படம் பிடிக்கலன்னா விமர்சனம் செய்யுங்க – ஆர்.ஜே.பாலாஜி ஓபன்!

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர். ஜே. பாலாஜி, செல்வராகவன், நட்டி என்கிற நட்ராஜ், சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா ச‌க்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘சொர்க்கவாசல்’. பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்ய, கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரைலரை வெளியிட்டனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். முதலுஇல் வெளியான டீசர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். அப்போது ‘ஆர்.ஜே பாலாஜி எனும் நடிகர் வருகை தருகிறார்’ என குறிப்பிட்டேன். படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். நிறைய ஜெயில் சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்த படத்தில் வந்திருக்கிறது, சொர்க்க வாசல் ரிலீஸூக்கு பின் தான் என்னுடைய ‘கைதி 2’ படத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா, இல்லையா என்பது தெரியவரும்” என்றார்.

இசையமைப்பாளர் அனிருத் பேசும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள் தான். ஒளிப்பதிவு செய்திருக்கும் பிரின்ஸ் ஆண்டர்சன் மும்பையில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் மகனான சாண்டோவின் உதவியாளர். அவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் படம் இது. இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் பள்ளியில் எனக்கு இரண்டு வருட ஜூனியர். அந்தத் தருணத்தில் அவருக்கு சினிமாவில் ஆர்வம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. அதன் பிறகு ஒரு நாள் என்னை சந்தித்து திரைப்பட இயக்குநராக வேண்டும் என தெரிவித்தார். அதன் பிறகு ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, மூன்று திரைப்படங்களில் பணியாற்றி ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக விவரித்துவிட்டு, யார் நாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என என்னிடம் கேட்டார். நான் அப்போது இதற்கு என்னுடைய நண்பரான ஆர். ஜே. பாலாஜி தான் பொருத்தமானவராக இருப்பார் என்று மனதில் பட்டதை உடனே சொன்னேன். நான் இசையமைப்பாளராக வாழ்க்கையை தொடங்கும் போது ஆர். ஜே. பாலாஜி பண்பலை வானொலியில் தொகுப்பாளராக புகழ்பெற்று இருந்தார். அப்போது அவருடன் பேசுவது எங்களுக்கெல்லாம் பெருமிதமாக இருக்கும். ஆர் ஜே வாக கலை உலக பயணத்தை தொடங்கி இன்று நடிகராக உயர்ந்திருக்கிறார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் கமர்ஷியலாக வெற்றி பெற்று இருக்கின்றன‌. அவர் நடிக்கும் படங்களுக்காக‌ கடினமாக உழைப்பார். காமெடியனாக நடித்திருக்கிறார், கமர்ஷியலாக நடித்திருக்கிறார், ஆனால் இந்த திரைப்படத்தில் அவர் ஒரு அற்புதமான நடிகராக உருமாற்றம் பெற்றிருக்கிறார். செல்வராகவன் இந்தத் திரைப்படத்திற்கு ஒரு தூணாக இருக்கிறார்” என்றார்.

நடிகர் ஆர். ஜே. பாலாஜி பேசும்போது, “கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இவர்கள் படத்தை ரசித்து ரசித்து எடுப்பதையும் பார்த்து இருக்கிறேன். நான் நடித்த ஒரு படத்தை ரிலீஸிற்கு நான்கு நாள் இருக்கும் இந்த தருணத்திலும் நான் இதுவரை பார்க்கவில்லை. அதற்கு காரணம் நான் இவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. கதாசிரியர் தமிழ் பிரபாவின் எழுத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கும் சானியா ஐயப்பன், இந்த திரைப்படத்தின் விளம்பர நிகழ்விற்கு வருகை தந்திருக்கிறார். படத்திற்கும் சிறப்பாக புரொமோஷன் செய்து வருகிறார். செல்வராகவன் திரையில் தோன்றினாலே பெரிய நட்சத்திர நடிகர் போல் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவர் எப்போதும் அமைதியாக இருப்பார். அவருக்கு நண்பர்களும் குறைவு. படபிடிப்பு தளத்தில் மிக குறைவாகவே பேசுவார். மிகப்பெரிய ஸ்டார் இந்த படத்தில் இருக்கிறார் என்ற உணர்வே எங்களுக்கு இருந்தது. நான் சூர்யாவின் படத்தை இயக்கிக் கொண்டிருப்பதற்கும், இப்படத்தின் தயாரிப்பாளரான சித்தார்த் ராவிற்கு பங்கு உண்டு. எல் கே ஜி படம் வெளியான தருணத்திலிருந்து என்னுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த படத்தின் கதையை இரவு 10 மணி அளவிற்கு கேட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் இணைந்து பணியாற்றலாம் என சம்மதம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் வெளியான தருணத்திலிருந்து இதுவரை 13 ஆண்டுகள் கடந்து விட்டது. முதல்முறையாக என்னுடைய மனைவி திவ்யா நாகராஜன் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருக்கிறார். நான் 2006ம் ஆண்டிலிருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். விற்பனை செய்வதற்காக ஒரு கடைக்கு நாம் பிஸ்கட்டை எடுத்து சென்று விட்டால் அதை மற்றவர்கள் நன்றாக இருக்கிறது. இல்லை என்று சொல்லத்தான் செய்வார்கள். அதேபோல் தான் சினிமாவும். ரசிகர்களை சென்றடைந்த பின் ஒரு படத்தைப் பற்றி அவர்கள் விமர்சனம் செய்வார்கள். ஒரு படம் வெளியான பிறகு அதைப்பற்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யூடியூபில் விமர்சிக்கலாம்… ட்விட்டரில் விமர்சிக்கலாம் .. இன்ஸ்டாகிராமில் விமர்சிக்கலாம். அது அவர்களுடைய சுதந்திரம். யாரும் அவர்களிடத்தில் இருக்கும் செல்போனை பறிக்க முடியாது. அதனால் விமர்சனம் குறித்த கட்டுப்பாடு நம்மிடத்தில் இல்லை.

சொர்க்கவாசல் படத்தில் கன்டென்ட் நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்து நன்றாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இவர்கள்தான் என்னுடைய அடுத்த படத்தின் தயாரிப்பாளர்கள். இந்தப் படத்தின் விநியோகஸ்தர்கள். போட்டிகள் நிறைந்த சூழலில் ஓடிடி எனப்படும் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பது கடினமாக இருக்கும். ஆனால் நல்ல தொகையை கொடுத்து இப்படத்தின் உரிமையை வாங்கி இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போதெல்லாம் பயம் அதிகமாக ஏற்படுகிறது. வெளியில் தேசியக்கொடி ஒன்றினை கையில் ஏந்தி கொண்டு இந்தியன் என்ற உணர்வோடு இருந்தால் அதற்கும் ஏதாவது விமர்சனம் செய்வார்களோ என்ற பயம் ஏற்படுகிறது. நான் பாவாடையும் கிடையாது. சங்கியும் கிடையாது. அனைத்து அரசியல் கட்சியின் ஐ டி விங்கிடம் ஒரு பணிவான வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் அரசியலை மட்டும் பாருங்கள். சினிமாவை விட்டு விடுங்கள். சினிமாவில் வாரந்தோறும் திரைப்படங்கள் வெளியாகின்றன‌. திரைப்படங்களை விமர்சித்து அதனை அழிப்பதில் எதற்காக உங்களுடைய ஆற்றலை வீணடிக்கிறீர்கள். அதேபோல் ரசிகர்களிடத்திலும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன், அதாவது ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் என எல்லா ரசிகர்களும் நல்ல திரைப்படங்களை பாருங்கள். படம் பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்யுங்கள். அது உங்கள் உரிமை. ஆனால் அவர்கள் படம் வந்தால் அடிக்க வேண்டும் என்று வேலை செய்யாதீர்கள், டார்கெட் செய்து விமர்சனம் செய்யாதீர்கள். இதற்கு உங்களுடைய ஆற்றலை வீணடிக்காதீர்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *