ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரிக்க, சேத்துமான் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உறியடி விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் உருவாகியுள்ள படம் எலக்சன். உள்ளாட்சி தேர்தல் பின்னணியில் உள்ளாட்சி அரசியலின் முக்கியத்துவம், அதில் நடக்கும் சூழ்ச்சிகள், அந்த பதவியின் மதிப்பு, வாக்கு வங்கி அரசியல் பற்றி முழுக்க முழுக்க பேசும் படமான இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கிறார். முந்தைய சேத்துமான் படத்தை போல தரமான படத்தை கொடுத்தாரா தமிழ்? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகன் விஜய்குமாரின் அப்பா ஜார்ஜ் மரியம், உழைக்கும் மக்கள் கட்சியில் 40 ஆண்டுகளாக உழைத்து வரும் தொண்டன். நண்பன், சொந்த மகன், குடும்பத்தை விடவும் கட்சிக்கு மட்டுமே விஸ்வாசமாக உழைப்பவர். 2006 ஒரு தேர்தலில் சுயேட்சையாக நிற்கிறேன், உன் ஆதரவு வேண்டும் என நண்பன் கேட்டும் துணையாக நிற்காமல் கட்சிக்கு வேலை பார்க்கிறார். அதில் நண்பன் தோற்க விரிசல் விழுகிறது. அடுத்த 2011 தேர்தலில் கட்சி பதவியில் இருக்கும் தலைவர் தன் மகனை தேர்தலில் நிற்க வைக்க, அதை ஏற்க மறுத்து விஜய்குமாரை நிற்க வைக்கிறார்கள் தாய்மாமன் பாவேல் நவகீதனும் அவரின் நண்பன் திலீபனும். நான்கு முனை போட்டியில் விஜய்குமார் தோற்கிறார். கடனாளி ஆகிறார். அரசியலே வேண்டாம் என ஒதுங்குகிறார். ஆனால் 2016 தேர்தலில் மகளிர் வார்டாக மாறி விட்டது, மனைவியை நிற்க வை என திலீபன் விஜய்குமார் மற்றும் அவர்கள் குடும்பத்தை கன்வின்ஸ் செய்கிறார். எல்லோரும் ஒருமனதாக முடிவெடுத்து தேர்தலில் பிரீத்தி அஸ்ரானியை நிற்க வைக்க, அங்கு நடக்கும் அடுத்தடுத்த திருப்பங்கள் தான் மீதிக்கதை.
நாயகனாக விஜய்குமார், எந்த பில்டப்பும் இல்லாமல் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். காதல் பிரிவு, தந்தையின் வலி, தேர்தல் தோல்வி, அதனால் ஏற்படும் அவமானம், தன் நிலைக்கு காரணமானவர்கள் மீது வரும் கோபம் என எல்லா உணர்ச்சிகளையும் சிறப்பாக தன் நடிப்பில் உணர்த்துகிறார். பிரித்தீ அஸ்ரானி அயோத்திக்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறார். பள்ளி ஆசிரியராக, மனைவியாக, படித்த பெண்ணாக நல்ல முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பொண்ணுங்களுக்கு தாலி எப்படியோ அப்படி என்ன மாதிரி தொண்டனுக்கு கரை வேட்டியும் துண்டும் என அரசியல் கட்சியின் அப்பாவி தொண்டனாகவே வாழ்ந்திருக்கிறார் ஜார்ஜ் மரியம். தாய் மாமனாக வரும் பாவெல் நவகீதன் வெகுளியான, அவசரக்குடுக்கையான கேரக்டரில் மனதில் பதிகிறார். எல்லோரையும் நம்புவது, நாமளும் ஜெயிக்க மாட்டோமா என்ற ஏக்கமும், தவிப்பும் கண்களில் தெரிகிறது. திலீபன் பாவெல் நண்பனாக முக்கிய இருவேறு பரிணாமங்களில் நடித்துள்ளார். இவர்களை தாண்டி அந்த பகுதி மக்களை பிரதிபலிக்கும் வகையில் இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். நல்ல நடிகர்கள் தேர்வு. எல்லோருமே பெரும்பாலும் அந்த வட்டார வழக்கில் பேசி நடித்தது, அதை பேச வைத்தது இயக்குனர் மற்றும் குழுவின் வெற்றி.
கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையில் தன் கைவண்ணத்தை காட்டியிருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் அரசியலின் உண்மை முகம் முக்கிய கதாபாத்திரங்களுக்கு புலப்படும் நேரத்தில் அவரின் இசை அதற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவில் வேலூர் மாவட்ட கிராமத்தின் அழகியலும், மனிதர்களும் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
சேத்துமான் படத்தின் உணவு அரசியலை பேசிய இயக்குனர் தமிழ், இந்த படத்தில் உள்ளாட்சி அரசியலின் மகத்துவத்தையும், அரசியல் என்பது மக்களுக்கானது, சமூக நீதிக்கானது என்பதையும் சிறப்பாக பேசியிருக்கிறார். கிராமங்களின் வாக்கு அரசியல் எப்படி இருக்கும், உள்ளாட்சி மாநில அரசியலின் ஆணிவேராகவும் எப்படி இருக்குறது, அரசியலில் நடக்கும் சூழ்ச்சிகள், கணக்குகள் எல்லாவற்றையும் இயல்பாக திரைக்கதையில் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாட்டின் கட்சிகள் எப்படி அமைப்புகள் மூலம் வாக்குகளை பெறுகின்றன என்பதையும் போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகிறார். 2006, 2011, 2016 என மூன்று தேர்தல்களை தன் கதை சொல்லலுக்கு பயன்படுத்தியதும் நன்றாகவே இருந்தது. உள்ளாட்சி அரசியல் பற்றியே தெரியாத இன்றைய தலைமுறைக்கு இந்தப் படத்தை ஒரு பாடமாக கொடுக்கலாம்.