மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள கிராமத்து விளையாட்டு பின்னணியிலான பிரம்மாண்ட திரைப்படம் ‘பெத்தி’ நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ் ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
இப்படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளதுடன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், திவ்யேந்து சர்மா, ஜகபதி பாபு மற்றும் போமன் இரானி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ‘பெத்தி’ படக்குழு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்து வருகிறது. போபாலில் நடைபெற்ற மிகப்பெரிய விழாவிற்கு பிறகு, தற்போது டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து படத்தை பற்றி பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய போமன் இரானி, “இந்திய கிராமங்களில் மறைந்து கிடக்கும் உண்மையான திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படம் தான் ‘பெத்தி’. இந்த படத்தை பார்த்த பிறகு ஒவ்வொரு இளைஞரும் ‘பெத்தி’ போல ஆக வேண்டும் என்ற ஊக்கத்தை பெறுவார்கள். இந்திய விளையாட்டுத் துறையில் மறைந்து கிடக்கும் திறமைகளுக்கு சரியான வாய்ப்புகள், பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த படம் உருவாக்கும்,” என்றார். மேலும், இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும் கூறினார்.
திவ்யேந்து சர்மா பேசுகையில், “இவ்வளவு திறமையான கலைஞர்களுடன் ஒரே படத்தில் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ராம் சரண் உடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. ‘பெத்தி’ என்பது அடையாளத்திற்கான போராட்டத்தை சொல்லும் உயிர்ப்புடன் கூடிய ஒரு சர்வைவல் கதையாக இருக்கும்,” என்றார்.
தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு, “என் முதல் தயாரிப்பாக இப்படம் உருவாகுவது பெருமையாக உள்ளது. இந்திய கலாச்சார வேர்களை கொண்ட ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அதேசமயம் விறுவிறுப்பான கதையாக ‘பெத்தி’ இருக்கும். குடும்பத்துடன் குழந்தைகளையும் திரையரங்கிற்கு அழைத்து வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
நாயகி ஜான்வி கபூர், டெல்லியின் வெப்பத்தை பற்றி நகைச்சுவையாக பேசிக்கொண்டே, தனது கதாபாத்திரம் இயக்குநர் புச்சி பாபு சனாவின் தனித்துவமான அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டதாக கூறினார். ராம் சரண் இன் அர்ப்பணிப்பு குறித்து பேசுகையில், “கேமரா ஆஃப் ஆனதும் அமைதியாக இருப்பார். ஆனால் ஷாட் ஆரம்பித்தவுடன் திரையே வெடிக்கும் அளவிற்கு ஆற்றலை வெளிப்படுத்துவார்,” என்று பாராட்டினார்.
மேலும், “இந்த படம் இந்தியாவின் புறக்கணிக்கப்பட்ட மக்களின் அடையாளப் போராட்டத்தை பேசும் ஒரு மாஸ் என்டர்டெய்னர். இந்த படம் உண்மையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றும் கூறினார்.
ராம் சரண் பேசுகையில், “கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் இந்த படத்திற்காக உண்மையுடன் உழைத்துள்ளோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை திரையரங்கிற்கு அழைத்து வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும். இந்திய மண்ணின் வாசனையுடன் உருவாகும் கதைகளே உலகளவில் கொண்டாடப்படுகின்றன. ‘பெத்தி’ அப்படிப்பட்ட ஒரு கதை,” என்றார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி யை சந்தித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். மேற்கு வங்கத்தை சேர்ந்த முகம்மது என்ற இளைஞர், தனது கிராமத்திலிருந்து மேலும் 80 பேரை இந்தியாவுக்காக விளையாட ஊக்குவித்த சம்பவத்தை பிரதமர் கூறியதாக தெரிவித்தார். “அப்படிப்பட்ட உண்மையான இந்திய ஆன்மாவையும், கிராமத்து மக்களின் உறுதியையும் ‘பெத்தி’ படம் கொண்டாடுகிறது,” என்றார்.
தனது மாறுபட்ட தோற்றங்கள் குறித்து பேசுகையில், “ஒவ்வொரு கதாபாத்திர மாற்றமும் சவாலானதே. குறிப்பாக மல்யுத்த வீரர் தோற்றம் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் நான் கதையின் தேவையை மட்டுமே பின்பற்றினேன்,” என்றார்.
இறுதியாக, “உண்மையான இந்திய ஆன்மாவையும், போராட்ட மனப்பாங்கையும் கொண்ட ‘பெத்தி’ படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து அனுபவிக்க வேண்டும்,” என்று ராம் சரண் அழைப்பு விடுத்தார்.
“பெத்தி” படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது

