பேச்சி – திரை விமர்சனம்

காயத்ரி ஷங்கர், பால சரவணன், தேவ் ராம்நாத் ஆகியோர் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பேச்சி’. ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்துக்கு பிரேமம் புகழ் ராஜேச் முருகேசன் இசையமைத்திருக்கிறார். மலைப்பகுதியில் நடக்கும் ஒரு ஹாரர் திரில்லர் படமான இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, காயத்ரி, தேவ் மற்றும் 3 நண்பர்கள் கொல்லிமலையில் உள்ள ஒரு இடத்திற்கு ட்ரெக்கிங் மற்றும் சுற்றுலா செல்கின்றனர். அவர்களை உள்ளூர் ஃபாரஸ்ட் கைடு பால சரவணன் காட்டுப்பகுதிக்குள் அழைத்து செல்கிறார். நண்பர்கள் அங்கு பால சரவணன் எச்சரிக்கை மீறி, தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்ல முற்படுகின்றனர். ஒரு கட்டத்தில் அங்கு பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. ஒவ்வொருவராக காணமல் போகிறார்கள். அதில் இருந்து அனைவரும் தப்பினார்களா? அமானுஷ்ய சம்பவங்களுக்கு காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.

நாயகி காயத்ரி, இளம் ஜோடியாக, சாகசத்தை விரும்பி மலைக்கு செல்லும் கதாபாத்திரத்தில் பொருந்துகிறார். உள்ளூர்வாசியாக ஒரு பதட்டத்துடனும், பொறுப்புடனும் இருக்கும் கதாபாத்திரத்தில் பால சரவணன் கச்சிதம். தேவ் மற்றும் மற்ற நண்பர்களும் தங்கள் கதாபாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை படத்தை அவ்வப்போது தூக்கிச் செல்கிறது. பார்த்திபனின் ஒளிப்பதிவு ஓகே. பல காட்சிகளில் இருட்டை உணர வைக்கிறார். சவுண்ட் எஃபெக்ட்ஸ் மற்றும் மிக்ஸிங் நன்றாகவே அமைந்துள்ளது. திகில் காட்சிகளில் நம்மை மிரட்டுகிறது. இயக்குனர் ராமச்சந்திரன் எடுத்துக் கொண்ட கதைக்கு நன்றாகவே உழைத்திருக்கிறார்.

முதல் பாதியில் கதாபாத்திரங்கள் அறிமுகம், அவர்கள் அடிக்கும் லூட்டி என சுமாராக நகரும் கதை இடைவேளைக்குப் பிறகு வேகமெடுக்கிறது. குறிப்பாக பேச்சியை பற்றிய பின்னணி கதை திகில் ஊட்டுகிறது. இரண்டாம் பாதி சிறப்பாகவே செல்கிறது. கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டும் அருமை. கண்டிப்பாக குழந்தைகளுடன் தியேட்டரில் சென்று பார்த்து ரசிக்கக் கூடிய படம் தான் பேச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *