பிரபல பாடகரும், தனியிசை கலைஞருமான தெருக்குறள் அறிவு ‘வள்ளியம்மா பேராண்டி’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். 12 பாடல்களை கொண்ட இந்த ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்.
இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது, “அறிவு எழுதிய எல்லா பாடல்களும் சிறப்பாக, சுவாரஸ்யமாக இருக்கும். அவருக்குள் ஒரு அரசியல் தன்மை இருந்தது. அவரின் அம்பேத்கரிய பார்வை தான் எனக்கு அவருடன் எனக்கு இருந்த நெருக்கத்தை கூட்டியது. அறிவு உருவாக்கும் பாடல்களில் இருக்கும் அரசியல் தன்மை மக்களிடம் சென்று சேர ஆரம்பித்துள்ளது. வெகுஜன மக்களிடம் அரசியலை கொண்டு சேர்க்க பிரபல மீடியாக்களை உபயோகிக்க வேண்டும். தலித் சுப்பையா போன்றோர் மேடையேறி பாடிய பல பாடல்கள் மக்களிடம் சென்று சேரவில்லை. ஆனால் அறிவு எழுதிய ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அறிவு பார்க்க தான் பலசாலியாக தோன்றுவார். ஆனால் பாதிப்பில் இருந்து மீள மிகவும் சிரமப்படுவார். எஞ்சாய் எஞ்சாமியில் சில சிக்கல்கள் ஏற்பட்டு அதனால் அறிவு மிகுந்த பாதிப்புக்கு உள்ளான அறிவு, அதிலிருந்து மீள மிகவும் சிரமப்பட்டார். அதன் வெளிபாடு தான் இந்த ‘வள்ளியம்மா பேராண்டி’ ஆல்பம்” என்றார்.
பாடகர் தெருக்குறள் அறிவு பேசும்போது, “எங்கள் ஊர் திருவிழாவில் மக்களிசை கலைஞர்கள் பாடுவார்கள். அதை பார்த்தும் கேட்டும் வளர்ந்த நான் தனியிசை கலைஞராக இருப்பதற்கு முக்கிய காரணம் பா.ரஞ்சித் அண்ணன் நடத்திய ‘காஸ்ட்லெஸ் கலெக்டிவ். விளிம்பு நிலை மக்களும் கோட் போட்டு மேடையில பாடலாம் என்ற தன்னம்பிக்கையை கொடுத்தது அந்த நிகழ்வு. அதற்கு நான் ரஞ்சித் அண்ணாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த ஆல்பத்தை உருவாக்க எனக்கு 2 ஆண்டுகளானது. என்னுடைய நோக்கத்தை இந்த ஆல்பம் உங்களுக்கும் கடத்தும் என்று நம்புகிறேன்.
என்னுடைய பிறந்தநாளை கொண்டாடக் கூட நான் விரும்பவில்லை. நாம் எப்போது கொல்லப்படுவோம் என்று தெரியாத ஒரு வன்முறையான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆம்ஸ்ட்ராங்கின் மறைவை என்னால் இப்போதும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அடுத்து கொல்லப்படுவது நானாகவோ என்னை சார்ந்தவர்களோவோ கூட இருக்கலாம். அந்த பயத்துடனேயே ஒரு இருக்கமான மனநிலையுடன் வாழ வேண்டியிருக்கிறது” என்றார்.
இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் டி.இமான், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி, பாடகர் அந்தோனி தாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.