இது சின்ன படங்களின் காலம் – கே.ராஜன் அதிரடி பேச்சு!

எம்கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் மணி மூர்த்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இந்த படத்தில் நாயகனாக அசோக்குமார் நடிக்க, அனுஸ்ரேயா ராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசனும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார். ரகு ஸ்ரவன் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நாயகன் அசோக்குமார் பேசும்போது, “ஆல்பர்ட் என்ற நண்பர் மூலம் இயக்குநர் அறிமுகம் கிடைத்தது, இந்த லாரா படத்தின் வாய்ப்பும் கிடைத்தது. என்னிடம் வருபவர்கள் ஒரு சின்ன பட்ஜெட் படம் இருக்கிறது என்று தான் ஆரம்பிப்பார்கள். அதை எல்லாம் நம்ப முடியாது. ஏனென்றால் அவர்கள் கதைக்கு செலவு செய்யக்கூடிய தயாரிப்பாளராக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டி இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கதைக்கேற்ற செலவுகளை செய்து தந்தார். லாரா ஒரு இன்வெஸ்டிகேஷன் கிரைம் த்ரில்லர். நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள், ஆனாலும் அனுபவசாலிகள் போல் நடித்திருக்கிறார்கள். நல்ல படங்கள் ஜெயிக்க வேண்டும், அப்போது தான் மேலும் நல்ல படங்கள் உருவாகும்” என்றார்.

சிறப்பு விருந்தினர் கே. ராஜன் பேசும்போது, “சென்னைக்கு வந்து பல கஷ்டங்களை பட்டு, எதுவும் சாதிக்க முடியாததால் கோயம்புத்தூர் சென்று அங்கு உழைத்து, முன்னேறி நிறைய சம்பாதித்து வந்திருக்கிறார். அவருக்காக நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும். இந்த படம் வெற்றி பெறாவிட்டால் கூட இந்தத் தயாரிப்பாளர் அடுத்த படம் எடுக்க வேண்டும். இந்த லாரா படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன், மிகச்சிறப்பாக இருந்தது. குறுகிய நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு படத்துக்கு கதை தான் முதல் ஹீரோ. அதை விட்டு ஹீரோக்களுக்கு கொட்டிக் கொடுத்தால் அவர்கள் நன்றாக இருப்பார்கள், கொட்டிக் கொடுத்த தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வருவார்கள். இருநூறு தயாரிப்பாளர்கள் நடுத்தெருவில் இருக்கிறார்கள். முன்னூறு, நானூறு படங்கள் வெளியிட முடியாமல் முடங்கி கிடக்கின்றன. ஆனால் இது சின்ன படங்களின் காலம். நல்ல கதையம்சம் உள்ள சின்ன படங்கள் எல்லாம் ஓடுகின்றன. வாழை, லப்பர் பந்து போன்ற சின்ன படங்களின் வெற்றியே இதற்கு சான்று. பெரிய படங்கள் வெற்றியை குவிக்கவில்லை. படத்துக்கு விமர்சனங்கள் தேவை தான். ஆனால் நன்றாக இருந்தால் நல்லதாக எழுதுங்கள், குறை இருந்தால் குறைகளை சுட்டிக் காட்டுங்கள், சின்ன படங்களைக் காப்பாற்றுங்கள். ஒரு முன்னணி தமிழ் ஹீரோ ஒன்பது பேரிடம் பல கோடிகள் அட்வான்ஸ்  வாங்கி போட்டிருக்கிறார். அதும் போதாது என்று இந்திக்கும் நடிக்க போய் விட்டார். இது தான் இன்றைய தமிழ் சினிமா நிலை” என்றார்.

இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “ஒரு நல்ல படத்திற்கு நல்ல கதை வேண்டும் என்கிறார்கள். ஆனால் நான் ஒரு மொக்கை கதையை வைத்து கொண்டே சிங்காரவேலன் படத்தை எடுத்தேன். கமல்ஹாசனை வைத்துக் கொண்டு கதையே இல்லாமல் ஒரு படம் எடுக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும்? லொள்ளு வேண்டும்? சின்ன வயதில் ஜட்டி பனியனோடு காணாமல் போன ஒரு சின்ன பெண்ணை தேடிக் கண்டுபிடித்து திருமணம் செய்கின்ற கதாநாயகன் என்ற இந்த எளிய லைன் தான் கதை. இப்போது இதை கதையாக சொன்னால் ஒப்புக் கொள்வார்களா? அப்போது கதை, காட்சிகள் எல்லாம் பெரிதாக யோசிக்கவே இல்லை. போகிற போக்கில் எழுதியவை தான். அந்தப் பட விளம்பரத்தில் மூளையைக் கழற்றி வீட்டில் வைத்து விட்டு வாருங்கள் என விளம்பரம் செய்தேன். இந்த லாரா படம் ஓடவில்லை என்றாலும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அடுத்த படம் எடுக்க வேண்டும். இவர் எங்கள் கோயமுத்தூர்காரர். அடுத்த பட வாய்ப்பை எனக்குக் கொடுத்தால் இந்தப் படத்தை விட ஒரு கோடி குறைவான பட்ஜெட்டில் எடுத்துக் கொடுக்க நான் தயார். என்னைச் சந்திப்பவர்கள் நான் இப்போது ஏன் படம் எடுப்பதில்லை என்று கேட்கிறார்கள். நானா முடியவில்லை என்கிறேன். யாரும் வாய்ப்பு தருவதில்லை. நான் சூப்பர் ஸ்டார் ரஜினி, இளையராஜா, ஏவிஎம் என்று எவ்வளவோ உச்சங்களை பார்த்தவன். உச்சியில் ஏறி விட்டால் நீண்ட நேரம் அங்கேயே இருக்க முடியாது. கீழே இறங்கித் தான் ஆக வேண்டும். இப்படி தான் ஒவ்வொரு பெரிய இயக்குநரும் மேலே சென்று இறங்கியதால் தான் அடுத்தடுத்து வந்தவர்கள் மேலே ஏற முடிகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *