RRR படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “தேவரா”. இரண்டு பாகமாக உருவாகும் என சொல்லப்பட்டு முதல் பாகம் தற்போது வெளியாகியிருக்கிறது. நம்ம ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருப்பது தமிழ்நாட்டில் படத்துக்கு மிகப்பெரிய விலாசத்தையும், ஆந்திரா ஓபனிங்கில் மிகப்பெரும் பங்கையும் வகிக்கிறது. RRR தந்த பான் இந்தியா வெற்றியை இந்த தேவரா தக்க வைக்குமா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, 1996ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவில் உலகக்கோப்பை நடக்கும் நேரத்தில் முன்னெச்சரிக்கையாக பெரிய கேங்ஸ்டர்களை அடக்கும் பொறுப்பு காவல்துறைக்கு வருகிறது. எத்தி என்ற கேங்ஸ்டரை தேடி ஆந்திர, தமிழ்நாடு எல்லையில் ரத்தினகிரி என்ற இடத்தில் செங்கடல் என்ற பகுதிக்கு செல்கிறார்கள். அங்கு தேவரா என்ற மிகப்பெரும் வீரன் இருந்ததையும் அவன் கடலில் மாவீரனாய் திகழ்ந்ததையும், அவன் கொடுத்த பயத்தால் கடலில் கடத்தலில் யாரும் ஈடுபடாமல் இருப்பதாக பிரகாஷ்ராஜ் ஒரு கதையை காவல்துறை அதிகாரிகளிடம் சொல்கிறார். 4 ஊர் மக்களுக்கு தலைவனாக இருந்தாலும் ஆரம்பத்தில் கடலில் முறைகேடாக வரும் ஆயுதங்களை 4 ஊர் நண்பர்களான சையிஃப் அலிகான், கலையரசன், ஸ்ரீகாந்த், ஷன் டாம் ஷாக்கோ போன்றோருடன் சேர்ந்து கடத்தும் வேலையை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் அந்த கடத்தல் வேலை மோசமானது என தெரிய வர, இனிமேல் யாரும் கடத்தலில் ஈடுபட கூடாது என கட்டளை இடுகிறார். ஆனால், பணத்தாசை கொண்ட சையிப் அலிகான் மற்றும் கூட்டாளிகள் தேவராவை கொல்ல முயற்சிக்கிறாகள். அதில் தேவரா என்ன ஆனார்? எங்கே போனார்? என்பதே மீதிக்கதை.
ஜுனியர் NTR தேவரா, வரா என இரட்டை வேடங்களில் இரண்டு பரிமாணங்களில் கலக்குகிறார். அப்பா, மகன் என இரண்டிலும் எந்த குறையும் வைக்காமல் ஸ்கோர் செய்கிறார். பாடல்களிலும் பட்டைய கிளப்புகிறார். குறிப்பாக அப்பா ரோலில் ரசிகர்கள் மனதில் மரியாதையான இடம் பிடிக்கிறார். நாயகி ஜான்வி கபூர் ஒரே ஒரு பாடல் காட்சிக்கு மட்டுமே வந்து செல்கிறார். அத்தோடு ஒரு சில காட்சிகளில் வெறுமனே வந்து செல்கிறார். இரண்டாம் பாகத்தில் ஏதாவது முக்கியத்துவம் இருக்குமோ?. சையிஃப் அலிகான் மெயின் வில்லன், ஆனாலும் அவ்வளவு அழுத்தம் இல்லை. கலையரசன், ஸ்ரீகாந்த், ஷைன் டாம் சாக்கோ, பிரகாஷ் ராஜ் என அவரவர் தங்கள் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்கள்.
ரத்னவேலு ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். பிரமாண்டத்தை காட்டும் அவரது உழைப்பு திரையில் தெரிகிறது. ஜூனியர் என்டிஆர்க்கு பின் படத்தின் இரண்டாவது ஹீரோ அனிருத் தான். அவர் தான் ஒத்தை ஆளாக படத்தை தூக்கி நிறுத்துகிறார். ஃபியர் பாடல், பத்த வைக்கும் பாடம் என பாடல்களும் பட்டைய கிளப்ப, அதே நேரம் BGM தெறிக்க விட்டுள்ளார். படம் முழுக்க கடல் சார்ந்த கதை என்பதால் படத்தில் நிறைய கிராஃபிக்ஸ் காட்சிகள், அவற்றை முடிந்தவரை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
கொரட்டலா சிவா ஆச்சார்யா என்ற படுதோல்வி படத்துக்கு பிரகு இயக்கும் படம் என்பதாலேயே கொஞ்சம் எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது. ஆனால் திரைக்கதை ஓரளவுக்கு காப்பாற்றியிருக்கிறது. முதல் பாதியில் தேவரா சுற்றி நடக்கும் கதை நன்றாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாகவே நகர்கிறது. முதல் பாதி சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவு. அதே நேரம் கிளைமாக்ஸில் பாகுபலி போல படத்தை ஒரு முக்கிய புள்ளியில் முடித்து இரண்டாம் பாகத்துக்கு லீடு கொடுத்துள்ளார் இயக்குனர் சிவா. முழுக்க முழுக்க ஜூனியர் என்டிஆர் மட்டுமே நம் மனதில் நிற்கிறார், மற்றவர்கள் பெரிதாக நிற்கவில்லை. இரண்டாம் பாதியில் என்ன இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.