விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்கன்’. விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, படத்தொகுப்பாளராக இருந்த லியோ ஜான் பால் இந்த படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார். இதில் விஜய் ஆண்டனியின் சகோரி மகன் அஜய் திஷான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, பிரிகிடா சகா, வினோத் சாகர், அர்ச்சனா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் விஜய் ஆண்டனியை வைத்து படம் இயக்கிய மற்றும் அடுத்தடுத்து இயக்கவிருக்கும் சசி, அருண் பிரபு, ஜோஸ்வா சேதுராமன், பெப்பின் ஜார்ஜ் போன்ற இயக்குனர்களும், லியோ ஜான் பாலை வாழ்த்தும் பொருட்டு அவரின் கேரியரில் முக்கிய அங்கம் வகித்த இயக்குனர்கள் நலன் குமாரசாமி, ரவிக்குமார், ரோஹின் வெங்கடேசன் போன்றோரும், தயாரிப்பாளர்கள் சி.வி.குமார், தனஞ்செயன், டி சிவா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் விஜய் ஆண்டனி பேசும்போது, ” என்ன வாழ்த்த வந்த இயக்குனர் சசி சாருக்கு நன்றி. நான் வாழ்க்கையில் எத்தனையோ படங்கள் நடித்தாலும் பிச்சைக்காரன் படம் போல் ஒரு படம் இனி எனக்கு அமையாது. அந்த அளவுக்கு ஒரு அற்புதமான படத்தை எனக்கு கொடுத்துள்ளார். அவருடன் மீண்டும் ஒரு படத்தில் அடுத்து இணைய இருக்கிறேன். பொதுவாக இயக்குனர்கள் கதை சொல்லும்போது ஏதாவது ஒரு விஷயம் புதிதாக இருந்தால் உடனே ஓகே சொல்லி விடுவேன். அப்படித்தான் இந்த படத்தின் கதையை எடிட்டர் லியோ ஜான் பால் சொன்னவுடன் உடனடியாக இந்த படத்தில் நடிக்க முடிவு செய்தேன்.
லியோ சிறந்த படத்தொகுப்பாளர் மட்டும் அல்ல, மிகச்சிறந்த இயக்குனராகவும் பேசப்படுவார். அந்த அளவுக்கு நேர்த்தியாக படத்தை எடுத்துள்ளார். நான் அடுத்தடுத்து படங்களை தயாரிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவ்ளோ பணம் வச்சிருக்கேன்னு நினைச்சிடாதீங்க, எல்லாமே கடன் தான். கடன் வாங்கி தான் படத்தை எடுத்துட்டு இருக்கோம். வேற பிரச்சினைல மாட்டி விட்றாதீங்க. என்னுடைய படங்கள் பெரிய லாபம் சம்பாதிக்கா விட்டாலும், நஷ்டம் ஏற்படுத்துவதில்லை. இவ்வளவு நாள் எங்கள் தயாரிப்பில் நான் மட்டும் தான் ஹீரோவாக நடித்து வருகிறேன். இனிவரும் காலங்களில் மற்ற ஹீரோக்களை வைத்து படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறோம். இந்த படத்தில் ஆமை மற்றும் ஆந்தை முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது.
தொடர்ந்து படங்களில் நடிப்பது, தயாரிப்பது என பிஸியாக இருந்ததால் இசையில் கவனம் செலுத்த முடியவில்லை. இனிவரும் காலங்களில் நிறைய படங்களுக்கு இசையமைக்க முடிவு செய்துள்ளேன். என்னுடைய படங்களை தவிர்த்து பிற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க உள்ளேன். இந்த ஆண்டு மட்டும் எனது இசையில் நான்கு படங்கள் ரிலீஸ் ஆகும். ஒவ்வொரு படங்களின் புரோமோஷனுக்கு வரும்போது அந்த படத்தில் நான் எந்த கேரக்டரில் நடிக்கிறேனோ அந்த கெட்டப்பில் வருகிறேன். இதற்கு காரணம் அந்த படம் குறித்த ஆர்வம் மக்களிடம் ஏற்படும் என்பதற்காக தான்” என்றார்.