விடுதலை, கருடன் படங்களின் வெற்றிக்கு பின் சூரி நாயகனாக நடித்து பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “மாமன்”. காமெடியனாக வளர்ந்து தற்போது சீரியஸ் மோடுக்கு மாறியுள்ள சூரி ஹாட்ரிக் அடித்தாரா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சூரியின் அக்கா சுவாஸிகாவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை, நீண்ட ஏக்கத்துக்கு பிறகு ஒரு ஆண் குழந்தை பிறக்க, அக்கா மகன் மீது அதிக அன்பு காட்டுகிறார் தாய் மாமன் சூரி. அதைப் பார்த்து பிடித்துப் போக சூரியை காதலித்து திருமணம் செய்கிறார் மருத்துவரான ஐஸ்வர்யா லக்ஷ்மி. திருமணத்துக்கு பின் அக்கா மகன் உடனான அந்த பாசமே சூரியின் இல்லற வாழ்க்கையை பாதிக்கிறது. சூரியுடன் தனக்கு கொஞ்சம் கூட ஸ்பேஸ் இல்லையே என ஏங்குகிறார் ஐஸ்வர்யா லக்ஷ்மி. அதனால் அக்காவையும், அக்கா மகனையும் பிரியும் சூழல் வர, பின் மீண்டும் இணைந்தார்களா? தாய் மாமன் பாசம் என்ன ஆனது? என்பதை பாசப்போராட்டத்துடன் சொல்லும் படமே ‘மாமன்’.
காமெடியனாக பழகிப் போன சூரி சீரியஸான படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார் முந்தைய படங்களில். ஆனால் இந்த மாமன் படத்தில் அழுத்தமான ஒரு எமோஷனல் கதாபாத்திரம் மூலம் நம்மை கலங்க வைக்கிறார், ரசிக்க வைக்கிறார். அவரை ஒரு நல்ல நடிகராக ஏற்றுக் கொள்ள வைக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளிலும் நல்ல ஒரு முன்னேற்றம். தான் அக்கா மகன் மீது காட்டும் அன்பு யாரை எல்லாம் பாதித்திருக்கிறது என்பதை உணரும் காட்சியில் நம்மை கலங்கடிக்க வைக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி. சூரிக்கு ஜோடியாக இவரா? என கேட்டவர்களை எல்லாம் அதை மறக்கடிக்க வைக்கிறார். ஒரு மனைவியாக, கதையின் முக்கிய கதாபாத்திரமாக படம் முழுக்க தன் நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.
‘லப்பர் பந்து’ சுவாஸிகா சூரியின் அக்காவாக மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பல காட்சிகளில் வசனம் இன்றி தன் முக பாவங்களின் மூலமே தன் மனநிலையை பிரதிபலித்திருக்கிறார். அவரின் கணவராக வரும் பாபா பாஸ்கர் இதுவரை பார்க்காத ஒரு உணர்வுப் பூர்வமான ஒரு கதாபாத்திரத்தில் நம் மனதில் பதிகிறார். ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் ஒரு வயதான தம்பதியாக கணவன் மனைவியின் அன்பு, அன்யோன்யம் ஆகியவற்றை மிக அழகாக காட்டியிருக்கிறார்கள். எல்லோரையும் தாண்டி கதையின் மையக் கதாபாத்திரமாக ஹடித்திருக்கும் சிறுவன் பிரகீத் சிவன் மிக நல்ல நடிப்பு. திருமண மண்டபத்தில் ஒரு காட்சியில் அவர் பார்க்கும் ஒரு பார்வையே அவ்வளவு உணர்வை தந்திருக்கிறது. இவர்களுடன் பால சரவணன், ஜெயப்பிரகாஷ், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் ஆகியோரும், கேமியோ கதாபாத்திரத்தில் வந்து போகும் அந்த ஹீரோவும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
ஹிருதயம் பட இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் தமிழில் இசையமைத்துள்ள முதல் படம், பாடல்கள் எல்லாமே நன்றாகவே இருக்கிறது. பின்னணி இசையிலும் எமோஷனை அழகாக கடத்தியிருக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு படத்துக்கு பொருத்தமாகவே இருக்கிறது.
விலங்கு வெப் சீரீஸ் வெற்றிக்கு பின் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியிருக்கும் படம், அந்த கதைக்கு அப்படியே நேர் எதிராக குடும்ப உறவுகளை பேசும் படமாக கொடுத்திருக்கிறார். இந்த கதைக்கு என்ன தேவையோ அதை மிக அழகாகவே தந்திருக்கிறார். கணவன் மனைவி உறவு, மாமன் மருமகன் உறவு, அக்கா தம்பி உறவு என பல விஷயங்களை கையாண்டிருக்கிறார் பிரஷாந்த். ஆனாலும் மாமன் என்ற தலைப்பு படத்தின் முதல் பாதிக்கு மிகப்பொருத்தமாகவே இருக்கிறது, இரண்டாம் பாதியில் மற்ற விஷயங்கள் அதை தாண்டி சென்று இறுதியில் மாமன் படத்துக்கு நியாயம் சேர்க்கிறது. திரைக்கதையில் சில விஷயங்களை கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் இன்னும் சிறப்பான படமாக அமைந்திருக்கும் இந்த “மாமன்”.