ரேகை – விமர்சனம்!

கிரைம் கதை மன்னன் எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவல்கள் தமிழ் எழுத்துலகில் புகழ் பெற்றவை. அவர் எழுதிய நாவல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படி அவர் எழுதிய ஒரு நாவலின் மையக் கதையிலிருந்து ஈர்க்கப்பட்டு ஒரு கருவை எடுத்து தனித்துவமான ஒரு வெப் சீரிஸை தந்துள்ளார் இயக்குனர் தினகரன். ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் சீரீஸ் Zee5-ல் வெளியாகிறது. இந்த சீரிஸில் பாலஹாசன், பவித்ரா ஜனனி, அஞ்சலி ராவ், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் எப்படி இருக்கு என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

இந்த தொடரின் கதைப்படி, சப் இன்ஸ்பெக்டர் பாலஹாசன் மற்றும் கான்ஸ்டபிள் பவித்ரா ஜனனி ஒரு மரணத்தை பற்றி விசாரிக்க செல்கிறார்கள். ஆனால் அந்த மரணம் விபத்தல்ல, அதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது என சந்தேகிக்கிறார்கள். அப்படி சாதாரணமாக விசாரிக்க துவங்கும் அந்த குற்றச் சம்பவம் அடுத்தடுத்த சில மரணங்களால் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது. விபத்து என்பது மாறி கொலை என்பதை கண்டறிகிறார்கள். அவர்களை கொலை செய்தது யார்? இந்த சாதாரண மனிதர்களை கொன்றது யார்? அந்த ஐந்து பேருக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இந்த கொலைகள் நிகழ்ந்தது என்பதை ஒரு பரபர திரில்லராக சொல்வதே மீதிக்கதை.

நாயகனாக பாலஹாசன். போலீஸ் அகிகாரியாக கச்சிதமாக பொருந்திப் போகிறார். வழக்கை விசாரிப்பது, அதன் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பது, சண்டைக்காட்சிகளில் அசத்துவது என இந்த கதைக்களத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளார். பிக் பாஸூக்கு பின் பவித்ரா ஜனனி நடிப்பில் வெளியாகியுள்ள ஒரு தொடர். கான்ஸ்டபிளாக இயல்பாக நடித்திருக்கிறார். நிச்சயம் நடக்கும் காட்சியில் போலீஸ் உடையை மாட்டிக் கொண்டு கிளம்பும் அந்த ஒரு காட்சியிலேயே அப்ளாஸை அள்ளுகிறார்.

வினோதினி வைத்யநாதன் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். அஞ்சலி ராவ் ஒரு முக்கியமான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். போபலன் பிரகதேஷ், ஸ்ரீராம், இந்திரஜித் என மற்ற நடிகர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

ராஜ் பிரதாப் ஒரு திரில்லர் தொடருக்குக்கு ஏற்ற இசையை தந்திருக்கிறார். மகேந்திரா ஹென்றி ஒளிப்பதிவில் தென்காசியின் குறுகலான இடங்கள், மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன் என அத்தனை இடங்களுக்குள்ளும் புகுந்து அமர்க்களப்படுத்தியிருக்கிறது. துரை படத்தொகுப்பு ஏழு எபிசோடுகளில் தேவையான விஷயங்களை அழகாக சொல்லி கதையின் ஓட்டத்தை சிறப்பாக்கி இருக்கிறது.

இயக்குனர் தினகரன், ராஜேஷ்குமார் அவர்களின் கிரைம் கதையின் ஒரு கருவை எடுத்துக் கொண்டு அதை மிகச்சிறப்பாக ஒரு வெப் சீரீஸாக தர எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. இந்த கதை ஒரு திரில்லர், மெடிக்கல் திரில்லர் என்பதையும் தாண்டி சாதாரண மக்களின் வாழ்க்கை எவ்வாறு பெரிய சக்திகளிடம் சிக்கிக் கொள்ளுகிறது என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு எபிசோடு முடியும்போதும் அடுத்த எபிசோடுக்கான ஆர்வத்தை தூண்டிக் கொண்டே இருக்கிறார். அடுத்தடுத்து நல்ல படங்களையும், வெப் சீரீஸ்களையும் தருவார் என்பதற்கு இந்த ‘ரேகை’ மிகப்பெரிய உதாரணமாக அமைந்திருக்கின்றது. இந்த தொடருக்குப் பின் ராஜேஷ்குமாரின் பல நாவல்கள் பல இயக்குனர்களால் தூசு தட்டப்படும் என்பது உறுதி. நிச்சயம் Zee5 OTT-யில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

SK Cinemas Rating – 3.5/5

 

ரேகை – தமிழ் OTT-யில் ஒரு தரமான படைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *