கேங்கர்ஸ் – விமர்சனம்!

வின்னர் துவங்கி நகரம் வரை பல படங்களில் காமெடி கலாட்டாவை அரங்கேற்றிய சுந்தர் சி, வடிவேலு கூட்டணி 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்துள்ள படம் “கேங்கர்ஸ்”. அந்த பழைய காமெடி மேஜிக் மீண்டும் நிகழ்ந்ததா? கேங்கர்ஸ் படம் எப்படி இருந்தது என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் கட்டப்பஞ்சாயத்து, மது விற்பனை, சட்ட விரோத காரியங்கள் என ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அங்கிருந்த பள்ளி ஒன்றில் இருந்து மாணவி ஒருத்தியும் காணாமல் போகிறார். அதை பற்றி ரிப்போர்ட் ரெடி செய்ய மஃப்டியில் அந்த பள்ளிக்கு ஆசிரியராக ஒருவர் அனுப்பப்படுகிறார். ஒரு கட்டத்தில் அந்த பள்ளி ஆசிரியர்களான சுந்தர் சி, வடிவேலு, கேதரின் தெரஸா, பகவதி பெருமாள், பார் ஓனர் முனீஷ்காந்த், காளை ஆகியோர் சேர்ந்து வில்லன் பதுக்கி வைத்திருக்கும் 100 கோடி ரூபாய் கருப்பு பணத்தை கொள்ளையடிக்க ஒரு தனித்துவமான குழுவாக இணைகிறார்கள். மாட்டிக் கொள்ளாமல் அந்த பணத்தை கொள்ளை அடித்தார்களா? அந்த பணத்துக்கும் சுந்தர் சிக்கும் என்ன சம்பந்தம்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதிலும், எப்படி கொள்ளை அடித்தார்கள் என்பதை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடியும் கலந்து சொல்லியிருக்கும் படமே “கேங்கர்ஸ்”.

நாயகனாக சுந்தர் சி. அலட்டல் இல்லாத ஹீரோயிஸ நடிப்பு. வழக்கம் போல எதையும் சாதிக்கும் ஹீரோவாக, தெளிவான திட்டத்துடன் கெத்தான ஹீரோவாக வலம் வந்திருக்கிறார். வடிவேலு, பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு நீள காமெடி கதாபாத்திரத்தில் அதுவும் சுந்தர் சி படத்தில் திரும்பி வந்திருக்கிறார். படம் முழுக்க அவர் போடும் பல மாறுவேடங்கள் குறிப்பாக வயதான பெண் வேடம் என நம்மை குலுங்கி சிரிக்க வைக்கிறார். முதல் பாதி காமெடிகள் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது, ஆனால் இரண்டாம் பாதியில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

இவர்களை அடுத்து ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கேத்ரின் தெரசா, வாணி போஜன், பகவதி பெருமாள், முனிஷ்காந்த், ஹரீஷ் பெரடி, அருள் தாஸ், மைம் கோபி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். எல்லாருமே படத்தில் தங்கள் கதாபாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள். கேதரின் தெரஸாவிற்கு ஒரு கிளாமர் பாட்டு வைத்து தன்னுடைய கடைக்கோடி ரசிகர்களையும் திருப்திப்படுத்தி விட்டார் சுந்தர் சி.

இ. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு படத்துக்கு ஏற்றவாறு நன்றாகவே இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளையும் சிறப்பாக படம் பிடித்திருக்கிறது. சி. சத்யாவின் பின்னணி இசை படத்தின் வேகத்திற்கேற்ப பயணிக்கிறது. ஆனால் பாடல்கள் முந்தைய சுந்தர் சி படங்களை போல படத்துக்கு சிறப்பு சேர்க்கவில்லை.

முதல் பாதி வழக்கமான கமெர்சியல் பாணியில், கொஞ்சம் கிளிஷேவாக இருக்கிறது. காமெடியும் கொஞ்சம் சுமாராகவே இருக்கிறது. இரண்டாம் பாதியில் கதை வேகமெடுக்க ஆரம்பிக்கிறது, அத்துடன் காமெடியும் அடுத்த கட்டத்துக்கு செல்கிறது. இரண்டாம் பாதி முழுக்க சுந்தர் சி காமெடி ஜோனில் தெறிக்க விட்டிருக்கிறார். பழைய வடிவேலுவையும் ஆங்காங்கே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். இரண்டாம் பாதி கொள்ளை அடிக்கும் காட்சிகள், காமெடியும் படத்தை காப்பாற்றுகின்றன. பழைய வடிவேலுவை பார்க்க ஏங்கும் ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல விருந்து. நிச்சயம் குடும்பத்துடன் சென்று ஜாலியாக ரசித்து விட்டு வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *