‘அசுரன்’ படத்தைப் போன்ற இசை இந்த படத்தில் இருக்கும் – ஜிவி பிரகாஷ்!

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா , சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்ட இந்த விழாவில் படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட்டது. முன்னதாக இந்நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் ரியா ஷிபு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி உற்சாகமாக வரவேற்றார்.‌

பாடலாசிரியர் விவேக் பேசும்போது, ” தமிழில் மிகவும் முக்கியமான வார்த்தை ‘முடியாது’. இது எங்கெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதோ.. அங்கெல்லாம் ஒரு புதிய சரித்திரமான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கிறது. மனிதர்களால் விலங்குகளிடமிருந்து தப்பிக்க ‘முடியாது’ என்ற சூழல் இருந்தபோது.. தீயை கண்டுபிடித்தார்கள். அதேபோல் மனிதர்களால் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு விரைந்து செல்ல ‘முடியாது’ என்று சொன்னார்கள். அந்த தருணத்தில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் ஏதோ ஒரு மருத்துவர்.. ஒரு மனிதரிடம்.. உங்களால் இனி நடக்க ‘முடியாது’ என சொன்னபோது, அந்த தருணத்திலிருந்து விக்ரம் என்ற சரித்திரம் எழுதப்பட்டது. இதை நான் ஒரு தனி மனித புகழ்ச்சிக்காக சொல்லவில்லை. மனதளவிலும், உடலளவிலும் நம்மால் முடியாது என்று சோர்ந்து போகும் எல்லாருக்கும் .. ஏதோ ஒரு புள்ளியில் விக்ரம் சார் தான் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். அவருடைய கலை பயணத்தை பற்றி நான் குறிப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் கல்லூரியில் படித்த காலத்தில் ‘பிதாமகன்’ என்ற படத்தினை பார்த்து வியந்து போனேன். அப்போதே இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று நண்பர்களுடன் பேசி இருக்கிறோம். அன்றிலிருந்து ..இன்று அவருடன் இணைந்து பணியாற்று வரை நான் பயணித்திருக்கிறேன். ‘அமரன்’, ‘லக்கி பாஸ்கர்’, ‘வீர தீர‌ சூரன்’ ‘குட் பேட் அக்லி’ என ஒவ்வொரு படத்திற்கும் ஜீ. வி. பிரகாஷ் குமாருக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டே இருக்கலாம். அவர் ஒரு அறிவு ஜீவியாக இசை உலகம் பிரகாசமாக இருப்பதற்கு காரணமாக இருந்து கொண்டிருக்கிறார்.

பாடலாசிரியராக நான் பாடல்களை எழுதும் போது சில கவித்துவமான வரிகளை வேண்டாம் என மறுத்து விடுவார்கள். மொழி நடையை சற்று குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் இயக்குநர் அருண்குமாருடன் இணைந்து பணியாற்றும்போது உற்சாகம் பொங்கும். ‘ எங்கேயாவது அமர்ந்து தமிழன் இதை ரசிப்பான்..’ என்று சொல்லி, இலக்கிய தரமிக்க சொற்களை கேட்டு வாங்குவார். அவருடைய இயக்கத்தில் வெளியான ‘சித்தா’ படத்தில் ‘ஆறா மலை..’
‘நீங்கா நிழல்.. ‘ போன்ற சொற்களை பயன்படுத்தி இருக்கிறோம். இதற்கு நான் நன்றி சொல்வதை விட… தமிழ் உங்களுக்கு நன்றி சொல்லும். தமிழ் திரைப்பட உலகம் உங்களுக்கு நன்றி சொல்லும். மேலும் இங்கு வருகை தந்திருக்கும் எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும். ” என்றார்.

நடிகர் பிருத்வி பேசும்போது, “ஆந்திர திரையுலகில் பவன் கல்யாணுக்கு என்ன ஓப்பனிங் உள்ளதோ…! அதே அளவிற்கு இங்கு விக்ரமிற்கும் ஓப்பனிங் உள்ளது.
எஸ். ஜே. சூர்யாவிற்கு நடிப்பை விட அவரது குரல் கணீர் என்று வித்தியாசமாக இருக்கும். அதற்கும் தனி ரசிகர்கள் உண்டு. படப்பிடிப்பு தளத்தில் நடிகை துஷாரா விஜயனின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது” என்றார்.

நடிகை துஷாரா விஜயன் பேசும்போது, “மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய திரையுலக பயணத்தில் ‘ வீர தீர சூரன் ‘மிக முக்கியமான படமாக இருக்கும். இது போன்ற திறமையான நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியாது. எனக்கு கிடைத்திருக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய மேடை என நினைக்கிறேன். விக்ரம் சார் நடித்த படங்களை பார்த்து இன்ஸ்பயர் ஆகியிருக்கிறேன். சினிமாவுக்காக அவருடைய அர்ப்பணிப்பு என்பது போற்றத்தக்கது. அவருடைய உழைப்பு… அனைவருக்கும் மோட்டிவேஷனலாக இருக்கும். என் வாழ்க்கைக்கு ஒரு காதல் பாடலை அமைத்துக் கொடுத்திருக்கிறார் ஜீ.வி. பிரகாஷ் குமார். எஸ். ஜே. சூர்யாவுடன் நான் நடிக்கும் இரண்டாவது படம். இன்னும் நிறைய படங்களில் அவருடன் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் பேசும்போது, “சீயான் விக்ரமுடன் நான் இணைந்து பணியாற்றும் நான்காவது படம் இது. ‘தெய்வத்திருமகள்’, ‘தாண்டவம்’, ‘தங்கலான் ‘, ‘வீரதீர சூரன்’ இந்த நான்கு படங்களும் அழுத்தமான கதையம்சம் உள்ள படங்கள். இந்த நான்கு படங்களும் அவருக்கும், எனக்கும் சவாலானதாக இருந்தது. அவருடன் இணைந்து பணியாற்றும்போது சவாலாக இருக்கும் என்பதால் சந்தோஷத்துடன் பணியாற்றுவேன். அருண்குமாருடன் முதல் முறையாக இணைந்திருக்கிறேன். மிகவும் திறமைசாலி. ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நானும், எஸ். ஜே. சூர்யாவும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து இந்த படத்திலும் இணைந்திருக்கிறோம். துஷாரா மற்றும் சுராஜ் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.

இது ஒரு டார்க்கான பிலிம். இந்த படத்திற்காக ‘அசுரன்’ படத்தின் தொனியில் பின்னணி இசை அமைத்திருக்கிறேன். மிகவும் சவாலானதாக இருந்தது. ஒவ்வொரு மியூசிக்கல் ஸ்கோரும் மூன்று நிமிடம் நான்கு நிமிடம் என தொடர்ந்து இருக்கும். படம் பார்க்கும்போது இந்த பின்னணி இசை உங்களுக்கு பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் ‘வீரதீர சூரன்’ படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *