டெஸ்ட் – விமர்சனம்!

தயாரிப்பாளராக பல ட்ரெண்ட்செட்டிங் படங்களையும், சிறந்த படங்களையும் தயாரித்து வழங்கிய சஷிகாந்த், இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் “டெஸ்ட்”. மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் நடிக்க, பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது. கிரிக்கெட் பின்னணியில் அதை சுற்றி பின்னப்பட்ட சில மனிதர்களின் வாழ்வை அலசியுள்ளது இந்த படம்.

படத்தின் கதைப்படி, இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் தமிழக வீரர் சித்தார்த். அவரை அணியில் இருந்து நீக்கி புதியவருக்கு வாய்ப்பு கொடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்ய, அதை விரும்பாத சித்தார்த், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி தனது திறமையை நிரூபித்து விட்டு ஓய்வு  பெற நினைக்கிறார். இன்னொரு புறம் விஞ்ஞானி மாதவன், தனது கண்டுபிடிப்பை அரசி அங்கீகரித்து அதை நடைமுறை படுத்த வேண்டும் என்று கோரி அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரது மனைவி நயன்தாரா. 10 ஆண்டுகளாக கணவர் மாதவனின் லட்சியத்திற்கு பக்கபலமாக இருக்கிறார். அவருக்கு குழந்தை இல்லாத ஏக்கம், குழந்தை பெற்றுக் கொள்ள IVF முறையில் கடைசி வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கிறார். இந்த மூவரின் நோக்கங்களும் நிறைவேறியதா? இவர்கள் மூவரையும் இணைக்கும் புள்ளி எது? என்பதை திரைக்கதையாக்கி சொல்லி இருக்கும் படம் தான் “டெஸ்ட்”.

மாதவன், சித்தார்த் இருவரில் யாரை நாயகன் என்று சொல்வது என்றே தெரியவில்லை. இருவருமே கதாபாத்திரங்களாக தங்கள் தேவை எதுவோ அதை நியாயம் என நினைத்து வாழ்கிறார்கள். அவர்களின் மனமாற்றம், அவர்களின் உளவியல் என நடிப்பிலும் அதை வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களுடன் நயன்தாரா. நடுத்தர வயது பெண்ணாக குழந்தைக்காக ஏங்கும் ஒரு பெண்ணாக மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இவர்களுடன் மீரா ஜாஸ்மின் ஒரு தாயாக நல்ல ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், சித்தார்த் பையனாக வரும் சிறுவன் என எல்லோருமே தங்கள் கதாபாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள சக்திஸ்ரீ கோபாலன் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அதன் இயல்பில் நன்றாகவே இருக்கிறது. படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொல்லப் போனால் அது விரஜ் சிங் கோஹில் ஒளிப்பதிவு தான். கிரிக்கெட் போட்டிகளை காட்சிப்படுத்திய விதமும், அதே டோனில் வெளியுலக வாழ்வை உணர்வுப்பூர்வமாக கொடுத்த விதமும் பாராட்டுக்குரியது.

தயாரிப்பாளர் சஷிகாந்த் எழுதி இயக்கியிருக்கும் முதல் படம் இது. ஆனால் முதல் படத்திலேயே இப்படி ஒரு கிரிக்கெட் பின்னணியில் படத்தை எடுத்திருப்பது ஆச்சர்யத்தை தருகிறது. ட்ராமாவாக இருந்து திரில்லராகவும் மாறும் விதமும், முடிவும் சற்றும் எதிர்பாராதது. முதன்மையாக நடித்துள்ள மூன்று கதாபாத்திரங்களின் மனபோராட்டங்களை கிரிக்கெட் விளையாட்டு பின்னணியில் திரைக்கதை அமைத்து ஒரு கிளாஸான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். முதல் படம் என்பதால் குறைகளை மறந்து விட்டு நிறைகளை பார்த்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *