48 மணி நேரத்தில் உருவாகும் ‘டெவிலன்’! நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் முயற்சி!

தூவல், எக்ஸ்ட்ரீம் படங்களை தயாரித்த சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் தயாரிக்கும் படம் ‘டெவிலன்’ (Devilan). Bigguy Arun இந்த படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் பதிவுக்காக 48 மணி நேரத்தில் தயாரித்து வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் 29ஆம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கி மே 31ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த படத்தை பற்றிய அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை எப்படி உருவாக்க இருக்கிறார்கள், எப்படி இந்த முயற்சியை சாத்தியப்படுத்துவோம் என்பதை பற்றி விளக்கிப் பேசினர்.

கதையின் நாயகியான கீர்த்திகா பேசும்போது, “இயக்குனர் அருண் சார் முதலில் கதை சொல்லும்போது 24 மணி நேரத்தில் எடுக்கப்படும் படம். உங்களால் நடிக்க முடியுமா? என்று கேட்டார். இதற்கு முன்பு சீரியல்களில் நடித்திருக்கிறேன், இதையும் கண்டிப்பாக முயற்சிக்கிறேன், சாதிப்போம் என நம்புகிறேன்” என்றார்.

படத்தின் தொழில்நுட்ப குழுவினர் பேசும்போது, “இந்த படத்தை பற்றி இயக்குனர் சொல்லும்போது இதெல்லாம் சாத்தியமா என நினைத்தோம். இது ஒரு மிகப்பெரிய சவால் தான். மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கிறோம். அதில் நிச்சயம் சாதித்துக் காட்டுவோம் எனவும் நம்புகிறோம். எங்களால் இதை சாதித்துக் காட்ட முடியும் நாங்களும், தயாரிப்பாளர் ராஜ்குமாரும், ஒட்டுமொத்த குழுவும் நம்பிக்கையோடு இருக்கிறோம். 3 கேமரா மற்றும் 2 ஸ்டேண்ட்பை கேமராக்களையும் வைத்து படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம். கலர் கிரேடிங், சவுண்ட் டிசைன், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என அத்தனையும் இந்த படத்தில் உண்டு. 48 மணி நேரத்தில் எடிட் ரெண்டரிங், சிஜி ரெண்டரிங் என அத்தனையும் செய்து முடிப்பது என்பது சவாலானது தான். ஆனால் நிச்சயம் 31ஆம் தேதி இந்த படத்தை திரையிட்டு காட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றனர்.

இயக்குனர் Big Guy அருண் பேசும்போது, “நானும் ஒரு ஊடகவியலாளர் என்பதை சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமை. தயாரிப்பு மட்டும் தான் வெறும் 2 நாட்கள். ஆனால் இதற்காக ஒரு வருட காலம் உழைப்பைப் போட்டிருக்கிறோம். கடந்த 3 மாதங்கள் இன்னும் அதீத உழைப்பு. இந்த முயற்சியை சொன்ன உடன் ராஜ்குமார் சார் ஒரு நாள் மட்டும் நேரம் கேட்டார். அடுத்த நாள் ஒகே சொல்லி எங்களுக்கும் நம்பிக்கை கொடுத்தார். இந்த படத்துக்காக நிறைய ஆராய்ச்சிகள் செய்தோம். எப்படி இந்த படத்தை எடுப்பது என்பதற்காக எடிட்டிங், ஒளிப்பதிவு, கலர் கிரேடிங் உட்பட நிறைய துறைகளை கற்றுக் கொண்டேன். 3 ஒளிப்பதிவாளர்கள், 4 படத்தொகுப்பாளர்கள் ஒப்பந்தம் ஆகி, எங்களால் முடியாது என சொல்லி வெளியேறி விட்டார்கள். எங்கள் குழுவினர் கடுமையாக உழைத்து வருகிறார்கள். நாங்கள் தூங்கியே 4 மாதங்கள் ஆகி விட்டது. எல்லா படத்திலும் ஒரு நாளில் அதிகபட்சமாக 3 சீன் எடுப்பார்கள். ஆனால் நாங்கள் மொத்த படத்தையும் எடுக்க முயற்சி செய்கிறோம்.

கின்னஸ் ரெக்கார்டுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். துறை சார்ந்த அனுபவஸ்தர்களை அழைத்து இதெல்லாம் சாத்தியமா என்பதை விசாரித்து அதன் பின் ஓகே சொல்லியிருக்கிறார்கள். ஷூட்டிங் ஆரம்பிக்கும்போதே அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும் படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள். 31ஆம் தேதி படத்தை திரையில் காட்டுவோம்.

ஹாரர், சயின்ஸ் ஃபிக்‌ஷன், ஃபேண்டஸி என மூன்று ஜானர்களில் இந்த படத்தை எடுக்கிறோம். படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. சில சீரியல் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து இருக்கிறோம், அவர்கள் அதற்கு பழகியவர்கள். அவர்களை வைத்து படம் பிடிப்பது எங்களின் வேலையை கொஞ்சம் எளிதாக்கும் என நம்புகிறோம். ஏற்கனவே ஒரு குடும்பம் வாழும் வீட்டில் தான் படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம். படத்தில் ஆர்ட் டிபார்மெண்டுக்கு வேலையே கிடையாது. 24 மணி நேரத்தில் மனிதர்களின் வேலையை செய்து முடித்து விடுவோம். கம்ப்யூட்டர்கள் வேலையை செய்ய அடுத்த 24 மணி நேரம் கொடுக்கிறோம். நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் குழுவினர் படப்பிடிப்பை கண்காணிப்பார்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *