சூர்யா ஒரு சிறந்த நடிகன் – இயக்குனர் அனல் அரசு பேச்சு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தற்போது சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ள ‘ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஆக்‌ஷன் – ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகும் இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டு டீசரை வெளியிட்டார். முன்னதாக படத்தின் இயக்குனர் அனல் அரசு பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

அப்போது பேசிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, “இது எதுவுமே திட்டமிடலை, யதேச்சயா ஒரு நாள் மும்பைல இருந்து ஃப்ளைட்ல வர்றப்போ மாஸ்டர் கூட பேசிட்டு வந்தேன். அப்புறம் ஒரு நாள் வந்து ஒரு கதையை சொன்னார். கருத்து கேட்குறதுக்காக சொல்றாரோனு நினைச்சேன். அப்புறம் உங்க பையன் இதுக்கு கரெக்டா இருப்பாரானு கேட்டார். எனக்கு ஓகே சார், அவன் கிட்ட கேட்டுக்கோங்கனு சொல்லிட்டேன். எனக்கு என்ன பயம்னா, இங்க ஒரு இடத்தை பிடிப்பது, அதை தக்க வைப்பது என்பது ரொம்ப கஷ்டம். அதை எல்லாம் நான் தினமும் கடந்து கொண்டு தான் இருக்கிறேன். அவனுக்கு சினிமா தான் பிடிச்சிருந்தது. சரின்னு சொன்னேன், நடிச்சான். இப்போ டீசரை பார்த்து ரொம்பவே அகமகிழ்ந்தேன். ரொம்ப நல்லா வந்திருக்கு” என்றார்.

இயக்குனர் அனல் அரசு பேசும்போது, “என் மனைவி ராஜலக்‌ஷ்மிக்கு தான் முதல் நன்றி சொல்லணும், அவங்க இல்லனா இந்த படம் நடந்திருக்காது. அவங்க தான் இதுக்கு மறுப்பு சொல்லாம ஓகே சொல்லி உடனே பண்ணாலாம்னு ஊக்கம் கொடுத்தார். உண்மையா சொல்றேன் ஒரு சிறந்த நடிகன் சார் இந்த சூர்யா. சினிமால மிகப்பெரிய இடத்தை பிடிப்பார்” என்றார்.

நாயகன் சூர்யா பேசும்போது, “எல்லோரும் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம், என்னுடைய சிறந்த உழைப்பை கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *