நிழற்குடை – விமர்சனம்!

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில், சிவா ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நிழற்குடை’. குடும்ப உறவுகளின் மேன்மையை பேசும் படமாக உருவாகியுள்ள இப்படத்தை கே.எஸ்.அதியமானிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சிவகுமார் இயக்கியுள்ளார். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, விஜித், கண்மணி வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டு தன் 3,4 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். இருவருமே கார்பரேட் கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள் என்பதால் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியாமல் ஒரு இளம் பெண்ணை வேலைக்கு அமர்த்த, அந்த பெண்ணோ தன் காதலனுடன் தினமும் அந்த ஃபிளாட்டில் கும்மாளம் அடித்து அவர்களை ஏமாற்ற அவளை வேலையை விட்டு துரத்துகிறார்கள். அந்த சமயத்தில் முதியோர் இல்லத்தில் எல்லோரையும் அன்புடன் கவனித்து கொள்ளும் தேவயானியை பார்த்து அவரை தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார்கள். குழந்தையை பார்த்துக் கொள்ளும் தேவயானியின் அரவணைப்பில் வளரும் அந்த குழந்தை தேவயானியை தன் அம்மாவாகவே பார்க்கிறது. என் கூடவே இருக்கணும் என அவரையே சுற்றி சுற்றி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் வேலை வாங்கி செட்டில் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் விஜித், கண்மணிக்கு அங்கு வேலை கிடைக்கிறது. அவர்கள் அமெரிக்கா சென்றார்களா? அந்த குழந்தை தேவயானியை பிரிந்ததா? என்பதே மீதிக்கதை.

படத்தின் மையக் கதாபாத்திரத்தில் தேவயானி. அன்பு, கருணை, ஏக்கம், பரிதவிப்பு என ஒரு அன்பின் உருவாய் உருவான கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். பல முக்கியமான காட்சிகளில் எல்லாம் அவர் பேசும் வசனங்களும் மிக அழுத்தமாய், இன்றைய தலைமுறையின் சொகுசு வாழ்க்கையை குறித்த விஷயங்களை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறது. விஜித், கண்மணி உண்மையான தம்பதிகளாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைய மாடர்ன் இளைஞர்களின் மனநிலையை மிகச் சரியாக பிரதிபலித்திருக்கிறார்கள்.

ஓரிரு காட்சியில் வந்தாலும் ஆழமாய் மனதில் பதிகிறார் இளவரசு. ராஜ்கபூர், மனோஜ்குமார், வடிவுக்கரசி, நீலிமா, தர்ஷன் சிவா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஹிஹாரிகா, அஹானா என படத்தில் நடித்திருக்கும் இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் முக்கிய மிக இயல்பாக, அழகாக நடித்திருக்கிறார்கள்.

ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு படத்துக்கு பலமாக அமைந்துள்ளது. ரோலக்ஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார், 2 மணி நேரத்திற்கு படத்தை கட் செய்திருப்பது சிறந்த முடிவு. ஹிமேஷ்பாலா வசனங்கள் படத்துக்கு பக்கபலமாக குறிப்பாக பல விஷயங்களை இளைஞர்களுக்கு செய்தியாய் சொல்கிறது. நரேன் பாலகுமார் இசையில் பாடல்கள் ஓகே ரகம், பின்னணி இசையும் படத்துக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

இயக்குனர் சிவா ஆறுமுகம் நல்ல ஒரு மெசேஜ் சொல்லும் கதையை கொடுக்க முன் வந்திருப்பதே மிகச் சிறப்பான, வரவேற்கத்தக்க விஷயம். கூட்டுக் குடும்பங்களின் முக்கியத்துவம், குழந்தை வளர்ப்பின் முக்கியமான அடிப்படை விஷயங்கள், பகட்டு வாழ்க்கையின் பின்னால் ஓடி உறவுகளை தொலைக்கும் இன்றைய இளைய தலைமுறை என பல விஷயங்களை கதையினூடே மிகச் சிறப்பாக சொல்லி விட்டுப் போகிறார். அதை ஒரு அழகான எமோஷனல் ட்ராமாவாக சொல்லி மனதை வருடிச் செல்கிறார். நிச்சயம் குடும்பத்துடன் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *