வன்முறை படங்களால் பிஞ்சு நெஞ்சில் விஷத்தை விதைத்திருக்கிறோம் – இயக்குனர் வருத்தம்!

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆலன்’. வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, ‘அருவி’ மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர். சிவா பேசும்போது, “இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் எழுத்தாளர்களைப் பற்றி பேசி இருக்கிறேன். ஏன் எழுத்துக்களை பற்றி பேசினேன்? என்றால்.. என்னுடைய 12 வயது முதல் 18 வயது வரை நிறைய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். கையில் கிடைக்கும் புத்தகங்கள் அனைத்தையும் படித்திருக்கிறேன். இந்த தருணத்தில் என்னுடைய பெற்றோர்கள் எப்போதும் என்னுடைய வாசிப்பிற்கு ஆதரவாகவே இருந்தார்கள். வாழ்க்கைக்கு புத்தகத்தை படிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் நான் தெரிந்து கொண்டேன். இயக்குநர் கே. பாக்யராஜ் எழுதிய திரைக்கதை எழுதுவது எப்படி? என்ற புத்தகத்தை தேடி வாசித்த பிறகு தான் சினிமா மீது எனக்குள் ஒரு ஆவல் வந்தது. நாமும் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும்… இயக்குனராக வேண்டும்… என்று எண்ணி சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கு முயற்சித்தேன். ஆனால் குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாகவும், குடும்ப பொறுப்பினை சுமக்க வேண்டும் என்பதற்காகவும் சிங்கப்பூருக்கு சென்றேன். அங்கு என்னுடைய வாழ்க்கை முப்பது ஆண்டுகள் கழிந்தது. அங்கு ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியராக ஒரு நிறுவனத்தை தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.  புத்தகம் வாசிப்பது குறைந்துவிட்டது. பெற்றோர்களும் குழந்தைகளுக்கு புத்தகம் வாசிப்பதை ஊக்கப்படுத்தவில்லை. தமிழில் லட்சக்கணக்கான எழுத்துக்கள் இருக்கிறது. லட்சக்கணக்கான புத்தகங்கள் இருக்கிறது. தயவுசெய்து உங்கள் வீட்டுப் பிள்ளைகளை புத்தகங்களை வாசிக்க சொல்லுங்கள். நான் புத்தகங்களை வாசிக்க தொடங்கும் போது வயது 12. எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என்னுடன் 18 மாணவர்கள் படித்தனர்.

கோவிட் காலகட்டத்தில் எனக்கு நான்கு மாதம் ஓய்வு கிடைத்தது. அப்போதுதான் என் ஆழ் மனதில் விதைத்த விதை எட்டிப் பார்த்தது. ஏதாவது எழுத வேண்டும்… ஏதாவது செய்ய வேண்டும்… என்ற உந்துதல் ஏற்பட்டது. அதனால் தான் இரண்டாவது படமாக ‘ஆலன்’ எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறேன். இது ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை. இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்று இருந்தோம். அங்கு நான்கு ஐந்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  அவர்களுக்கு ஐந்து அல்லது ஆறு வயது தான் இருக்கும். அவர்களில் ஒருவன் ஓடி வந்து என்னிடம் இது திரைப்படமா? எனக் கேட்டார். ‘ஆம்’ என்று பதிலளித்துவிட்டு, நடிக்கிறாயா?  என கேட்டேன். வில்லனாக நடிக்கிறேன் என பதில் அளித்தான். ஏன்? என்று கேட்டபோது, ‘அப்போதுதான் வெட்டலாம். குத்தலாம்’ என பதில் அளித்தான். ஒரு பிஞ்சு மனதில் எந்த மாதிரியான நஞ்சினை விதைத்திருக்கிறோம் என அதிர்ச்சி அடைந்தேன். வன்முறையை.. அவனுக்கு இங்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய பாவம் இல்லையா? மனசாட்சி இல்லையா? எதை விதைக்கிறோம்..? இங்கு நான் நல்ல விசயத்தை சொல்வதற்கு.. புத்தகத்தை படியுங்கள் என்று சொல்வதற்கு சிங்கப்பூரிலிருந்து நான் இங்கு வர வேண்டியதாக இருக்கிறது. நான் இங்கு சம்பாதிப்பதற்காக வரவில்லை. இது என் மனசின் ஆதங்கம்…! வேதனை…!  வலி…!எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்? .. இதுதான் என்னை இந்த படத்தை இயக்கத் தூண்டியது. எழுத்தைத்தான் இந்தப் படத்தில் அழுத்தமாக பேசி இருக்கிறேன்.

என் குருநாதர் கே. பாக்யராஜ். அவருடைய எழுத்தில் வெளியான பாக்யா எனும் வார இதழின் முதல் பிரதியை வாங்குவதற்காக 12 கிலோமீட்டர் அதிகாலையிலேயே பயணித்து வாங்கி படித்திருக்கிறேன். இன்று இங்கு சிறப்பு விருந்தினராக கே. பாக்யராஜ் வருகை தந்ததற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் .

‘ஆலன்’ படத்தினை வழங்கும் விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஜி. தனஞ்ஜெயன் பேசுகையில், ” இந்த திரைப்படத்தை நண்பர் ஒருவர் மூலமாக பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் டைட்டில் ஆலன் என்று இருந்தது. இது ஆங்கில படமா..! என்ற சந்தேகமும் எனக்குள் இருந்தது. நான் தினமும் நிறைய படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தை பார்க்கத் தொடங்கியவுடன் தொடர்ந்து பார்த்தேன். இந்த படத்தை பார்த்தவுடன் இயக்குநர் சிவாவின் நம்பிக்கை தெரிந்தது. சிங்கப்பூரில் தொழிலதிபராக இருக்கும்  அவருக்கு சினிமா மீது ஒரு தீராத காதல். அங்கிருந்து இங்கு வருகை தந்து படத்தை இயக்கி விட்டு மீண்டும் அங்கு சென்று விடுகிறார். அவருக்காக இங்கு ஒரு குழு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது. பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் ஆத்மார்த்தமாக நேசிக்கும் சினிமாவை எந்தவித சமரசம் இன்றி உருவாக்கி இருக்கிறார். காதலும் அன்பும் கலந்த ஒரு படைப்பை தந்திருக்கிறார். இந்த உலகத்திற்கு காதல்தான் முக்கியம் வன்முறை முக்கியமல்ல. அன்பைத் தேடி நாம் பயணித்தால் போதும்… வாழ்க்கை சிறக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்பதை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார். இந்த திரைப்படத்தை நான் ஒரு கவித்துவமான படைப்பாக பார்க்கிறேன். இந்தப் படத்தை பற்றி அவர் என்னிடம் பேசும் போது இந்த திரைப்படம் மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு உதவி செய்யுங்கள் என்று தான் கேட்டார். ஒரு படைப்பாளியாக வெற்றி பெற வேண்டும் என்றார். நானும் அவரைப் போல் சினிமாவை நேசிப்பதால் இதற்கு என்னாலான உதவிகளை செய்ய சம்மதித்தேன். இந்தப் படத்திற்காக நான் சில ஆலோசனைகளை வழங்கிய போது எந்தவித மறுப்பும் சொல்லாமல் செய்தார். நடிகர் வெற்றி அவருடைய பயணத்தில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ‘எட்டு தோட்டாக்கள்’, ‘ஜீவி’, ‘பம்பர்’ என வித்தியாசமான கதையையும் தேர்வு செய்து நடித்து வருகிறீர்கள்” என்றார்.

நடிகர் வெற்றி பேசும்போது, “தொடர்ந்து திரில்லர் திரைப்படங்களை தான் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு காதல் படத்தில் நடிப்போம் என்று யோசித்து கொண்டிருக்கும்போது.. சிவா சார் இப்படத்தின் திரைக்கதையை என்னிடம் கொடுத்தார். படித்தவுடன் இரண்டு விசயங்கள் தான் எனக்குள் தோன்றியது. இந்தப் படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரிக்க முடியாது. பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் உருவாக்க வேண்டும். அடுத்ததாக இசையமைப்பாளர் திறமையானவராக இருக்க வேண்டும் என நினைத்தேன். காதல் கதை என்பதால் இது முக்கியம் என தயாரிப்பாளிடம் சொன்னேன். அவரே இயக்குநர் என்பதால் அவருடைய கற்பனைக்காக செலவு செய்ய தயாராக இருந்தார். படத்தினை கஷ்டப்பட்டு தான் உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்த சக கலைஞர் அனைவரும் நன்றாக தங்களுடைய உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா சிறந்த இசையை வழங்கி இருக்கிறார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *