இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ தண்டேல் ‘எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் வரும் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. கார்த்தி, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பாராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
அப்போது பேசிய தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசும்போது, “நான் சென்னையில் தான் படித்தேன். பிழைப்பிற்காகத் தான் ஹைதராபாத் சென்றேன். சென்னை அரசு கலை கல்லூரியில் தான் பட்டப் படிப்பினை படித்தேன். அதன் பிறகு சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பினை படிக்கத் தொடங்கினேன். இரண்டு வருடத்திற்கு பிறகு தொடர்ந்து படிக்காமல் வெளியேறி விட்டேன்.
இந்தத் திரைப்படத்தில் நாக சைதன்யா- சாய் பல்லவி இருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். தரமான படைப்பாக ‘தண்டேல்’ உருவாகி இருக்கிறது.
இயக்குநர் சந்து அற்புதமான திறமைசாலி. நேர்த்தியாக உழைத்து தண்டேலை உருவாக்கி இருக்கிறார். கதை சிறியது தான். ஆனால் அதனை அவர் வழங்கிய விதம் சிறப்பானது. இந்தப் படத்தின் கதைக்காக 20 பேரிடம் ரைட்ஸ் வாங்கி இருக்கிறோம். அந்த 20 பேரும் பாகிஸ்தானுக்கு சென்று அங்குள்ள சிறையில் கைதியாக இருந்து அதன் பிறகு விடுதலையானவர்கள். அவர்களின் கதை இது. இயக்குநர் அதனை இரண்டு மணி நேர கதையாக விவரித்திருக்கிறார். இந்த கதையை அற்புதமான படைப்பாக உருவாக்கியதற்காக இயக்குநர் சந்துவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் எனக்கு மகன் போல. அவரை சிறிய வயதில் இருந்தே எனக்கு தெரியும். அவரிடம் இங்கிருந்தே ஒரு கேள்வியை கேட்கிறேன். எப்படிடா இப்படி 25 வருடமாக தொடர்ந்து ஹிட் பாடல்கள் வழங்கிக் கொண்டிருக்கிறாய்? அவருடைய அப்பா எனக்கு நல்ல நண்பர். கருணாகரன் இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். படத்தில் அவருடைய நடிப்பு பேசப்படும். இந்தத் திரைப்படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் என் நினைவுக்கு வந்தவர் எஸ். ஆர். பிரபு மட்டும் தான். அவர் இந்த திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதால் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
நடிகர் கார்த்தி பேசுகையில், “இது எனக்கு முக்கியமான மேடை. தெலுங்கு திரையுலகிலிருந்து எனக்கு ஏராளமான அன்பு கிடைத்திருக்கிறது. அந்த அன்பை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்பாக இதனை கருதுகிறேன். இங்கு வந்த பிறகுதான் நாக சைதன்யா என்னிடம், இந்த கதை 2018 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவம் என்று சொன்னார். கேட்பதற்கு இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. நம் ஊரில் மீன் பிடிக்கும் மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் குஜராத்திற்குச் சென்று படகில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள் என்றார். பிறகு அங்கிருந்து எப்படி தப்பித்து வந்தார்கள் என்பதை ஒரு அழகான காதல் கதையாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.
எவ்வளவு பெரிய திரில்லாக இருந்தாலும் அது டைட்டானிக்காக இருந்தாலும் அதற்குள் ஒரு லவ் ஸ்டோரி தேவைப்படுகிறது. அந்த லவ் தான் மனதில் நிற்கிறது. 20 பேரிடம் ரைட்ஸ் வாங்கி அதை ஒரு அழகான காதல் கதையாக உருவாக்கி வழங்கியிருக்கிறார்கள் என்றால் இந்த கதை மீது தயாரிப்பாளர் எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும். இந்தப் படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாகவே இந்த படத்தை இந்தியா முழுவதும் நம்பிக்கையுடன் வெளியிடுகிறார்கள். இயக்குநர் சந்து மொண்டேட்டி இதற்கு முன் இயக்கிய படங்களும் வெற்றி படங்கள் தான். கடல் பின்னணியில் நிறைய படங்களை பார்த்திருக்கிறோம். தற்போது மீண்டும் ஒரு புதிய அனுபவத்திற்கு தயாராகி இருக்கிறோம்.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் திரை உலகில் பீஷ்மரை போன்றவர். திரை உலகிற்கு தயாரிப்பாளர்கள் வருவார்கள். செல்வார்கள். நீண்ட காலம் தாக்குப் பிடிப்பது கடினம். பெரிய பெரிய நிறுவனங்களே படத் தயாரிப்பு வேண்டாம் என நிறுத்தி விட்டார்கள். இந்த சூழலில் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார் அல்லு அரவிந்த். அவர் சினிமாவில் படங்களை வியாபார நுணுக்கங்களுடன் தயாரிக்கிறார். அவர் தேவி ஸ்ரீ பிரசாத் பார்த்து எப்படிடா இத்தனை ஆண்டுகளாக ஹிட்டு கொடுக்கிறாய்? என கேட்கிறார். அதை போல் நான் அவரைப் பார்த்து, எப்படி சார் தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்கிறேன். அவர் வேறு வேறு ஆட்களுடன்… வேறு வேறு கூட்டணியுடன்… தொடர்ந்து படங்களை பெரு விருப்பத்துடன் தயாரித்து வருகிறார். எல்லா மொழிகளிலும் படங்களை தயாரித்திருக்கிறார். சினிமா மீதான அவருடைய பற்று எனக்கு இன்று வரை ஆச்சரியத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் படங்களை தெலுங்கு திரையுலகிற்கு எடுத்துச்சென்று விளம்பரப்படுத்தும் போது அவர் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பார். ஒரு தயாரிப்பாளர் என்றால் எப்படி இருக்க வேண்டும்.. அவருடைய படத்தை எவ்வளவு நேசிக்க வேண்டும்.. படத்தை எப்படி கொண்டு மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் …நடிகர் நடிகைகளை எப்படி பாதுகாக்க வேண்டும்.. படத்தை தயாரிக்கத் தொடங்க தொடங்கியதில் இருந்து அந்தத் திரைப்படத்தை ரசிகர்களுக்காக திரையரங்கத்திற்கு கொண்டு சேர்க்கும் வரை எப்படி உழைக்க வேண்டும் … என்பதனை அவரைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். அவரை எனக்குத் தெரியும் என்பதிலேயே நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக இந்தத் தருணத்தில் அவருக்கு மனதார வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாகவே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
கருணாகரன் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். அவரும் ஒரு அற்புதமான நடிகர். அவர் தெலுங்கிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆடுகளம் நரேன் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவருக்கு தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களை வழங்கி சீரியசான நடிகராக்கிவிட்டார்கள். ஆனால் அவர் அற்புதமாக காமெடியும் செய்வார். ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் காமெடியில் கலக்கியிருப்பார்.
நான் துருக்கி நாட்டிற்கு சென்றிருந்தபோது அங்கும் டிஎஸ்பி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. இதுதான் அவருக்கு கிடைத்திருக்கும் புகழ். அவர் எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பார். அவருடைய ஸ்டுடியோவுக்கு சென்றால்.. இசையை பற்றி மட்டுமே பேசிக் கொண்டே இருப்பார். அவர் இந்த நாட்டிற்கு சொந்தம். அவை எப்போதும் எனர்ஜியுடன் இருக்கிறார். இதற்காகவே நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். இந்தப் படத்தின் பாடல்களும் அற்புதமாக இருக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா இசையமைப்பாளர்களுக்கும் காதல் கதை கிடைத்து விட்டால் போதும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவார்கள். இந்த திரைப்படத்திலும் டிஎஸ்பி தன் திறமையை வெளிப்படுத்தி அனைத்து பாடல்களையும் ஹிட் ஆக்கி இருக்கிறார்.
சாய் பல்லவி மிகவும் ஸ்பெஷல் ஆனவர். அவர் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். காதலிப்பதாகட்டும்.. அதில் காதலை கொட்டி தீர்ப்பார். இதனாலேயே இளைஞர்கள் எல்லாம் உங்கள் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். நடனம் சொல்லவே வேண்டாம். வலியை கடத்துவதாக இருந்தாலும் அதிலும் முத்திரை பதிக்கிறீர்கள். வயதிற்கு மீறிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அனுபவமும் வித்தியாசமாக இருக்கிறது.
அமரன் படம் பார்த்துவிட்டு உங்களிடம் பேசியிருக்கிறேன். ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியின் தியாகம் என்ன? என்று பொதுமக்களுக்கு தெரியாது. அதை அமரன் படத்தில் நீங்கள் விவரித்திருந்த விதம் அவர்களின் வலியை எங்களுக்கு புரிய வைத்தது.
நாக சைதன்யா அவருடைய தாத்தா எனக்கு தெரியும். அவரைத் தொடர்ந்து நாகார்ஜுனாவை தெரியும். அவர் ‘இதயத்தை திருடாதே’ படத்தை பார்த்த பிறகு.. அவரைப் போல் டிரஸ் செய்து கொள்வது.. அதேபோல் ஓடுவது.
என பல முயற்சிகளை பலரும் செய்தார்கள். ஆனால் அவர் செய்த ஸ்டைலில் யாராலும் செய்ய முடியவில்லை. அவரைப் போல் அழகாக பேசவும் தெரியாது. அவருடன் தெலுங்கு திரைப்படத்தில் பணியாற்றிருக்கிறேன்.
நான் அங்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்வார். அவ்வளவு அக்கறையுடன் பார்த்துக் கொள்வார். அன்பை பொழிவதில் தன்னிகரற்றவர். அவருடன் பணியாற்றி 10 வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் தற்போது நான் என்ன படம் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து வைத்திருப்பார். அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று சொல்வார். படம் பார்த்து பிடித்து விட்டால்.. உடனடியாக ட்வீட் செய்வார். இது போல் எனக்காக எப்போதும் அன்பு காட்டி வரும் அவருக்கு நான் திருப்பி என்ன செய்வதென்று தெரியவில்லை.
நாக சைதன்யாவை முதன் முதலில் திரையில் பார்த்த போது கூச்ச உணர்வு உள்ள ஒரு இளைஞரை அழுத்தம் கொடுத்து நடிக்க வைக்கிறார்களோ..! என தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் ஒரு அப்பாவித்தனம் தெரியும். அந்த அப்பாவித்தனத்தை தான் ஏராளமான பெண்கள் ரசிக்கிறார்கள். அவருடைய அப்பாவித்தனமும் பிடித்தது. அவருடைய அப்பாவையும் பிடித்தது. அவருடைய தாத்தாவையும் பிடித்தது.
நாக சைதன்யா கடுமையாக உழைப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்தில் அவருடைய வளர்ச்சி தெரிகிறது. இந்தத் திரைப்படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் தன் உடலமைப்பையும் மாற்றி நடித்திருக்கிறார். உழைப்பு ஒரு போதும் வீண் போகாது. உங்களுடைய கடும் உழைப்புக்கு இந்த படம் சரியான பரிசை வழங்கும். இந்தப் படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
நடிகர் நாக சைதன்யா பேசுகையில், ” ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷலானது. சென்னை ரசிகர்களின் அன்பிற்காகவும், ஆதரவிற்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருப்பேன்.
இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டதற்காக நடிகர் கார்த்திக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நடிப்பில் வெளியான ‘மெய்யழகன்’ படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறேன். அதில் அவருடைய உணர்வுபூர்வமான நடிப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன். அப்பா என்னிடம் எப்போதும் சொல்வார். சென்னைக்கு செல்கிறாய் என்றால் சொல். கார்த்திக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறேன் என்று’. அந்த அளவிற்கு கார்த்தி எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர்.
இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை தொழில் ரீதியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். நீங்களும் இங்கு வருகை தந்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஹைதராபாத்திற்கு வருகை தந்து என்னை சந்தித்து கதை சொல்லி கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்ததற்கும் நன்றி. கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. உங்களுடைய இயக்கத்தில் வெளியாகும் ‘ரெட்ரோ’ படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
தண்டேல் படத்தின் தொடக்கம் என்பது, இயங்க சந்து என்னை சந்தித்து உண்மை சம்பவத்தை ஒரு சின்ன ஐடியாவாக டாக்குமென்டரி ஸ்டைலில் சொன்னார். ஸ்ரீகாகுளம் எனும் கிராமத்தில் இருந்து குஜராத்திற்கு சென்று அதன் பிறகு ஒன்றரை வருஷம் பாகிஸ்தானுக்கு சென்று திரும்பவும் வருவது.. என ஒரு பெரிய நீண்ட பயணம் இதில் இருக்கிறது. அந்த உண்மைக் கதையை கேட்டவுடன் ஒரு நடிகராக நான் ஆச்சரியமடைந்தேன். அதன் பிறகு ஸ்ரீகாகுளம் சென்று அங்குள்ள கிராமத்தில் வசிக்கும் மீனவர்களிடத்தில் பழகி அவர்களுடைய வாழ்வியல் முறையை தெரிந்து கொண்டேன். அந்தப் பயணம் மறக்க முடியாதது . அந்த அனுபவமும் மறக்க முடியாதது.
இது போன்ற வாய்ப்பு மிகவும் அரிதாகத்தான் கிடைக்கும். இதற்காக என்னை நான் மாற்றி க் கொண்டேன். இது போன்ற கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்பதால் இதனை உருவாக்கி இருக்கிறோம். ஸ்ரீகாக்குளம் மீனவர்கள் தான் இப்படத்தின் உண்மையான நாயகர்கள்.
தயாரிப்பாளர்கள் பன்னி வாஸ் மற்றும் அல்லு அரவிந்த் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய மூன்றாவது படமான 100% லவ் படத்திற்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் அல்லு அரவிந்துடன் இணைந்து இருக்கிறேன். இந்த படமும் பெரிய வெற்றியை பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். ஒவ்வொரு லவ் ஸ்டோரி திரைப்படத்திலும் பாடல்கள் ஹிட்டாக அமைய வேண்டும். இதிலும் ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் எல்லா பாடல்களையும் ஹிட்டாக்கி இருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்த படத்திற்கு பாடல்களுக்கு மட்டும் இசையமைக்காமல் அந்தப் பாடல்களை காட்சிப்படுத்தும் போதும் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து உற்சாகப்படுத்தினார்.
சாய் பல்லவி அனைவரும் சொல்வது போல் எனக்கும் அவர் ஸ்பெஷலானவர். ஒவ்வொரு நடிகரும், ஒவ்வொரு இயக்குநரும், ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் உங்களைப் பற்றி பேசுவார்கள். அனைவரும் உங்களுடைய ரசிகர்கள் தான். உங்களுடன் பணியாற்றுவது இனிமையான அனுபவம்.
இந்தத் திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தமிழில் வெளியிடுகிறார். இதற்காக அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரும் நானும் பல கதைகளை பேசி இருக்கிறோம். விரைவில் இணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன்” என்றார்.