பதில் யூனிட்ஸ் என்ற முறை மாதிரி இங்கேயும் பாயின்ட்ஸ் என மாற்றிக் கொள்கிறார்கள். கதை ஒரே இடத்தை சுற்றி சுற்றி வருவது கொஞ்சம் போராகத் தான் இருக்கிறது. நான்கு சுவற்றுக்குள் நடக்கும் கதை என்பதாலும், 4 கதாபாத்திரங்களை சுற்றியே நடக்கும் கதை என்பதாலும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. காமெடியும் ஒரு கட்டத்திற்கு மேல் கொஞ்சம் சுமாராகவே இருக்கிறது. மற்றபடி இந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு முயற்சியை எடுத்த இயக்குனருக்கும், மொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.