வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்திருக்கும் திரைப்படம் PT சார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் 25வது படமான இந்த படம் வரும் மே 24ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மேத்யூ பேசும்போது, “இது ஒரு வழக்கமான படமாக இருக்காது, ஆதி அவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும்” என்றார்.
நடிகை மதுவந்தி பேசும்போது, “மதுவந்தி அரசியல்ல, வேற வேற தளங்கள்ல இருக்காங்களே, நடிப்பாங்களா? என்ற சந்தேகத்திலும் இந்த கதாபாத்திரத்துக்கு மதுவந்தி தான் தேவை என என்னை நடிக்க வைத்த இயக்குனர் கார்த்திக்குக்கு நன்றி. ஐசரி கணேஷ் அவர்கள் எங்களின் குடும்ப நண்பர், இயக்குனர் விருப்பப்பட்ட மாதிரி படத்தை எடுக்க ஐசரி கணேஷ் அவர்கள் கொடுத்த சுதந்திரம் மிக முக்கியமானது. என் மகன் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மிகப்பெரிய ரசிகன். குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும். தர்மதுரை படத்துக்கு பின் நான் விரும்பி செய்த ஒரு படம் என்றால் அது PT சார் தான்” என்றார்.
இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் பேசும்போது, “ஆதி அவர்களிடம் கதையை சொன்னபோது அவர் கொடுத்த நம்பிக்கை தான் இந்த மேடை வரை வந்திருக்கிறது. இது ஒரு ஜாலியான படம், படம் முழுக்க கலகலவென நகரும். இரண்டாம் பாதியில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். அனிகாவை தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் அஜித் சார் மகளான தான் தெரியும். இந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் மிகவும் பேசப்படும். சமீபத்தில் கில்லி ரீ-ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பை பெறுவதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த படமும் குடும்பத்துடன் அனைவரும் வந்து ரசிக்கும் படமாக இருக்கும்” என்றார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசும்போது, “வேல்ஸ் நிறுவனத்தில் ஒரு நல்ல படம் எடுத்திருக்கிறோம் என்ற திருப்தி இந்த படத்தை பார்த்து முடித்த உடன் உணர்ந்தேன். ஆதி இந்த படத்தில் வழக்கத்தை விட வித்தியாசமாக நடித்திருக்கிறார். எல்லா பள்ளிகளிலும் நடக்கும் பல அம்சங்கள் இந்த படம் நெடுகிலும் இருக்கிறது. பாக்யராஜ், இளவரசு, தியாகராஜன், முனீஸ்காந்த், பாண்டியராஜன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது. இயக்குனர் கார்த்திக் இந்த மாதிரி ஒரு படம் எடுப்பார் என்று நான் நினைக்கவே இல்லை, படத்தை பார்த்த பின் மிகவும் பிடித்துப் போனது, கார்த்திக்கின் அடுத்த படத்தையும் வேல்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது” என்றார்.
நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி பேசும்போது, “நான்கு வருட இடைவெளிக்கு பிறகு நான் இசையமைப்பாளராக வந்த அரண்மனை 4 படத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. மூன்று பாடல்களும் ட்ரெண்டிங்கில் முதல் மூன்று இடங்களை பிடித்ததை பார்க்க சந்தோஷமாக இருந்த்து. இந்த படத்திலும் குட்டிப் பிசாசே பாடல் வெளியான உடனே மிகப்பெரிய ரெஸ்பான்ஸ். எனக்கு எமோஷன் பெருசா வராது, ஆனாலும் இந்த படத்தில் ஒரு முக்கியமான காட்சி என்னையே கண் கலங்க வைத்தது. ஐசரி கணேஷ் மிகவும் வெளிப்படையான மனிதர், ரொம்பவே நம் மேல் அக்கறை காட்டும் ஒரு மனிதர். இந்த கதையை அவரிடம் கொண்டு போனபோது நாம் தான் இந்த மாதிரி கதையை சொல்லணும் என சொல்லி உடனே ஓகே சொன்னார். ஏற்கனவே பணிபுரிந்த பலருடனும் மீண்டும் இந்த படத்திலும் இணைந்து பணி புரிந்தது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. இந்த படம் ஒரு நிறைவான அனுபவம். ஒவ்வொரு காட்சியிலும் 10,15 முக்கிய நடிகர்கள் இருப்பார்கள், ஆனாலும் எந்த சலனமும் இல்லாமல் படத்தை எடுக்கும் சூழலை அமைத்து கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
இந்த நிகழ்வில் நடிகைகள் காஷ்மீரா, அனிகா சுரேந்திரன், ப்ரணிகா தக்ஷூ ஆகியோரும் கலந்து கொண்டனர்.