படிக்காத பக்கங்கள் – திரை விமர்சனம்

முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த், பிரஜின், மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘படிக்காத பக்கங்கள்’. பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, ஒரு பழிவாங்கும் கதையாக உருவாகி இருக்கிறது.

படத்தின் கதைப்படி, படப்பிடிப்பை முடித்து விட்டு ஏற்காட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் யாஷிகா ஆனந்தை அங்கிருக்கும் ஒரு தனியார் சேனலின் ரிப்போர்டர் ஒருவர் பேட்டி எடுக்க வருகிறார். அவர் பேட்டியின் நடுவில் தவறாக நடக்க முயல, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடக்கிறது. அப்போது யாஷிகாவை தாக்குகுறார் அந்த நிருபர். பின் தன் ஆசைக்கு இணங்குமாறு கூறி மிரட்டுகிறார். அதை வீடியோவும் எடுக்க தயாராகிறார். அந்த நேரத்தில் யாஷிகா ஆனந்த் அவனை திருப்பி தாக்கி, அவன் யார்? எதற்காக அங்கு வந்தான்? அவன் நோக்கம் என்ன? போன்றவற்றை கேட்டுத் தெரிந்து கொள்கிறார். அதன் பின் நடக்கும் அடுத்தடுத்த திருப்பங்கள் தான் மீதிக்கதை.

நாயகி யாஷிகா ஆனந்த், ஸ்ரீஜா என்ற ஒரு சினிமா நடிகையாகவே நடித்திருத்திருக்கிறார். கவர்ச்சி, அதிரடி, எமோஷன் என தன்னை நிரூபிக்க நல்ல வாய்ப்பு, ஓரளவுக்கு ஸ்கோர் செய்கிறார். இன்னும் நடிப்பில் மெறுகேற வேண்டி இருக்கிறது என்பது பார்க்கும்போது தெரிகிறது. பிரஜின் போலீஸ் அதிகாரியாக, யாஷிகாவின் காதலராக நடித்திருக்கிறார். திரையில் சில நிமிடங்களே வருகிறார், ஒரு சண்டைக் காட்சியும் அவருக்கு உண்டு. ஜார்ஜ் மரியம் யாஷிகாவுக்கு உதவியாக எல்லா நேரங்களிலும் துணை நிற்கும் ஒரு கதாபாத்திரம். யாஷிகாவின் தங்கை நல்ல ஒரு தேர்வு. கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார். ஷோபராஜ், முத்துக்குமார் போன்ற மற்ற நடிகர்களும் நடித்துள்ளனர்.

டாலி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பட்ஜெட் இல்லாதது காட்சிகளில் தெரிகிறது. சேலம், ஏற்காடு போன்ற பகுதிகளை ஓரளவு அழகாக காட்ட முயற்சி செய்துள்ளார். ஜாஸி கிஃப்ட் இசையில் பாடல்கள் பின்னணி இசை எல்லாமே சுமார் ரகம். வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் ஒரு ஆறுதல்.

செல்வம் மாதப்பன் பொள்ளாச்சி சம்பவத்தை பின்னணியாக வைத்து ஒரு கதையை பின்னியிருக்கிறார். ஆனால் திரைக்கதை மற்றும் கதாபாத்திர உருவாக்கத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். நடிகர்கள் தேர்வும் இன்னொரு குறை. பலருக்கும் நடிப்பு வரவே இல்லை, அதுவும் மச்சான் என பேசிக் கொள்ளும் வில்லன்களை இளைஞர்களாக நம்மால் கற்பனை செய்யவே முடியவில்லை. கதைக்கு ஏற்ப 20, 25 வயது இளைஞர்களை நடிக்க வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். நல்ல ஒரு நோக்கத்தை மனதில் வைத்து எடுத்திருந்தாலும் மேக்கிங் மற்றும் திரைக்கதை குறைபாடு படத்திற்கு பலவீனமாக அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *