மண்டேலா போன்ற படங்களில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியை தந்திருக்கிறார். அவர் கதையின் நாயகனாக நடிக்க இந்த வாரம் வெளியாகி இருக்கும் படம் “ஜோரா கையத் தட்டுங்க”. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, பிரபல மேஜிக் கலைஞரின் மகன் யோகிபாபு, தன்னுடைய தந்தை மரைவுக்கு பின் தானும் ஒரு மேஜிக் கலைஞராகிறார். ஆனால் அவரின் மேஜிக் மக்களுக்கு பிடிக்காமல் போக, அவரை மக்கள் விமர்சிக்கிறார்கள். மேஜிக் துறையில் பிரகாசிக்க முடியாமல் போகிறது. ஒரு ரவுடி கும்பலால் கையை இழந்து மேஜிக்கையும் தொடர முடியாமல் போகிறது. அதே ரவுடி கும்பல் யோகி பாபுவுக்கு நெருக்கமான சிறுமியை கொலை செய்ய, தன் மேஜிக் திறமையால் அந்த ரவுடி கும்பலை பழிவாங்க திட்டமிடுகிறார். அவர்களை பழி தீர்த்தாரா? எப்படி பழி தீர்க்கிறார்? என்பதே மீதிக்கதை.
யோகிபாபு ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் நம் மனதில் இடம் பிடிக்கிறார். அவரது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறார். நாயகி சாந்தி ராவ் நாயகியாக வந்து போகிறார். பெரிதாக நடிக்க ஸ்கோப் இல்லை. போலீஸ் அதிகாரியாக ஹரிஷ் பேரடி, கல்கி, வசந்தி, மணிமாறன், சாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து முடிந்த வரை நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
இந்திய சினிமாவின் லெஜண்டரி ஒளிப்பதிவாளர் மது அம்பாட் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. அவரது ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம். எஸ்.என்.அருணகிரி பாடல்கள் ஓகே ரகம். ஜித்தின் கே.ரோஷனின் பின்னணி இசையும் ஓரளவு நியாயம் சேர்த்திருக்கிறது.
யோகி பாபு காமெடியனாக இல்லாமல் சீரியஸான கதாபாத்திரத்தில் தன் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் விதத்தில் படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் வினீஷ். ஒரு பழிவாங்கும் படத்துக்கு ஏற்றவாறு தன் திரைக்கதையை அமைத்திருக்கிறார், பல திருப்பங்கள் திரைக்கதையில் இருக்கிறது. ஆனாலும் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைத்திருந்தால் யோகிபாபு கேரியரில் முக்கியமான படமாகவே அமைந்திருக்கும். சிறப்பான படமாக இல்லை என்றாலும் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.