சூரி தனக்கான தேரை தானே உருவாக்கி அமர்ந்திருக்கிறார் – மாரி செல்வராஜ் புகழாரம்!

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மாமன்’. ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன், சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசை அமைத்திருக்கிறார். தாய் மாமன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சிதம்பரம் வழங்குகிறார். வரும் 16ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், சிறுத்தை சிவா, பாண்டிராஜ், பொன் ராம், ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், டி. சிவா, அருண் விஷ்வா, கே. கலையரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது, “மிகவும் சந்தோஷமான மேடை. கடைக்குட்டி சிங்கம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்தி, ‘இப்படம் ஹிட்’ என சொன்னார். படத்தில் நடித்திருக்கும் முகங்களை பார்க்கும்போது தெரிகிறது என்று அதற்கு விளக்கமும் அளித்தார். அதேபோல் இந்த திரைப்படத்திலும் நடித்திருக்கும் முகங்களை பார்க்கும்போது இந்தத் திரைப்படம் வெற்றி பெறும் என உறுதியாக சொல்லலாம். இந்த அரங்கத்திற்கு உள்ளே வரும்போது ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், சுவாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி என அனைவரையும் பார்க்கும் போதே வெற்றி கூட்டணி என நம்பிக்கை வந்தது. அதனால் மாமன் நல்லதொரு குடும்பப் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் என்னுடைய உதவியாளர். நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு நான் நடுவராக பணியாற்றினேன். அந்த விழா நிறைவடைந்ததும் நான் மேடையில் பேசும்போது இங்கு வெற்றி பெற்ற இயக்குநர்கள் அனைவரும் திறமைசாலிகளாக இருக்கிறீர்கள். உங்களின் யாருக்கேனும் என்னிடம் உதவியாளராக சேர விரும்பினால் என் அலுவலகத்திற்கு வருகை தாருங்கள் என சொன்னேன். இதை சொல்லிவிட்டு நான் அலுவலகத்திற்கு செல்வதற்குள் அங்கு பிரசாந்த் பாண்டியராஜ் நின்றிருந்தார். அப்போது அவர் ஏற்கனவே நான் உங்களை ஃபாலோ செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்னதும் உடனடியாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் என்றார். அன்றிலிருந்து இன்று வரை என் உடன் பயணிக்கிறார். ‘விலங்கு’ என்றொரு வெப் சீரிசை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். அவர் திருச்சியில் அலுவலகம் வைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் பிரசாந்தின் இரண்டு பிள்ளைகளும் நடித்திருக்கிறார்கள்.‌ இந்தப் படத்தின் முன்னோட்டத்தை என்னிடம் காண்பிக்கும் போது, ‘ இந்த முன்னோட்டத்தில் பசங்க 2- கடைக்குட்டி சிங்கம் -நம்ம வீட்டு பிள்ளை -ஆகிய படத்தில் இருந்து சில காட்சிகள் இருக்கும் ‘ என்று சொன்னார். பரவாயில்லை. இது மக்களுடைய வாழ்க்கையில் இருந்து எடுப்பது தானே என்று சொன்னேன்.

இந்த படத்தை பார்த்த திங்க் மியூசிக் சந்தோஷ் சூரிக்கு பிறகு எனக்கும் போன் செய்து இந்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலியை விட மிக சிறப்பாக இருக்கிறது . நிச்சயமாக வெற்றி பெறும் என்றார். சந்தோஷின் கணிப்பில் ஒவ்வொரு படமும் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த படமும் வெற்றி பெறும். எனக்கு இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு சண்டைக் காட்சி, இரண்டு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளை காண்பித்தனர். சூரியும், நானும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா ‘படத்தில் தான் அறிமுகமானோம். அந்தப் படத்தின் போட்டோ சூட்டை சூரியையும் விமலையும் சேர்த்து வைத்து நடத்தினேன்” என்றார்.

சிறுத்தை சிவா பேசும்போது, “சூரி சாரை எனக்கு நீண்ட நாட்களாகவே தெரியும். அவர் திரைத்துறையில் பணியாற்றி இன்று மிக உயர்ந்த இடத்திற்கு முன்னேறி உள்ளார். சில பேர் வெற்றி பெறும்போது மனதிற்குள் சந்தோசம் ஏற்படும். அந்த மகிழ்ச்சியுடன் தான் இங்கு நான் நின்று கொண்டிருக்கிறேன். கருடன் படத்தின் ட்ரெய்லர் வெளியானவுடன் சூரிக்கு போன் செய்து, ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது. படம் நிச்சயமாக ஹிட் ஆகும் என்று சொன்னேன். அதேபோல் மாமன் படத்தின் ட்ரெய்லரையும் பார்த்தேன். இரண்டரை மணி நேரம் படத்தை பார்த்துவிட்டு மனம் நெகிழ்வது என்பது சகஜம். அதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து விட்டு கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை” என்றார்.

நடிகை சுவாசிகா பேசும்போது, “படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியில் சிறப்பாக நடித்தால் நன்றாக நடித்திருக்கிறாய் என்ற பாராட்டை அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள். இது எனக்கு உற்சாகத்தை அளித்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் பாசிட்டிவ் வைப்( Vibe) உடன் இருந்தனர்.
இந்த திரைப்படத்தில் குடும்பத்தில் உள்ள உறவுகளை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தை பார்க்கும் போது எனக்கும் ஒரு சகோதரர் இருக்கிறார். அவரை நாம் தவறவிட்ட தருணங்களை நினைவுபடுத்துகிறது. தமிழகத்தை போல் தாய்மாமன்களுக்கான கலாச்சார ரீதியிலான முக்கியத்துவம் கேரளாவில் இல்லை என்றாலும் ,கேரளாவிலும் தாய் மாமன்கள் இருக்கிறார்கள். அவர்களை பார்த்தால் மனதில் பயம் இருக்கும். மரியாதை இருக்கும். எனக்கும் தாய் மாமன் இருக்கிறார். அவர்கள் அனைவருக்கும் இந்த படம் பார்க்கும்போது ஒரு நெருக்கம் ஏற்படும். படப்பிடிப்பு தளத்தில் மொழி பிரச்சனையை எதிர் கொள்வதற்காக உதவி இயக்குநர்கள் உதவி செய்தார்கள். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் அனைவரும் ஒரு குடும்பம் போல் இருந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். ‘லப்பர் பந்து’ படத்திற்குப் பிறகு ‘ மாமன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். படத்தைப் பற்றிய ரசிகர்களின் கருத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

பாடலாசிரியர் விவேக் பேசுகையில், ” சில பேர் வெற்றி பெறுவார்கள் . தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருப்பார்கள். அத்துடன் ஒரு பிம்பத்தையும் கட்டமைப்பார்கள். வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவர்கள் என்ற பிம்பத்தை கட்டமைப்பார்கள். அவர்களை நாம் ஆச்சரியமாக பார்ப்போம். ரசிப்போம். ஆனால் சூரி சார் உன்னால் முடியும் உன் பக்கத்தில் தான் நான் இருக்கிறேன். உன்னை போல் நானும் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு இருக்கிறேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டு இருக்கிறேன். ரோட்டில் அமர்ந்து போராடி இருக்கிறேன். அதன் பிறகு தான் இந்த வெற்றியை தொட்டிருக்கிறேன் என்ற ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே இருப்பார். இது நம் பக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு உத்வேகத்தை அளிக்கும். நம்மாலும் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை விதைக்கும். இந்த நம்பிக்கையை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருப்பதால் அவர் மென்மேலும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். விலங்கு வெப் சீரிஸை பார்த்து விட்டு தமிழில் வெளியாகி இருக்கும் சிறப்பான இணைய தொடர் மட்டுமல்ல பெஸ்ட் கன்டென்ட். அந்தத் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய இயக்கத்தில் உருவாகும் படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசுகையில், ” என் இசையில் தமிழில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘மாமன்’. இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் ஜூம் மீட்டிங்கில் தான் சந்தித்து கதையை சொல்லத் தொடங்கினார். அந்தத் தருணத்தில் நான் வேறொரு படத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அதன் பிறகு அன்று இரவு கதையை முழுவதுமாக சொன்னார். படத்தின் கதையை இடைவேளை வரை சொல்லும் போதே என் கண்களில் கண்ணீர் வரத் தொடங்கியது. அந்தத் தருணத்திலேயே இந்த படத்திற்கு நாம் இசையமைக்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது என் மனைவியும் கண்ணீர் வடித்தார்” என்றார்.

நடிகர் ராஜ்கிரண் பேசும்போது, “இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சூரியும், அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யாவும், அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுவாசிகாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், ஜெயபிரகாஷ், நான் என பலர் இருக்கிறோம். எல்லோரும் அவங்களுடைய பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் நட்சத்திரங்கள் அனைவரையும் இயக்குநர் பிரசாந்த் அழகாக கையாண்டார்” என்றார்.

இயக்குநர் பொன் ராம் பேசுகையில், “சூரியின் இந்த உயரம் அவருக்கு சாதாரணமாக கிடைக்கவில்லை. அதன் பின்னால் கடுமையாக உழைத்தார். சீமராஜா படத்திற்காக சூரியிடம் சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு ஆறு மாத காலம் அவகாசம் வேண்டும் என்றார். ஆறு மாத காலமும் கஷ்டப்பட்டார். ஆனால் அந்த காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் ஆறே நிமிடத்தில் படமாக்கினோம். அன்று அவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தார். அப்போதே இவர் ஹீரோவாக உயர்வதற்கு தகுதியானவர் என நினைத்துக் கொண்டேன். விடுதலை படத்தில் நடித்தபோது அவருக்கு உடலெங்கும் தையல் இருந்தது. ஒவ்வொரு தையலிலும் அவருடைய வாழ்க்கை உயர்ந்தது. தற்போது மாமனாக நிற்கிறார் என்றால்.. அதற்குப் பின்னால் அவருடைய கடும் உழைப்பு இருக்கிறது. இதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். சமீபத்தில் நிறைய படங்களின் டிரைலர்களை பார்த்திருக்கிறோம். அதில் வெட்டு, குத்து அதிகமாக இருக்கும். ஆனால் மாமன் திரைப்படத்தின் முன்னோட்டத்தில் அற்புதமான குடும்ப கதையை சொல்லி இருக்கிறார்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த வகையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்தத் திரைப்படத்தில் கலகலப்பு, உணர்வுபூர்வமான காட்சிகளும் இருக்கும் என்று நம்புகிறேன். இசையமைப்பாளர் குறிப்பிட்டது போல் இப்படத்தின் இடைவேளையில் ஏதோ விசயம் இருக்கிறது. அது படத்தை பற்றிய ஆவலை தூண்டுகிறது” என்றார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, “எனக்கும், சூரிக்கும் எமோஷனலான தொடர்பு உண்டு. இருவரும் ஒரே வீட்டிலிருந்து வந்திருப்பது போன்ற உணர்வு தான். நான் உதவி இயக்குநராக இருந்த காலகட்டத்தில் இருந்து நிறைய இரவுகள் அவருடன் செலவழித்து இருக்கிறேன். அப்போதெல்லாம் என் மனதில் இவர் இவ்வளவு இயல்பானவராக இருக்கிறாரே எனத் தோன்றும். நான் சூரிய உடன் பழக தொடங்கிய போது அவருடைய மோசமான காலகட்டம் அது. அவருடைய காமெடி ஒர்க் அவுட் ஆகாமல் போன காலகட்டம் அது. இந்தப் படத்தில் சூரியின் ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்ய லட்சுமி திரைத்துறையில் அவருடைய இலக்கை சீக்கிரம் எட்டி விடுவார் என நம்புகிறேன். இந்தப் படத்தில் நடித்திருக்கும் சுவாசிகா பற்றி சூரி என்னிடம், ‘இந்த பொண்ணு தமிழ் சினிமா இருக்கும் வரை நடிக்கும். அவ்வளவு திறமைசாலி. நடிப்பு பிசாசு’ என்றார்.

நிஜ மனிதர்களை நாம் கதாபாத்திரங்களாக மாற்றும் போது அதில் நடிகர்கள் சரியாக உணர்ந்து நடிக்கவில்லை என்றால்.. படப்பிடிப்பு தளத்தில் கடினமாக இருக்கும். நமக்குள் தங்கி வலியை ஏற்படுத்திய உறவுகளை கதாபாத்திரங்கள் ஆக்கி அதனை திரையில் வெளிப்படுத்தும்போது சரியாக இருக்க வேண்டும் என நினைப்போம். என்னைப் போன்ற படைப்பாளிகள் நினைப்பது என்னவென்றால் ..எங்களுடைய மனதில் இருக்கும் கதாபாத்திரங்களை நடிகர்கள் திரையில் துல்லியமாக பிரதிபலிக்க வேண்டும் என்பது தான். அப்படி ஒரு கதையில் உள்ள கதாபாத்திரங்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தக்கூடிய அனைத்து நட்சத்திரங்களும் இந்த படத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தலைவராக ராஜ்கிரண் இருக்கிறார்.

ராஜ் கிரணின் பாதிப்பு இல்லாமல் கிராமத்து படங்கள் இல்லை. இந்தத் திரைப்படமும் அவருடைய படங்களில் பாதிப்பிலிருந்து தான் உருவாகி இருக்கிறது. இந்த படம் மட்டுமல்ல என்னுடைய வாழை திரைப்படமும் உருவாகி இருக்கிறது. நாங்கள் அனைவரும் எப்போதும் ராஜ் கிரணுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம். சூரி தனக்கான தேரை உருவாக்கி, அதில் அவரே அமர்ந்து, அவரே இழுத்துக்கொண்டு செல்கிறார். அதனால் அவரிடமிருந்து யாரும் தேரை பிடுங்க இயலாது” என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, ” இந்தப் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே வெற்றி பெறும் என சொல்ல முடிகிறது. மக்கள் அண்மை காலமாக லைட் ஹார்ட்டட் ஸ்கிரிப்ட்டுகளுக்கு கொடுக்கும் வரவேற்பு சந்தோசமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த மாமன் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறும். சூரி அண்ணனின் வளர்ச்சியை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. இவருடைய வளர்ச்சி அனைவருக்கும் சந்தோசத்தை கொடுக்கிறது என சொன்னார்கள். உண்மையில் ஒருவருடைய வளர்ச்சியில் மற்றவர்கள் மகிழ்ந்தால் அது தான் சிறப்பு. நானும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்களை தயாரிக்க தொடங்கி இருக்கிறேன். இதில் பத்து கதைகள் வந்தால் .. அதில் ஐந்து கதைகளில் சூரி ஹீரோ என்கிறார்கள்.‌ அதை பார்க்கும் போது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசும்போது, “மாமன் படத்தை தாய் மாமன் என்ற உறவை வைத்து தான் தொடங்கினோம். ஆனால் இந்த படத்தில் அனைத்து உறவுகளும் இணைந்து இருக்கிறது. எல்லா குடும்பங்களிலும் நடைபெறும் விசயத்தை சூரி அண்ணன் கதையாக சொன்னார். விலங்கு மாதிரி ஒரு திரில்லரை மீண்டும் இயக்கக் கூடாது என்று தீர்மானித்திருந்தேன். அந்த தருணத்தில் இது போன்றதொரு கதையைக் கேட்டதும் ரொம்ப நெருக்கமானதாக இருந்தது. சவால் மிக்கதாகவும் இருந்தது. அதன் பிறகு கதை எழுதத் தொடங்கினோம். இந்தப் படத்தில் உள்ள முக்கியமான விசயங்கள் அனைத்தும் சூரி சொன்னது தான். அதை நாங்கள் சரியாக செய்திருக்கிறோம் என்று நம்புகிறேன். ஒரு தோல்வி படம் கொடுத்தவுடன் என்னை ஆழ்கடலில் புதைத்திருந்தார்கள். அதன் பிறகு எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவர்களின் உதவியுடன் விலங்கு என்ற ஒரு வெப்சீரிசை இயக்கினேன். அந்த வெப்சீரிஸை பாராட்டி என்னை உயர்த்தி விட்டவர்கள் ஊடகத்தினர். அதன் பிறகு எனக்கு வாய்ப்பும் வாழ்க்கையும் கிடைத்தது. நாங்கள் அனைவரும் நண்பர்களாக இணைந்து மாமனை உருவாக்கியிருக்கிறோம். இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகமாக சொல்கிறார்கள். அது எனக்கு பயத்தை அளிக்கிறது. மே 16ஆம் தேதி அன்று படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள். இந்தப் படத்தை என்னுடைய மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன்” ‌என்றார்.

நடிகர் சூரி பேசும்போது, “இந்த விழாவிற்கு வருகை தந்த சிறுத்தை சிவா, பாண்டிராஜ், லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் என அனைத்து இயக்குநர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களிடம் இருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். இவர்கள் என் மீது செலுத்தும் அன்பின் காரணமாக நிறைய நம்பிக்கை கிடைத்திருக்கிறது. பாண்டிராஜ் படத்தில் இடம்பெறும் வசனத்தை போல் இந்த படத்திலும் இடம்பெற வேண்டும் என இயக்குநர் பிரசாந்திடம் சொல்லி இருக்கிறேன். பதினாறு வருடமாக என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கும் குமார் இன்று தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார். படத்தை தயாரித்து சொன்ன நேரத்தில் வெளியிடுவதற்காக கடுமையாக உழைக்கிறார். கருடன் படம் போல் இந்த திரைப்படமும் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என் நம்புகிறேன்.

ராஜ் கிரண் அப்பா இந்தப் படத்திற்காக நடிக்க ஒப்புக் கொண்டது எங்களுக்கெல்லாம் பெருமை. இந்தப் படத்தின் கதையை கேட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னதுடன் நடிக்கவும் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து எங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியதற்கு நன்றி.
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பை தமிழ் திரையுலகம் சார்பில் வரவேற்கிறேன். இதற்கு முன் நீங்கள் இசை அமைத்த ஒன்ஸ்மோர் படத்தின் பாடல்களும் ஹிட் .இந்த படத்தின் பாடல்களும் ஹிட்.

சூரி மீது இருக்கும் அன்பின் காரணமாகவும் , இந்தப் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டதாலும் இப்படத்திற்கு பாடல்களை எழுதுவதற்கு சம்பளம் எதுவும் வேண்டாம் என்று சொன்ன பாடலாசிரியர் விவேக்கிற்கு என்னுடைய நன்றி. அவர் மாமன் படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு பெருமை. நாங்கள் நினைத்ததை விட இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. அதிலும் மண் சார்ந்த உறவுகளுக்கு உங்களுடைய வரிகள் நெருக்கமாக இருக்கிறது. ‘ சீம ராஜா ‘படத்திற்காக இயக்குநர் பொன்ராம் என்னை சிக்ஸ் பேக் வைத்துக்கொள் என்றார். இதற்காக ஆறு மாத காலம் கடினமாக உழைத்தேன். என்னுடைய மனைவியும் உதவி செய்தார். இந்தப் படத்தை திரையரங்கத்தில் பார்ப்பதற்காக ஆவலுடன் குடும்பத்துடன் சென்றேன். ஆனால் அந்த சிக்ஸ் பேக் திரையில் 59 வினாடிகள் தான் இடம்பெற்றது. சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் அதுதான் என்னை இந்த அளவிற்கு உயர்வதற்கான நம்பிக்கையை விதைத்தது. அன்று அது போன்றதொரு வாய்ப்பை நீங்கள் எனக்கு வழங்கவில்லை என்றால்.. தற்போது என் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை இருந்திருக்காது.

இப்படத்தின் கதையை நான் எழுதி இருந்தாலும் எனது பெயர் வரவேண்டாம் என இயக்குநரிடம் சொல்லி இருந்தேன். ஆனாலும் இப்படத்தின் கதை என எனது பெயர் இடம் பிடித்திருக்கிறது. இதற்கு காரணமான திங்க் மியூசிக் சந்தோஷிற்கு நன்றி. நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய குடும்பம் தான் காரணம். இந்தப் படத்தில் ஒரு வசனம் இருக்கிறது ‘சாமிக்கு அடுத்து பொண்டாட்டி இல்லடா.. பொண்டாட்டி தான் சாமி’. இது என்னை மிகவும் நெகிழ வைத்தது. அதேபோல் எனக்கு சாமிக்கு அடுத்து குடும்பம் இல்லை குடும்பம் தான் சாமி என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று எனக்கு பல விசயங்களை கற்றுக் கொடுத்தது குடும்பம் தான். இந்தப் படத்தின் கதை உருவானதும் இங்கிருந்து தான். நான் இந்த படத்திற்காக கதையை யோசித்து எழுதவில்லை. எங்கள் குடும்ப உறவுகளில் நடைபெற்ற சம்பவங்களை தான் சொல்லி இருக்கிறேன்.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் என்னை சந்தித்து இரண்டு கதைகளை சொன்னார். இரண்டும் நன்றாக இருந்தது. இருந்தாலும் தயாரிப்பாளர் குமார், ‘உங்களிடம் இருக்கும் கதையை சொல்லுங்கள். அதை பிரசாந்த் திரைக்கதையாக மாற்றி இயக்குவார் ‘ என சொன்னார். நான் முதலில் தயங்கினேன். பிறகு இந்த படத்தின் கதையை அவரிடம் சொன்னேன். குடும்பத்தில் அம்மா அப்பா தாத்தா பாட்டி அண்ணன் தங்கை என எத்தனையோ உறவுகள் இருந்தாலும் ஸ்பெஷலான உறவு என்றால்.. அது தாய் மாமன் உறவு தான். தாய்க்குப் பிறகு தாய் ஸ்தானத்தில் இருக்கும் ஒரு உறவு என்றால் அது தாய் மாமன் தான்.‌ தாய் மாமனை பற்றி பல படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு சின்ன பையனுக்கும் அவனுடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை சொல்லி இருக்கிறோம். இந்த கதையை இயக்குநர் வெற்றிமாறனிடம் ஒரு வருடத்திற்கு முன்பே சொல்லி இருக்கிறேன். அவரும் நன்றாக இருக்கிறது என சொன்னார். இந்த கதையை கேட்டதும் பிரசாந்த் பாண்டிராஜ், ‘அண்ணே இந்த கதை என்னுடைய குடும்பத்திலும் நடந்திருக்கிறது’ என்றார்.‌

இந்தப் படத்திற்கு முக்கியமான நடிகரே அந்த சின்னப் பையன் தான். அவர் யார்? என்று இயக்குநரிடம் கேட்டேன். அந்த கதாபாத்திரத்திற்காக தயாரிப்பாளர் மூன்று குழந்தை நட்சத்திரங்கள் நட்சத்திரங்களை பரிந்துரைத்தார். நான் ஒரு பத்து குழந்தை நட்சத்திரங்களை பரிந்துரைத்தேன். காரில் பயணிக்கும் போது எதிரில் தென்படும் குழந்தைகள் எல்லாம் போனில் போட்டோ எடுக்க தொடங்கினேன். படப்பிடிப்பும் தொடங்கியது. அதன் பிறகு இயக்குநர் மாஸ்டர் பிரகீத் சிவனை அறிமுகப்படுத்தினார். அவர் இயக்குநரின் மகன் என்பது அதன் பிறகு தான் தெரியும். அந்த பையனும் மிகச் சிறப்பாக நடித்தார். படப்பிடிப்பு தளத்தில் அவனின் சேட்டைகளை அனைவரும் ரசித்தோம். பல குடும்பங்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கும் அல்லது எதிர்காலத்தில் நடக்கும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *