The Chosen one PTE LTD (சிங்கப்பூர்) ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ஹேய் அர்ஜூன்”. ஃபேண்டஸி கலந்த ஒரு காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் சரவண்ணன் கௌதம், பூஜா அதினா, கிஷோர் ராஜ்குமார், நிதின் ஆகியோர் நடித்துள்ளனர். டெல்லி கணேஷ் முக்கியமான ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முகமது ஜார்ஜிஸ் இயக்கியுள்ளார். இரண்டரை மணி நேர படமாக அல்லாமல் கொஞ்சம் குறைவான நேரம் ஓடும் படமாக ஒரு பைலட் படமாக உருவாகி இருக்கிறது.
படத்தின் கதைப்படி, தந்தை டெல்லி கணேஷ் வளர்ப்பில் வளர்கிறார் நாயகி பூஜா. தாய் இல்லாத குறை மற்றும் தந்தையுடன் பேசாமல் இருக்கும் பூஜா அந்த அன்பை தன் காதலன் கௌதமிடம் எதிர்பார்க்கிறார். அவரின் கவனம் தன் மீது இருக்க ஏங்குகிறார். சீராக இருந்த இவர்கள் உறவு ஒரு கட்டத்தில் காதலில் பிரிவு ஏற்படுகிறது. அந்த கோபத்தில் இருக்கும் நாயகன் நாயகியின் நியாபகமாக இருந்த பரிசுப் பொருட்களை தீயிலிட்டு எரிக்கிறான். அந்த நேரத்தில் பளிச்சென மின்னும் ஒரு கல் கிடைக்க அதை வீட்டுக்கு எடுத்து வருகிறான். அந்த கல் இருக்கும்போது அத்தனை பெண்களின் கவனமும் தன் மீது குவிவதை கண்டுபிடிக்கும் அர்ஜூன், அதை வைத்து பல பெண்களிடம் பழகுகிறான். ஆனால் யாரிடமும் நாயகி மீது வந்த அந்த ஈர்ப்பு ஏற்படவே இல்லை. ஒரு கட்டத்தில் ஒரு பிரச்சினை வர, நாயகி தன் மீது வைத்திருந்த உண்மைக் காதலை உணர்ந்து கொள்கிறான். அதன் பின் நாயகியுடன் மீண்டும் சேர்ந்தானா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
சரவண்ணன் கௌதம் கதையின் நாயகனாக நடித்துள்ளார். காதல் மீது அவ்வளவு பற்றில்லாத இளைஞராகவும், பின் காதலை உணர்ந்த பின் அதை இழந்து விடக் கூடாது என துடிக்கும்போதும் நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். கதையின் படி எப்போதும் உர்ரென்று இருப்பதால் அவரின் மற்ற நடிப்பு அம்சங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை.
நாயகியாக பூஜா அதினா. தாயில்லாமல் வளர்ந்த அன்புக்கு ஏங்கும் கதாபாத்திரம். காதல் பிரிவு அதனால் ஏற்படும் சோகம் என கவலை தோய்ந்த முகத்துடனே வலம் வருகிறார். அவரின் தந்தையாக டெல்லி கணேஷ் கிளைமாக்ஸில் அவர் பேசும் வசனம் கவனிக்க வைக்கிறது.
மாயாஜாலக் கல்லின் மனித உருவமாக வந்து போகும் குரேஸி நல்ல சாய்ஸ், மாஸ் என்ட்ரி கொடுத்து, திடீரென மறைந்து போகிறார். RJ-வாக நிதின் நல்ல குரல் வளம். கிஷோர் ராஜ்குமார் ஒரு காட்சியில் வந்தாலும் சிரிக்க வைத்து விட்டு போகிறார்.
கிருஷ்ணகுமார் ஒளிப்பதிவும், நவீன் எடிட்டிங்கும் படத்துக்கு பலம். படத்தின் முதுகெலும்பு என்று சொன்னால் அது சத்ய நாராயணன், ஜென் மார்ட்டினின் இசை தான். பாடல்களிலும் சிறப்பாகவே தங்கள் முத்திரையை பதித்திருக்கிறார்கள். விக்ரம், லியோ படங்களுக்கு பாடல் எழுதிய விஷ்ணு எடவன் ஒரு பாடல் எழுதியிருப்பதும் கவனிக்க வைக்கிறது.
இயக்குனர் ஜார்ஜிஸ் பேன்டஸி அம்சங்களை கலந்து ஒரு காதல் படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார். நாயகன் சரவண்ணன் கௌதம் தமிழ் ஆகியோருடன் இணைந்து அவர் எழுதியுள்ள வசனங்கள் படத்தில் ஹைலைட். ஒரு சின்ன சாம்பிளாக “அணைத்துக் கொண்டு அருகில் இருப்பதும் காதல் தான், நினைத்துக் கொண்டு தொலைவில் இருப்பதும் காதல் தான்” என்ற வரிகளை சொல்லலாம். மொத்தத்தில் கவலைகளை மறந்து ஜாலியாக பார்க்கலாம், ஹேய் அர்ஜூன்.