ஆகக் கடவன – விமர்சனம்!

அறிமுக இயக்குனர் தர்மா இயக்கத்தில் ஆதிரன் சுரேஷ், வின்சென்ட், ராகுல் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “ஆகக் கடவன”. சின்ன பட்ஜெட்டில் வெளிவரும் படங்கள் நல்ல கதையம்சத்துடன் வந்து ரசிகர்களை கவரும் காலம். அந்த வகையில் சின்ன பட்ஜெட்டில், கிடைத்த விஷயங்களைக் கொண்டு, குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் தான் “ஆகக் கடவன”. எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஆதிரன் சுரேஷ், ராகுல் மற்றும் ராஜ சிவன் என மூன்று நண்பர்கள். மெடிக்கலில் வேலை பார்க்கும் அவர்களுக்கு சொந்தமாக மெடிக்கல் நடத்த ஆசை. ஒரு நாள் அவர்கள் வேலை பார்க்கும் மெடிக்கல் அவர்கள் கைக்கு வரும் சூழல். அதற்காக பணத்தை தயார் செய்ய, அது திருட்டுப் போகிறது. அந்த சோகமான சூழலில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு, மெடிக்கல் கையை விட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக ஊருக்கு சென்று பணத்தை ரெடி பண்ண பைக்கில் கிளம்புகிறார்கள் வழியில் பைக் பஞ்சர் ஆகி விட, அந்த நேரத்தில் ஒரு பஞ்சர் கடைக்கு கால் செய்ய அவர்கள் காட்டுக்குள் வர சொல்ல அங்கு செல்கிறார்கள். அங்கு இருக்கும் ஆட்கள் எல்லாருமே மர்மமாகவே இருக்கிறார்கள். அடுத்தடுத்து தவறான விஷயங்கள் நடக்க, அவர்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. அவர்கள் அங்கிருந்து தப்பினார்களா? அந்த பஞ்சர் கடையில் இருந்த மனிதர்கள் யார்? அதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? என்பதே மீதிக்கதை.

கதையின் நாயகனாக ஆதிரன். கதைக்கு ஏற்ப தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். எந்த இடத்தில் விலகிப் போகணும்,எந்த இடத்தில் போராடணும், எங்க சண்டை செய்யணும் என அத்தனையும் அவர் தன்னுடைய கதாபாத்திரத்தில் மிக அழகாகவே செய்திருக்கிறார். ஆரம்பத்தில் வாயை வைத்து வம்பை விலைக்கு வாங்கித் தருபவராக வந்தாலும், கதையின் திருப்புமுனைக்கு காரணமாக அமையும் கதாபாத்திரத்தில் ராகுல் நன்றாகவே நடித்துள்ளார். பட்டாணி கதாபாத்திரத்தில் சதீஷ் ராமதாஸ். தன்னுடைய சிறந்த நடிப்பால் கதையை அழகாக நகர்த்தி செல்கிறார். வின்சென்ட், மைக்கேல், ராஜசிவன், பஞ்சர் கடை சிறுவன், நாயகனின் தந்தை என மற்ற நடிகர்களும் படத்திற்கு பொருத்தமான தேர்வு. நல்ல நடிப்பையும் வழங்கியிருக்கிறார்கள்.

சாந்தன் அன்பழகனின் பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. தயாரிப்பாளராக இருந்தாலும் ஒளிப்பதிவுக்கென தனியாக் பெரிய பட்ஜெட் ஒதுக்காமல் மிக இயல்பாக, கதைக்கு தேவையான அளவில் நல்ல ஒளிப்பதிவை செய்திருக்கிறார் லியோ வி ராஜ். ஆள் அரவமற்ற காட்டை மிக சிறப்பாக அந்த உணர்வை நமக்கும் கடத்தும் ஒளிப்பதிவு.

இயக்குனர் தர்மா 2 மணி நேரத்திற்கும் சின்ன ஒரு கதைக்களத்தில் கதாபாத்திரங்களுக்கிடையே திரைக்கதையின் மூலம் விளையாடியிருக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கதையை நகர்த்தி சென்ற விதம் அருமை. இரண்டாம் பாதியில் சில கதாபாத்திரங்களின் பின்னணி வெளிப்படும்போது அட போட வைக்கிறார். இடைவேளையில் எந்த ஒரு பெரிய ட்விஸ்டோ அல்லது சம்பவமோ இல்லாமல் சாதாரணமாக முடித்த உணர்வு எழுந்தாலும் இரண்டாம் பாதியில் அதற்கும் சேர்த்து மிக நல்ல ஒரு திரைக்கதையில் கட்டிப் போட்டு விட்டார் இயக்குனர். மிக முக்கியமான விஷயம் படத்தில் மருந்துக்குக் கூட ஒரு பெண் கதாபாத்திரம் என்று எதுவும் இல்லை. சின்ன பட்ஜெட்டில் நல்ல ஒரு படத்தை தந்து தன்னை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் தர்மா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *