இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தந்தை மகன் உறவை சொல்லும் படமாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள படம் தான் ராமம் ராகவம். தெலுங்கு நடிகர் தன்ராஜ் சமுத்திரகனியின் மகனாக, அதாவது படத்தின் நாயகனாக நடித்துள்ளார். படத்தை இயக்கி இருப்பவரும் இவரே. பிருத்வி போலவரபு தயாரித்திருக்கிறார். இவர்கள் தவிர மோக்ஷா சென்குப்தா, ஹரிஷ் உத்தமன், சுனில், சத்யா, பிரமோதினி, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ப்ருத்விராஜ், ராக்கெட் ராகவா, ரச்சா ரவி, இந்தூரி வாசு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டீசரை வெளியிட்டார். இயக்குனர் பாண்டிராஜ், தம்பி ராமையா, நடிகர்கள் சூரி, பாபி சிம்ஹா, தீபக் ஆகியோரும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் பேசிய இயக்குனரும், நாயகனுமான தன்ராஜ் பேசும்போது, “எழுத்தாளர் சிவபிரசாத் கதை இது. சமுத்திரகனி அண்ணனிடம் கதையை சொன்னபோது அதன் ஆன்மா கெடாமல் இருக்க நீயே இயக்கணும் என்றார். நான் நடித்த இயக்குனர்களிடம் கற்ற விஷயங்களை வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கிறேன். அவர் ஆதரவு இல்லாமல் இந்த படம் இவ்வளவு தூரம் வந்திருக்காது, அவர் போல நல்ல கதைகளை ஊக்கப்படுத்தினால் நல்ல சினிமாக்கள் கிடைக்கும்” என்றார்.
நடிகர் சமுத்திரகனி பேசும்போது, “அப்பா என்றாலே எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் நடந்து விடும். அப்பாவாக இதுவரை பல படங்களில் நடித்துள்ளேன். இந்தப் படத்திலும் அப்பாவாக தான் நடித்துள்ளேன், ஒரு முறை கூட அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை. ‘ராமம் ராகவம்’ படம் மக்களிடம் போய் சேர வேண்டும். ஒவ்வொரு முறையும் சின்னப் படம் எடுத்து விட்டு அதைக் கொண்டு போய் சேர்க்க போராட வேண்டியதாக உள்ளது. இந்த படம் மக்களிடம் சிறப்பான முறையில் சென்றடையும் என நம்புகிறேன்” என்றார்.
இயக்குனர் பாண்டிராஜ் பேசும்போது, “பசங்க படம் பண்ணுவதற்கு முன்பு நான் ஒரு பக்கம் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குவேன், இன்னொரு பக்கம் சமுத்திரகனி நாடோடிகள் கதையுடன் ஏறி இறங்குவார். அப்போதில் இருந்தே அவர் அன்பு குறையவில்லை. அவரின் குணம் வியக்க வைக்கும். அவர் ஒரு ராபின்ஹூட் மாதிரி, இருக்குற கம்பெனியில நல்ல சம்பளம் வாங்கிக் கொள்வார், இல்லாதவர்களுக்கு இலவசமாக எல்லாம் நடித்துக் கொடுப்பார். தன் படமோ, அடுத்தவர் இயக்கும் படமோ அவர் உழைப்பை கொடுக்க தவறியதே இல்லை. இந்த படத்திலும் கடுமையாக உழைத்திருக்கிறார், டீசரில் உழைப்பை பார்த்தேன்” என்றார்.
இயக்குனர் தம்பி ராமையா பேசும்போது, “அரசியலில் காமராஜர் போன்ற கிங் மேக்கர்ஸ் காலம் கடந்தும் மனதில் நிற்பவர்கள். சினிமாவில் தம்பி பாலா, பாண்டிராஜ் எல்லாம் கிங் மேக்கர்ஸ். சமுத்திரகனி என் அருமை தம்பி, அப்பா மகன் திரைப்படங்கள் இந்த காலச் சூழலில் நிச்சயம் தேவை. இந்த படம் நிச்சயம் பெருவெற்றி பெறும் என்றார்.
நடிகர் பாபி சிம்ஹா பேசும்போது, “இயக்குனர் தன்ராஜ் என் நண்பர், கடும் உழைப்பாளி. இந்த கதையை என்னிடம் சொன்ன போது அப்பாவாக யார் நடிக்கிறார்கள் எனக்கேட்டேன், சமுத்திரகனி என சொன்னார். அப்போதே சொன்னேன் இந்த படத்தை அவர் எங்கே கொண்டு செல்கிறார் என்று மட்டும் பாருங்கள் என்றேன், டீசரிலேயே அது தெரிகிறது” என்றார்.
நடிகர் சூரி பேசும்போது, “அப்பா மகன் உறவை பேசும் கதைகள் தோற்றதாக சரித்திரம் இல்லை, அப்பா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, யாரடி நீ மோகினி, பாண்டியநாடு அந்த வரிசையில் இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும். சமுத்திர கனி அண்ணன் நெகட்டிவாக பேசி நான் பார்த்ததே இல்லை, நல்ல படங்களை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பதே கஷ்டம். சமுத்திரகனி அண்ணன் ஆதரவில் மிகச்சிறப்பாக கொண்டு சேர்த்திருக்கிறீர்கள்” என்றார்.
இயக்குனர் பாலா பேசும்போது, “சமுத்திரகனியின் ரசிகனாக இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரு நடிகனாக ஜெயித்தி விட்டார். அவரின் கடும் உழைப்புக்கு நான் ரசிகன், மற்றவர்களுக்கு அவன் உதவுவதை பார்த்தால் வியப்பாக இருக்கும். மிகப்பெரிய மனசு, அந்த நல்ல மனசு பலருக்கும் இல்லை, அதை விட்டு விடாதே, இப்படியே இரு, மாறிடாத” என்றார்.